Monday, December 29, 2008

கறுப்புத் துணி மூடுகிற நகரம்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________

பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.
சனங்கள் என்ன செய்ய முடியும்?

முதுகுகள் எங்கும்
துவக்குகள் குத்தயபடியிருக்கின்றன.
விலக்க முடியாத பேரணியில்
சொல்லித்தரப்பட்ட வாசகங்கள்
முழுவதுமாய்
நமக்கு எதிராய்
நமது வாயில் ஒலிக்கின்றன.

திணிக்கப்பட்டிருக்கிற கொடியின்
பற்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கிற தேசத்தின் வெற்றிக்கு
நமது சகோதரர்களாலே
பரணியெழுதப்படுகிறது.
சனங்கள் தமது சனங்களுக்கு
எதிராய் கிளப்பப்படுகின்றனர்.

துப்பாக்கி எல்லாவற்றையும்
ஆண்டு கொண்டிருக்கிறது
அதிகாரம் எல்லாவற்றையும்
மாற்றி அமைக்கிறது.

ஒடுங்குகிற சனங்களின்
வார்த்தைகள் நசுக்கப்படுவதற்கு
சனங்களையே திரட்டப்படுகிற நகரத்தில்
எதிரியின் அதிகார மொழிப்பாடல்
காதை கிழித்தொலிக்கிறது.

நாம் பாடலின் அர்த்தத்தை
புரியாதவர்களாயிருக்கிறோம்.
கறுப்புத்துணிகளால்
மூடுண்டு வாழுகிற நகரத்தின்
தலைகள் ஆடுகிறபோது
துப்பாக்கிகளே பேசுகின்றன.

சொற்களற்ற நகரத்தில்
மனிதர்கள் துண்டிக்கப்பட்டு
திரட்டப்படுகின்றனர்.

பழாய்ப்போன சனங்களின்
கையில் திணிப்பதையெல்லாம்
பார்வையிடுவதற்கு முன்பே
படம் பிடிக்கப்படுகின்றனர்.
எல்லோருடைய கால்களும் உருகுகிறது.

கறுப்புத்துணி தலைகளை தின்று விடுகிறது.
முண்டங்கள் திரியும் வீதியில்
அடிமைக்கு வலுவான
வாசங்கள் தொங்குகின்றன.

அதிகாரம் தனது வெற்றியை
திணித்துவிட்டு
அடிமையை கட்டாயம் செய்து தருகிறது.
வீதியை கடக்கிற அவகாசத்தில்
விடுதலை மறக்கிறது
நாடு மறக்கிறது
கறுத்த நகரத்தின் சந்தையுடன்
வாழ்வு முடிகிறது.

நமது கண்களை நாமே
பிடுங்குவதைப்போலவும்,
நமது உடலை நாமே
கூறிடுவதைப்போலவும்
அதிகாரம் எல்லாவற்றையும்
எல்லாரையும் பிரித்தாழுகிறது.
பாம்புகள் வழிகாட்டுகிற வீதியில்
தொன்மையான சொற்கள் பலியிடப்பட
முகங்களை குத்துகிற வாசங்கள்
எழுதித்தரப்பட்டிருக்கின்றன.

எனது பாழாய்போன சனங்களே
துவக்குள் சுட முடியாத
என்றைக்குமான எல்லாவற்றுக்குமான மனது
விலக்க முடியாத பேரணியில்
மிதிபடுவதை கண்டு செல்லுங்கள்.

கடைசியில் உணவில் விஷமிருக்கிறது
படுக்கை சுடலையாகிறது.
எழுதித்தரப்பட்ட வாசங்கள்
தூக்கத்தில் கொலை செய்துவிட்டு போகிறது.

பழாய்ப்போன சனங்களுக்கு எதிராகவும்
முகம் சுழிக்க வேண்டியிருக்கிறது.
அதிகாரம் எல்லாவற்றையும்
தனக்கு ஏற்றமாதிரி மாற்றியமைக்கிறது.
சனங்கள் என்ன செய்ய முடியும்?
--------------------------------------------------------------------
28.12.2008. யாழ்ப்பாணத்தில் மக்கள் சிலர்
இலங்கை அரசின் வன்னி இராணுவ நடவடிக்கைகு ஆதரவாக பேரணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Friday, December 26, 2008

என்னைத் தொடருகிற மேலுமொரு இரவு

-------------------------------------------------
தீபச்செல்வன்
___________________________________

குற்றம் சாட்டப்பட்டிருக்கிற இரவு
என்னை வெளியில் விடுகிறது.
பாதியில் திரும்பி விடுகிற தெருவில்
என்னை யாரோ தேடிவர
குறையில் கீழே போட்டு நசித்த
சிகரட்டை மீட்டுச் செல்கிறார்கள்.

பயங்கரம் மிகுந்த இரவில்
நான் போர்த்தியிருக்கிற
போர்வையின் வெளியில்
யாரோ உலவித்திரிகிறார்கள்.

அறைக்கு மேலாய் பறக்கிற
ஹெலிகாப்டர்
கனவில் புகுந்து
ஒரு குடியிருப்பை தாக்குகிறது
தூக்கம் போராகிவிட
பகலை துவக்கு தேடித்திரிகிறது.

தடைசெய்யப்பட்ட சொற்களை
எழுத தொடங்கிய மேசையில் அதனுடன்
பேனையும் தாளும்
என்னை விட்டு விலகுகிறது.

இரவு ஒரு முகமூடியை அணிந்து
மிரட்ட அதனிடையில்
கறுத்தத் துணியால் மூடிய மோட்டார் சைக்கிள்கள்;
சுற்றிக் கொண்டிருக்கின்றன.
தெருக்கள் சுருங்கிப்போயின.
குறைச் சிகரட்டோடு வருகிற
கடித்தில் சவப்பெட்டி வரையப்பட்டிருந்தது
புத்தக மேசை கடலில் குதித்துவிடுகிறது
மரணம் பற்றி வழங்கப்பட்ட
தீர்வை குறித்து
என்னால் எதையும் கூறமுடியவில்லை.

கதவு பயத்துடனிருந்தது
பயம் விளைவித்த சொற்களை
துவக்கு பயமுறுத்தியது.
சொற்களால் எல்லாவற்றையும்
கடக்க முடிகிறது.

இலக்கங்கள் அச்சுறுத்துகிற
தொலைபேசியில்
நான் தொடர்ந்து பேசுகிறேன்.
துவக்கின் அதிகாரம் சிரிக்கிற சத்தத்தில்
வழமையாக
விலகிச் செல்கிற தெருவில்
தவறவிடப்பட்டவனைப் போலிருக்க
இந்தக் சொற்களுடன்
மேலுமொரு பகல் முடிந்து போகிறது.

தெருவில் சொற்கள் தனித்திருக்கின்றன
இறந்த பகலை மேலுமொரு இரவு தொடருகிறது
-------------------------------------------------------------------------
நன்றி: விழிப்புணர்வு


Monday, December 1, 2008

வற்றாத காலையில் வருகிற அச்சுறுத்தல்

-----------------------------------------------------------------------------கவிதை:தீபச்செல்வன்
____________________________________
01.
பேய் ஓட்டிவருகிற
மோட்டார் சைக்கிள் என்னை மோதுவதை
முதலில் கனவில் கண்டேன்.

தூக்கம் குழம்பிய காலையில்
துப்பாக்கியால்
எழுதப்பட்ட சுவரொட்டி
அறையின் கதவினை
தட்டிக்கொண்டிருந்தது.

அச்சுறுத்தல் பட்ட காலையில்
தேனீரில் குருதி கலந்திருக்க
குளியலறையில்
பேய்கள் விலகிச் செல்கின்றன.

பெயர் குறிப்பிடப்பட்ட
பதினான்கு பேரும்
செல்லுகிற தெருவில்
நிறையப்பேர்களிடையில்
தனிமை எதிர் வந்தது
எல்லோரையும் தேடி
துவக்கு வெறி பிடித்தலைகிறது.

யாரும் பக்கத்தில்லாத நேரத்தில்
பின்னால் ஒருவன்
நின்று கரைய
முன்னால் நிறையப்பேர்
குதிக்கிறார்கள்
கண்கள் பெருத்தலைகின்றன.

தெரு குறித்து நிறைய
ஆசையிருக்கிறது
சுருங்கிய பகலில்
கத்திகள் கூர்மையுடன்
பசித்திருக்கிற கரைகளிலிருந்து
சைக்கிள் வெட்டுப்படுகின்றன.

பேய்கள் ஒட்டுகிற
மோட்டார் சைக்கிள் என்னை
பின் தொடருகிற
மாலைக்கும் இரவுக்கும்
இடையில்
நான் மறுநாட் கலையை இழந்தேன்.

இன்று அச்சுறுத்தப்பட்ட காலையாகி
இருளத்தொடங்கியது.

தூக்கம் கலைத்து
கொலை செய்த சுவரொட்டி
என்னை தின்றபடி
நகரமெங்கும் திரிகிறது.
---------0---------------------------0-------------------------------------------

02.
உன்னையும் தங்கச்சியையும்
எல்லாவற்றையும்
உருவி எடுத்த வெள்ளம்
அதே காலையில் என்னையும்
மூழ்கடிக்க காத்திருந்தது.

நெத்தலி ஆறு தருமபுரம் ஆறாகி
உனது தடிகளான வீட்டை
பறித்துச் செல்கிறது.

எல்லோருடைய கண்ணீரும் குருதியும்
கரைந்து கொண்டிருக்கிற
கனவுகள்
ஆறுகளை மீறி எழுந்தன.

நீ வெள்ளத்தின் துயரங்களை
கூறிக்கொண்டே இருக்கிறாய்.
என்னை விழுங்க காத்திருக்கிற
வெள்ளம் குறித்து நான் எதைப்பேசுவது?

அகதிகளை மேலும் அகதிகளாக்கும்
மழையில் நான் அலைந்தேன்
எனது நகரத் தெருவின் இடைகளில்
உன்னையும் தங்கச்சியையும்
கொட்டும் அடைமழையில் கண்டேன்.

பெருமழையில் மோதுகிற
போராளிகள் உன்னை மீட்க
வெள்ளத்தினிடையில்
எனது முகம் கண்டாய்
உனது கண்ணீரும் அழுகையும்
வெள்ளமாகி
படிகளால் ஏறி
எனது அறையில் நுழைந்தது.

போர் அலைக்கிற தெருவில்
பெய்த மழையும் சூழ்ந்த வெள்ளமும்
உன்னை அச்சுறுத்த
'இறுதி' என மிரட்டுகிற
மரணப் பட்டியலில் நான் தெரிவு செய்யப்பட்டிருப்பதை
எப்படி நான் உன்னிடம் சொல்லுவேன்?

நமக்கிடையில்
வற்றாத வெள்ளம் அடித்துப்பாந்து சூழந்திருக்க
பெருமழை தொடர்ந்து பெய்கிறது
அடிமைப்படுத்த முனைகிற
அதிகாரம் மற்றும் அதன் வியூகங்கள் போல.
-------0----------------------0-------------------------------------------------
24.11.2008 "இறுதி எச்சரிக்கை" என்கிறது மரண அச்சுறுத்தல் நோட்டீஸ்

Friday, November 7, 2008

சில சொற்கள் குரல்கள் மற்றும் முகங்கள்


-----------------------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
____________________________________

கேட்க முடியாத செய்தியுடன்
பேசமுடியாத சொற்களும்
பார்க்க முடியாத முகங்களும்
பழைய வானொலிப்பெட்டியினுள்
கொட்டி வைக்கப்பட்டிருந்தன.
---0---0----0-----------

01. சொற்கள் மறைக்கப்பட்ட பத்திரிகை

சொற்களை மறைத்து
வெளி வந்த பத்திரிகை
இடையில் கிழித்தெரியப்படுகிறது
பத்திரிகையின் மொழி ஊமையாக
கண்களற்றவர் வாசிக்கிறார்
ஊமைகளின் பத்திரிகை
வெளிவர மறுத்துவிடுகிறது
எடுத்துச்சென்றவரின்
முகம்
பின் பக்கம் பதிந்திருக்க
வனங்கள் அழிந்த மணம்
முன்பக்கத்தில் பெருக்கெடுக்கிறது
பயங்கரக்கோடுகள் நிறைந்த
ஒரு பத்திரிகை
விடியமுடியாத காலையில்
வந்து எழுப்பிவிட்டு
வீடு துடிக்கிற செய்திகளை
நிரப்பிவிடுகிறது.
---0---0----0-----------

02.குரல்கள் அடங்கிய வானொலி

பற்றிகள் தடைசெய்யப்பட்ட
வானொலியின்
அன்றனா உடைந்துவிட்டது
இருட்டு வாசிக்கும் செய்தியிலிருந்து
பேய்கள் வெளியேறுகின்றன
அலைவரிசைகள் குழம்பி வழிய
வானொலியின் கோபுரம்
பிடுங்கி எறியப்படுகிறது
தீடிரென நின்றுவிடுகிற செய்தியை
கேட்டுக்கொண்டிருக்க
வானொலி செத்துவிடுகிறது
பூட்டிவிட்ட
வானொலியிலிருந்து
அவலக்குரல் ஒலித்தபடியிருக்கிறது.
---0---0----0-----------

03.குருதி வெளிவரும் தொலைக்காட்சி

குழந்தைகளின் நிகழ்ச்சியை
வேட்டி குழப்பி விடுகிறது
புற்கள் முளைத்த தொலைக்காட்சி
பேய்கள் இருந்து பேசுகின்றன
வனங்களை தின்று
மண்ணைப் பிளந்து
போகும் நடனங்களை
காண்பிக்கின்றன
அழும் முகங்களை காய்ச்சி
கூழ் குடிக்கும் நிகழ்வுகளை ஓளிபரப்பின
அழிவின் உக்கிரம் கொண்டு
மிரட்டுகிறது விளம்பரம்
தலைகளை செய்தி கணக்கெடுக்கிறது
வனங்களை அழிப்பதை
நேரடியாக ஒளிபரப்புகிறது
இரத்தம் தொடர்ந்து
வுடிகிற
தொலைக்காட்சி சின்னத்திற்கு கீழாய்
அழும் குழந்தையின் முகம்
தொங்குகிறது
அலைவரிசைகளை பிடித்து
தின்று ஏப்பமிடுகிற
ஒரேஒரு தொலைக்காட்சியின்
முன்னால்
ஒரு கிழவன் கொலைசெய்யப்படுகிறான்
கண்களை பிடுங்கி விட்டு
மிக நீண்டு செல்கிற இரவென்றில்
பிசாசுகளின் கதைகளை
ஒளிபரப்பி மிரட்ட
வெளிவருகிற பயங்கரம்
வீட்டை நிரப்புகிறது.
---0---0----0-----------

04.பேய்முகங்களை பரப்புகிற இணையத்தளம்

மிகவும் அவசரமாக வெளியிடப்பிட்ட
தணிக்கையூட்டிய செய்திகளை
பிரதியெடுக்கப்படுகின்றன
பேய்முக இணையத்தளத்திடமிருந்து
முகம் இழந்த கிராமத்தின்
குருதி வடிய படங்களை
அவசரமாக பதிவேற்றுகிறது
எழுத்துக்களை விழுங்கி
விசைப்பலகைகளில்
முட்கள் முளைத்திருக்க
தொடர்பை இழந்து
துண்டிக்கப்பட்டு விடுகிற
தனியாள் தளங்கள்
துடித்துக்டிகாண்டிருக்க
முன்னுக்கு வந்து நிற்கிறது
பாதுகாப்பு இணையத்தளம்
அழிவுக்கான செய்திகளை அச்சேற்றிவிட்டு
மறுமொழிகளின் முன்பாக
துப்பாக்கியை நீட்டுகிறது
சிரிக்கும் குழந்தையின்
முகம் விரிந்த தளத்தை
மெல்ல தின்றுவிட்டு
தெப்பியை அணிந்து
தலையை குனிந்திருக்கிறது
---0---0----0-----------

கேட்க முடியாத செய்தியுடன்
பேசமுடியாத சொற்களும்
பார்க்க முடியாத முகங்களும்
பழைய வானொலிப்பெட்டியினுள்
கொட்டி வைக்கப்பட்டிருந்தன.

------------------------------------------------------------
07.11.2008

Wednesday, October 15, 2008

திருப்பாற்கடலில் மூழ்கிய ஆழ்வார்

-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

சுற்றிவளைக்கப்பட்ட கோயில் வேலிகளுக்கும்
கோயிலுக்குமிடையில்
திரிகிற கிழவனின் புலம்பலும்
பஜனையோடு சேர்ந்து ஒலித்தெழுகிறது.

தீச்சட்டிகளை நீ சுமந்தபடி வருகிறாய்
தீயினை மிதித்தெழுந்து செல்கையில்
உள்வீதிகள் எரிந்து கருகின
உனது தலையில் எரிகிற தீ முகத்தில் வழிகிறது.

சிலுவையைப்போல மிகவும் பாரமான
காவடியைச் சுமந்தபடி நான் வந்து சேர்ந்தேன்.
சிறகு உடைக்கப்பட்டவன்
பறவைக்காவடியில் தொங்குகிறான்
இந்த வருடமும்
ஆழ்வார் கோயிலைவிட்டு வெளியில் வந்தார்.

திருப்பாற்க்கடலை படைகள்
சூழ்ந்து கொண்டன.
அவதாரங்களின் தோல்வியுடன்
அனுமதிக்கப்பட்டவர்கள் மட்டும்
ஆழ்வாரை சுமந்து சென்றனர்.

கதைகளில் எழுதப்பட்ட அசுரர்கள்
ஆழ்வாரை சோதனையிட கீழே இறக்கினர்
அழிக்கப்பட்டதாய் கூறப்பட்ட
அசுரர்கள் சப்பாத்துக்களுடன்
துப்பக்கிளால் குறிபார்த்தபடி
திருப்பாற்கடலில் நின்றனர்.

அவதாரங்கள் முடிந்துபோக
இறுகி சிலையாகிய ஆழ்வாரை
அந்தக்கிழவன் ஏசியபடி கும்பிடுகிறான்
கிழவன் திருப்பாற்க்கடலில்
தீர்த்தமாடுகிற ஆழ்வாரை பார்ப்பதற்காய்
கெஞ்சித்தோற்றுப்போகையில்
ஆழ்வார் திருப்பாற்கடலை அண்மித்தார்.

திருப்பாற்கடல் குருதியால் நிரம்பியிருந்தது.
உன்னைக் காணவில்லை.
நீ சுமந்த தீச்சட்டியின் நெருப்புக்கட்டிகள் கிடந்தன.
எனது காவடி
ஒரு மரத்தின்கீழ் தனியே கிடந்தது.

ஆழ்வார் கோயிலுக்குத் திரும்பவில்லை.
கிழவனும் ஆழ்வாருக்காய் காத்திருக்கவில்லை.
---------------------------------------------------------------------
14.10.2008. யாழ்ப்பாணம் புலோலி வல்லிபுரம் ஆழ்வார்கோயில்

Monday, September 22, 2008

ஜெபங்களின் மீதெழுகிற அழுகை


-----------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

ஜெபங்களின் மீது அழுகை எழுகிறது
ஜெபமாலைகளின் பேரணியில்
பைபிள்களை வாசித்தபடி
திருப்பாடல்களை பாடுகையில்
கொலைசெய்யப்பட்ட பறவைகள் வந்து போயின.

தேவாலயங்களைவிட்டு
வெளியில் வருகிறபோது
சிலுவையை சுமந்து திரிகிறதாய்
கடவுள் சொல்லுகிறார்.

வீட்டுக்கும்
தேவாலயத்திற்கும் இடையில்
பாடாய்
கிடக்கின்றன சிலுவைகள்.

ஆணிகள் அறையப்பட்ட
மனிதர்களின்
முகங்களில் வழிகிறது கடவுளின் இரத்தம்.

சபிக்கப்பட்ட வாழ்விலிருந்து
மீளுவதற்காய் ஜெபித்தீர்கள்
அழகிய தோட்டம் பற்றி கனவுடன்
அழைத்து வரப்பட்ட குழந்தைகள்
ஆலயத்தை சூழ
விளையாட ஏங்குகிறார்கள்

இந்த அழுகை வழியும்
ஜெபங்களில் சாத்தானுக்கு எதிராய்
சிலுவையுடன் செல்வதை நான் கண்டேன்.
------------------------------------------
21.09.2008
---------------------------------------

திருவிழாவில் மண்சுவரில் மோதுண்ட குழந்தை


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

காணாமல்ப்போன குழந்தை
கடவுளை விளையாட கேட்டிருந்தது.

பொம்மைகள் தொங்கும்
திருவிழாவில்
நமது மணல்த்தரை சேறாகிக்கிடக்கிறது.

முட்கள் முளைத்திருக்க
புதைந்து கொண்டு வருகிறது தேர்.
இரத்தம் வடியும் கால்கள்
தீ மிதிக்கின்றன.

தேர்களில் இருள் நிரம்பிக்கிடக்க
பூக்கள் கருகியிருந்தன
வடத்தின் நீளம் சுருங்கி
ஏதோ ஒரு சுவரில் மோதி அறுகிறது.

கால்களுக்குள் ஒளி புதைகிறது

கடவுளின் தலையை காணாதபோதும்
காய்ந்த தலைகளின்மீது
கைகள் கூப்பியிருந்தன.

மணற்சுவர்களிற்கிடையில்
நடக்கும் திருவிழாவில்
காணாமல்ப்போன குழந்தையை
தேடித்திரிகிற மனைவியிடம்
கண்கள் இல்லாத பொம்மைகள் இருந்தன.

சுற்றிச்சுற்றி மணற்சுவர்களுக்கிடையில்
குனிந்தபடி இழுக்கும்
எல்லா தேர்களிலும் இருந்த கடவுள்களின்
கண்களிலிருந்தும் இரத்தம் கசிந்தது.

நானும் அவளும்
முதன் முதலில் பார்த்துப்பேசிய
மணல்த்தரையில்
காய்ந்து விடாத நமது முத்தத்துடன்
புதைந்து கிடந்தன
குழந்தையின் வளையல்கள்.

கடவுளை பொம்மை என்று
குழந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
--------------------------------------------------------
20.09.2008
----------------------------------

Sunday, September 7, 2008

போர்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

----------------------------------------------------------------

கவிதை:தீபச்செல்வன்
_______________________________


01
வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு
திரும்பிக்கொண்டிருந்த
அம்மாவை அக்கராயனில்
நான் தேடிக்கொண்டிருந்தேன்
ஷெல்களுக்குள்
அம்மா ஐயனார் கோயிலை
விழுந்து கும்பிட்டாள்
ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது.

நேற்று நடந்த கடும் சண்டையில்
சிதைந்த கிராமத்தில்
கிடந்தன படைகளின் உடல்கள்
கைப்பற்றப்பட்ட
படைகளின் உடல்களை
கணக்கிட்டு பார்த்தபடி
சிதைந்த உடல்கள்
கிடக்கும் மைதானத்தில்
பதுங்குகுழியிலிருந்து
வெளியில் வந்த
சனங்கள் நிறைகின்றனர்.

பக்கத்து வீட்டில்
போராளியின் மரணத்தில்
எழுகிற அழுகையுடன்
இன்றைக்கு நாலாவது தடவையாக
திடுக்கிட்டு எழும்பிய அம்மா
முறிகண்டி பிள்ளையாரை
கும்பபிட்டபடி ஓடுகிறாள்
பூக்களும் மண்ணும்
கைகளில் பெருகுகிறது.

02
போன கிழமை விட்டு வந்த
கிராமம் முழுவதுமாய் சிதைந்து போனது
குசினிக்குப் பக்கத்தில்
கிடந்த பதுங்குகுழியில்
படைகளின் ஏழு சடலங்கள்
மூடுண்டு கிடந்தன.

போராளிகள் கைப்பற்றிய
ஆயுதங்களில் மீட்கப்பட்டிருந்த
கிளைமோர்களைக் கண்டும்
எறிகனைகளைக்கண்டும்
சனங்கள் பெருமூச்செறிந்தனர்.

போர் வாழ்வை அழித்தபொழுது
கிராமங்கள் போர்க்களமாகின
அக்கராயன்குளம் காடுகளில்
ஒளிந்திருக்கும் படைகளிடம்
நாச்சிக்குடா வீதியே அகப்பட்டிருந்தது

03
அகதிகள் வீடாயிருந்த
ஸ்கந்தபுரம் இத்திமரம்மீது எறிகனைகள் வீழ்ந்தன
அகதிக்குடியிருப்புகள் நிறைந்த
மணியங்குளம் கிராமம்
எரிந்து சாம்பலாய்க் கிடந்தது.

நிலத்தில் பதுங்கமுடியாதபொழுது
வெளியில் வந்து விடுகிறேன்
தலைகளில் விழும் எறிகனைகளை
ஏந்தும் பிள்ளைகளை
நினைத்து துடிக்கிற
தாய்மார்கள் வெளியில் நின்றனர்.

செஞ்சிலுவைச்சங்கம்
கொண்டு வந்த போராளியின் உடல்
மேலும் குத்தி கிழிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒரு சிங்களத்தாய்
துடித்தழுகிறாள்
ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய்
துடித்தழுகிறாள்
சிதைந்த கிராமங்களில்
பரவிக்கிடந்தன
படைகளின் உடல்கள்
மதவாச்சியை கடந்து
படைகள் வரத்தொடங்கியபொழுது
வவுனியாவைக்கடந்து
போராளிகள் போகத்தொடங்கினர்.

தெருமுறிகண்டி மடங்களில்
கிடந்தன ஆள் இல்லாதவர்களின் பயணப்பொதிகள்.

புதுமுறிப்பில் வீழ்ந்த
ஏறிகனைகளில் இறந்த
குழந்தைகள்
வரிச்சீருடைகளை அணிந்த
காட்சிகளை
ரூபவாஹினி தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

படைகளை நோக்கி சுடுகிற
போராளிகளின் மனங்களில் இருந்தன
பசுமையான கிராமங்களும்
அங்கு நடமாடித்திரிகிற சனங்களும்.
--------------------------------------
04.09.2008
-----------------

Wednesday, September 3, 2008

முத்தமிடக் காத்திருந்த நாள்.


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________
01
உன்னை முத்தமிடக் காத்திருந்த
நாளில்
என் கடைசிக் கவிதை
கொலை செய்யப்பட்டிருந்தது.

விஷர் பிடித்த
மோட்டார் சைக்கிள்
விழுங்கிய நகரத்தில்
எனது முகம்
தனியே தொங்குகிறது.

ஆட்களில்லாதவர்களின்
வார்த்தைகளை கொலுவிய
புத்தகக் கடையில்
புத்தகங்களினிடையில்
சொருகப்பட்டிருந்தது
ஒரு துப்பாக்கி.

ஆமணக்கம் விதைகளை
தின்று மயங்கிய
குழந்தைகள் திரும்பி
அழும் சத்தத்திற்கு அருகில்
கிடந்தன சவப்பெட்டிகள்.

உன் முத்தத்திற்கும்
என் கவிதைக்கும் இடையில்
ஒரு நூல் வளருகிறது.

அந்த நூலை அறுக்கிறது
என்னை அவர்களின்
குருதிச் சொற்களால்
எழுதிய சுவர்களிலிருந்து
திரும்புகிற துப்பாக்கி.

என் கடைசிக் கவிதையை
எழுதிய தாள்களினை மூடுகிறது
ஒரு இராணுவத் தொப்பி.

02
நான் உன் முத்தத்திற்காகவும்
பேனாக்களை எடுத்துச் செல்கிறேன்.

நாம் குழந்தைகள் நிறைந்த வீட்டில்
சோறு
சமைத்துக் கொண்டிருந்த பொழுது
படலை துண்டு துண்டாய்
சிதைந்து போனதை நீ கண்டாய்.

சிதைந்த நகரத்தில்
திறந்திருக்கும் தேனீர்க்கடைக்கு
உன்னை இன்னும் அழைத்துச் செல்லவில்லை
நான் இன்னும்
உன்னை முத்தமிட வேண்டும்
குழந்தைகள்
அழைத்து வரப்பட்ட நகரத்தில்.

மிகவும் பிரியத்துடன்
முத்தமிடக் காத்திருந்த நாளில்
குருதி கசிந்த கைகளினால் எழுதிய
கடைசிக் கவிதையினோடு
நான் கொலை செய்யப்பட்டிருந்தேன்.
-------------------------------------------

Monday, August 18, 2008

துண்டிக்கப்பட்ட சொற்கள்


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்

_______________________________


01
தோல்வியின் வர்ணிப்பு
நிரம்பிய
உனது குரல்
எனக்கு கேட்க வேண்டாம்

துண்டிக்கப்பட்ட
தொலைபேசிகளிலிருந்து
எனது நகரத்தின்
கண்ணீர் வடிகிறது

கம்பிகளின் ஊடாய்
புறப்பட முயன்ற
எனது சொற்கள்
தவறி விழுகின்றன
கம்பிகள் அறுந்து கிடக்கின்றன

மேலும்
தோல்வி வருணிக்கப்பட்டு வரும்
உனது குரல்
எனக்கு கேட்க வேண்டாம்.

02
உனது கடிதம்
வந்து
சேராமலிருந்திருக்கலாம்
நீ
எந்தக் கடிதத்தையுமே
எழுதாமல் விட்டிருக்கலாம்

தபாலுறை
நாலாய் கிழிந்திருந்தது
முகவரிகளில்
இராணுவம் முன்னேறிய
குறியீடுகள் இருந்தன

நான் தேடி அலைந்தேன்
கடிதம் எங்கும்
வெட்டி மறைக்கப்பட்டிருந்த
உன்னையும்
உனது சொற்களையும்.

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்கு
கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.

Sunday, July 27, 2008

அடிமைகள் நகரத்தின் தீபாவளி

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்


````````````````````````````````````````````````````````````
இந்த அடிமைகளும்
ஒரு தீபவாவளி கொண்டாடினர்.

வாகனங்கள் வீதியில்
இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன
ஒரு இராணுவ வண்டியின்
நீளத்தினுள்
முழு வீதியும் அடங்கி
நசிந்து கிடந்தது.

நேற்றிரவு வெட்டி
கொலை செய்யப்பட்டவர்களின்
துண்டுதுண்டு உடல்களும்
சனங்களோடு வீதியில்
ஒதுங்கி நின்றன.

அடிக்கடி அடிமைகள்
நகரத்தினுள்
கடல் நுழைந்து திரும்பியது.

வீட்டிலிருந்து சனங்களை
திறந்து
வெளியில் விடுகிற
சாவிக் காலை
கறுப்பாகிக் கிடந்தது
துண்டுதுண்டாய்
வெட்டி எறியப்பட்ட
வீதியல் கிடந்தன
குழந்தைகளின்
தீபாவளி உடைகள்.

அடிமைகள் நகரத்தில்
தீபாவளி ஒன்று நடந்ததுதான்.

வெடிகள் தீர்க்கப்பட்டன
ரவைகள் நிரம்பிய
நகரத்தின் நடுவே
குருதிப்புள்ளடியிடப்பட்ட
உடைகளை வாங்கி
திரும்பினர் சனங்கள்
அடிவாங்கிப் போகிற
சனங்களின் முதுகில்
கிடக்கின்றன பலகாரங்கள்.

வளைந்த சனங்களின்
முதுகில் பீரங்கியை
பூட்டி விடுகிறான் படையினன்
இந்த அடிமைகள்
குனிந்தபடி
தீபாவளி கொண்டாட
அனுமதிக்கப்பட்டனர்.
`````````````````````````````````````````````````````````````

Friday, May 23, 2008

இரவு மரம்


எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்

-------------------------------------------------------------

இரவு முழுவதும் நிலவு
புதைந்து கிடந்தது
நெடுஞ்சாலையின் அருகிலிருக்கும்
எங்கள் கிராமமே
மண்ணுக்குள்
பதுங்கிக் கிடந்தது
வானம்
எல்லோரும் வெளியேறிய
வீட்டின்
சுவரில் ஒட்டியிருந்தது.

நேற்று இறந்தவர்களின்
குருதியில்
விழுந்து வெடித்தன
குண்டுகள்
நாயும் நடுங்கியபடி
பதுங்குகுழியின்
இரண்டாவது படியிலிருக்கிறது.

ஒவ்வொரு குண்டுகளும்
விழும் பொழுதும்
நாங்கள் சிதறிப்போயிருந்தோம்
தொங்கு விளக்குகளை
எங்கும்
எறிந்து எரியவிட்டு
விமானங்கள்
குண்டுகளை கொட்டின.

எங்கள் விளக்குகள்
பதுங்குகுழியில்
அணைந்து போனது
இரவு துண்டுதுண்டாய் கிடந்தது
பதுங்குகுழியும் சிதறிப்போகிறது
எங்கள் சின்ன நகரமும்
சூழ இருந்த கிராமங்களும்
தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தன.

மெதுவாய் வெளியில்
அழுதபடி வந்த
நிலவை
கொடூரப்பறவை
வேகமாய் விழுங்கியது.

இரவு முழுக்க விமானம்
நிறைந்து கிடந்தது
அகோர ஒலியை எங்கும்
நிரப்பிவிட
காற்று அறைந்துவிடுகிறது.

தாக்குதலை முடித்த
விமானங்கள்
தளத்திற்கு திரும்புகின்றன
இரவும் தீப்பிடித்து
எரிந்துகொண்டிருந்தது
மரங்களும் எரிந்து கொண்டிருந்தன
சிதறிய பதுங்குகுழியின்
ஒரு துண்டு
இருளை பருகியபடி
எனது தீபமாய் எரிகிறது
மரமாய் வளருகிறது..
-------------------------------------------
30.06.2007 நாட்களில் தீபம் http://deebam.blogspot.com/ என்ற எனது வலைப்பதிவு பதுங்குகுழிச்சூழலிலிருந்து தொடங்கப்பட்டது.

Sunday, April 27, 2008

சாபத்தின் நிழல்


எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

``````````````````````````````````````````````````````````````
குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில்
நிரம்பியிருந்தது மரணம்
நிலவு
சாத்தானின் முகத்தோடிருந்தது
வானம்
தீராத சாபத்தின் நிழலில்
தோய்ந்திருந்தது.

கூர்மையான வாள்களாகியது கற்கள்
கூர்மையான கத்திகளாக
கூர்மையான துவக்குகளாக
மனிதர்களின் கைகளிற்குள்
நிரம்பியிருந்தன கற்கள்.

மனிதன் கற்களை தூக்கியது முதல்
விழுந்து கொண்டிருந்தது
இன்னொரு மனிதன்மீது.

கனிகளை புசித்தது முதல்
மனிதனுக்கு
ஆயிரம் முகங்கள்
ஆயிரம் கைகள்
ஆயிரம் கால்கள்
ஆயிரம் தலைகள்
முளைத்து நிறைந்தன.

கடவுள் முதல்
மனிதனிடம் தோற்றுப்போன வேளை
சாத்தானின் கை உயர்ந்த வேளை
சர்பத்தின்கதை தொடங்கிய பொழுது
சாத்தானின் கதை தொடங்கிய பொழுது
பாவமும் தொடங்கியது.

தெய்வங்களின் ஆயுதங்கள்
கோயில்களில் நிரம்பிக்கிடந்தன
அசுரர்களை அழித்த பாடல்களுடன்
பூஜை நடந்தது
பூக்களோடு
குருதியும் சதைகளும் படைக்கப்பட்டன.

மனிதனின் பரிணாமத்துடன்
கற்களும் வளர்ந்தன.

பசுக்களை திருடியபொழுது
தானியங்களை விதைத்த பொழுது
அவைகளுக்காய் போரிட்ட பொழுது
சாபத்தை விதைத்தான்
மரணத்தை அறுவடை செய்தான்
காயங்கள் குவிந்து கிடந்ததன.

மரணப்பூமியில் சாபக்குழந்தைகள் பிறந்தன
சாத்தானின் கதைகளுடன்
எறியப்பட்டுக்கொண்டிருக்கும்
கற் குவியல்களுக்கு இடையில்.
25.04.2008
``````````````````````````````````````````````````````

கமராப்போராளி




தீபச்செல்வன்



குழந்தைகள் பூக்களை நிரப்பி
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்
குருதி பிறண்ட கமராவோடு இருக்கிறது உனது அறை
சனங்கள் சனங்கள் பேசிய
எனது அன்புத்தோழனே

சனங்களின் கனவு நிரம்பிய உனது கல்லறைக்கு
ஒரு நாள் நான் வருவேன்.

சனங்களின் ஏக்கங்களை
அள்ளி நிரப்பி வரும்
உனது கமரா களத்தில் தோளிலிருந்து
உதிர்ந்து விழுந்ததை
நான் நம்பாமலிருக்கிறேன்.

சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்
ஒரு துப்பாக்கியோடும்
உனதான கமராவோடும்
இன்னும் நீ சமராடிக்கொண்டிருக்கிறாய்.

நஞ்சு நிரப்பிய
உனது சயனைட் குப்பியில்
பதுங்குகுழிச்சனங்களின்
கண்ணீரையும் கோபத்தையும்கூட
நிரப்பிவைத்திருந்தாய்
அது ஒரு சூரியனாய்
உனது கழுத்தில் தொங்கியது.

உனது ஒரு சூரியனின் முகத்தையும்

உனது அறையில் நிரம்பியிருந்த
நமது வார்த்தைகளையும்
நான் எந்த களமுனையில் தேடுவேன்.

சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கின்றன.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பியுள்ள கல்லறைகளில்
எந்தக் கல்லறையில் நீ உறங்குகிறாய்?

உனது கமராவிற்குள்
இன்னும் அசைந்து கொண்டிருக்கின்றனர்
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை வார்த்தைகள்.


மன்னார் களமுனையில் 21 கார்த்திகை 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.

Thursday, April 3, 2008

மாதா வெளியேற மறுத்தாள்


எழுதியவர்_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சனங்கள் மாதாவையும்
குழந்தை யேசுவையும்
கூட்டிச் சென்றிருக்கலாம்.

யேசுவின் குருதியால்
எழுதப்பட்ட பைபிள்களை
கிளைமோரில் சிதறிய
மாணவர்களின்
குருதி பிறண்ட
வெள்ளைச் சீருடைகளில்
ஆயர்கள்
கட்டி எடுத்துப்போனார்கள்.

வத்திக்கான் எங்கேயிருக்கிறது.

பதுங்குகுழியில் மாதா ஒளிந்திருந்தாள்
வெளியில் போன அருட்சகோதரிகள்
குருதி பிறண்ட
திரு ஆடைகளோடு விழுந்தனர் பதுங்குகுழிக்குள்.

மடு மாதாவின் தேவாலயம்மீது
எண்ணிக்கையற்ற
எறிகனைகள் நுழைந்தன
குழந்தை யேசுவின் அழுகை
வீறிட்டு கேட்க
ஆயர்கள் வளாகத்தை எட்டிப்பார்த்தனர்.

சிலுவை பொறிக்கப்பட்ட
எறிகனைகளும்
பிறை பொறிக்கப்பட்ட்
எறிகனைகளும்
சூலம் பொறிக்பப்பட்ட
எறிகனைகளும்
புத்தரின் மூடிய கண்களில்
சுழறும் தர்மச்சக்கரத்திலிருக்கும்
படையினரிடமிருந்து
வந்து விழுந்து கொண்டிருந்தன.

வளாகத்தை விட்டு
வெளியை விமானம் உழுதடித்தபோது
சனங்கள் மாதாவை குழந்தையோடு
தனியே விட்டுச் சென்றனர்.

பாப்பரசர் வத்திக்கானில்
பைபிளை திறந்தபோது
குருதி ஒழுகியது
அமெரிக்காவின் முன்னால்
குருதி காயாத
சிலுவையோடு நின்றார் யேசு.

மிஷன் பாடசாலைகளுக்கு சென்ற
பிள்ளைகளையும்
சவப்பெட்டியில் கண்டோம்
வண்ணத்துப்பூச்சி திரிகிற
பற்றைகளில்
பதுங்கியிருந்தன கிளைமோர்கள்
வருகிற பிள்ளைகளை பார்த்தபடி
யேசுவை தூக்கிச் செல்ல மாதா அஞ்சினாள்.

பாப்பரசர் மன்றாடவில்லை
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
ஜெபத்தில் திடுக்கிட்டனர்.

சனங்களோடிருந்த மாதாவுக்கும்
குழந்தைக்கும் எதிராக
அரசுகள் யுத்தத்தை புரிந்தன
பைபிள்களாலும் ஜெபமாலைகளாலும்
பதுங்குகுழி நிரம்பியிருந்தது.

இனி இங்கிருக்கமுடியாது
என்று
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
மாதாவுக்கு எடுத்துக்கூறினர்
மாதா மறுத்தாள்
குழந்தை யேசுவின் அழுகையை துடைத்தபடி.

சனங்கள் விட்டுப்போன
மாதாவையும் குழந்தையையும்
ஆயர்களும் அருட்சகோதரிகளும்
கட்டாயப்படுத்தி
நேற்றோடு கூட்டிச்சென்றனர்
மடு தேவாலய வளாகத்தை விட்டு..
----------------------------------------------------------------------------


03.04.2008 அன்று மடு மாதா தேவாலய திருச்சொரூபம் ஆயர்களால் வளாகத்தை விட்டு தூக்கிச்செல்லப்பட்டது என்று ஆயர்கள் பி.பி.சிக்கு தெரிவித்தனர்.மடு மாதா தேவாலயப் பகுதியை கைப்பற்றுவதற்காக கடந்த ஒரு வருடமாக இலங்கை அரசாங்கத்தின் படைகள் கடும் போர் புரிந்து வருகின்றார்கள்.சகல இன மக்களும் வணங்கும் மடு திருத்தல பகுதி பெரும் போர் பூமியாக காணப்படுகிறது. அப்பகுதி மீதான கடும் தாக்குதல்களால் ஏற்கனவே மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் நேற்று மடுமாதாவின் திருச்சொரூபமும் அங்கிருந்து வெளியெறியது.

Tuesday, April 1, 2008

மிதந்து திரியும் திறப்புகள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சில சைக்கிள்களின்
கண்டிலை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
சீற்றை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
கரியலை
கழற்றி எடுத்தார்கள்.

சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்
திரும்புவார்கள் என்ற நம்பிக்கை
யாரிடமுமில்லை.

சில பேர் சைக்கிளையே
திருடிக்கொண்டு போனார்கள்.

அலுமாரிகளை உடைத்து
புதையலை கண்டெடுப்பதுபோல
எனது தோழர்கள்
மகிழ்கிறார்கள்
அவர்களின் வாசனை செண்டுகளும்
பவுடரும்
சீப்புகளும் இன்னும்
வாசனையுடனிருந்தன.

உடுப்புகளை கிழறி
அறையில் எறிந்து விட்டனர்
சிலர் அந்த உடுப்புகளால்
அறையின் தூசியை
தட்டிக்கொண்டார்கள்
கடைசியில்
குப்பைத்தொட்டியில்
நிரம்பியிருந்தன அந்த உடைகள்.

அடிப்பகுதி கழன்ற சப்பாத்துக்களும்
உருக்குலைந்த செருப்புகளும்
அறையை விட்டு
ஒதுங்கியபடியிருந்தது.

பாடக்குறிப்புகள் கிழிந்தும்
உருக்குலைந்தும்
அள்ளி வீசப்பட்டும்
காற்றோடும்
கால்ளோடும் மிதிபட்டும்
குப்பையாகி கரைந்தன.

அவர்கள் எழுதிய
பாடக்குறிப்புகளும்
சேகரித்த
பத்திரிகை பகுதிகளும்
அடிமட்டங்களும்
மை இறுகிய பேனாக்களும்
சிப்புகள் அறுந்த
ப்பாக்குகளை விட்டு
தூரக்கிடக்க
அலுமாரிகளை விட்டு
தூரக்கிடந்தன
அந்த தூசி படிந்த ப்பாக்குகள்.

அறைகளின் மூலைகள்
பக்கங்கள்
எங்கும் கிடந்து உருண்டன
அவர்களிடமிருந்து
உதிர்ந்த முடிகள்
தலையணைகள்
வேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.

குளியலறை தட்டுகளில்
கிடந்தன
ஈரம் உலராத சவர்க்காரங்கள்
மலஅறையில்
வெண்கட்டியால் எழுதப்பட்ட
தூஷனங்கள்
தண்ணீரால் கழுவி
அழிக்கப்பட்டிருந்தது.

முகம் அழியாத கண்ணாடியுடன்
பெயரும் ஊரும் வகுப்பும்
எழுதப்பட்ட சுவர்களுக்கு
வெளுறிய வண்ணம் பூசப்பட்டிருந்தது.

அவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது
பெரும் ஆறாய்
யாரும் கண்டுகொள்ளாத
கரைகளை எடுத்து உடைத்தபடி..

அவர்கள் புதிய சைக்கிள்களோடும்
புதிய ப்பாக்குகளோடும்
திரும்பி வருவார்கள்
என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.

சிதறுப்பட்டு கலைந்து
மிதக்கிற
அவர்களின் கனவின் ஏக்கங்களைப்போல
சைக்கிள்களினதும்
அறைகளினதும்
துருப்பிடித்த திறப்புகள்
எங்கும் அலைந்து
மிதந்து கொண்டிருந்தன..
01.04.2008
--------------------------------------------------------------

Monday, March 17, 2008

கிணத்தினுள் இறங்கிய கிராமம்


கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
எனது கிராமம் இப்பொழுது
கிணத்தினுள்
இறங்கியிருக்கிறது.

தவளைகள் தரித்திருக்கும்
பொந்துகளினுள்
ஒளிந்திருக்கும் அம்மாவே
உன்னைப் போன்ற
நமது கனவுகள் நிரம்பிய
பைகள்
மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.

நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.

காட்டில் பதுங்கியிருக்கும்
சூரியன்
பாலைமரங்களையும்
வீர மரங்களையும் விலத்தியபடி
புழுதி உதிர
நமது கிராமம் திரும்பிவிடும்.

சூரியனை காணாத
இரவோடிக்கிறது நமது நாடு.

கிணத்தினுள் நிரம்பிய
உனது வியர்வை வெளியில் வழிகிறது.

*பள்ளிப் பேருந்துமீது
ஒரு கிளைமோர் வெடிக்கிறது
பிணங்களாய் பள்ளி மாணவர்கள்
அடுக்கப்பட்டிருந்தார்கள்
புத்தக மேசைகளில்.

குழந்தை யேசுவை தூக்கி வைத்திருக்கும்
மாதாவின்
மடு தேவாலயத்தின்மீது
விமானங்கள் பறந்தடிக்கிறது.

**எனக்கு இளநீர் பருகத்தந்த
தோழன் ஒருவனின்
தலையை
விமானம் கடித்தெறிந்தது
அவனது தலை
இரத்தினபுரத்தில் கிடந்தெடுக்கப்பட்டது..


***கிராஞ்சியில் குழந்தைகளின்
கைகள் பிடுங்கி எறியப்பட்டன
கையில் கட்டியிருந்த
பாசி மணிமாலைகளும்
கிழிந்த பாய்களும் வலைகளும்
தென்னை மரங்களும்
மணல் தரையில் குருதியாய் கிடந்நது.
ரஷ்யா இன்னும் வேகமான
விமானங்களை
இந்த தலைகளின் மேலால் பறக்கவிடுகிறது.

கிணத்தினுள் தண்ணீர் ஊறுகிறது.

கருணாநிதியின்
கவிதைகளை கேட்க முடியாமலும்
ஜெயலலிதாவின் கூச்சல்களை
கேட்க முடியாமலும்
தவளைகள் கத்துகின்றன.

****கடைசியாய் இருந்த
முறிகண்டியின்
கச்சான்கடைகளாலான
வழி இறங்கு இடமும்
தகர்ந்து கிடக்கிறது
அம்மா உனது நேத்திகளும்
உடைந்த தேங்காய்களும்
தும்பிக்கை உடைந்த
பிள்ளையாரோடு.

கிராமம் கிணத்துக்குள் இறங்கிவிட
இராணுவத்தின்
கவசவாகனங்களும் ராங்கிகளும்
சேற்று நிலத்தில் புதைகின்றன
வீடு கடலில் இறங்கித் திரிகிறது.

தங்கச்சி கனவுகண்டு துடித்தெழும்பி அழுகிறாள்.

எனினும் நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.
-----------------------------------------------------------------------------

*29.01.2008 செவ்வாய்க்கிழமை
மன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப் பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.

**02.11.2007 அன்று நடைபெற்ற விமானத்தாக்குதலில் எனது தோழன் நிர்மலசிங்கள். பலியாகினான்.

***பெப்ருவரி 22 பூநகரி கிராஞ்சியில் நடத்தப்பட் விமானத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.

****16.11.2007 நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் முறிகண்டியில் உள்ள மீன்பிடி படகு உற்பத்தி நிறுவனம் அழிந்தது. இது ஏ-9 வீதியில் பேருந்து தரித்து நிற்கும் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலிருக்கிறது.
--------------------------------------------------------------------

Sunday, March 9, 2008

நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்




------------------------------------------------------------------
மரங்கள் பிடுங்கி
எரிக்கப்பட்டிருக்கும்
சாம்பல்மேட்டில்
நான் குந்தியிருக்கிறேன்.

வாயில் சிகரட்
ஓரு பாம்பாய் வழிகிறது
அதன் சாம்பலில்
கால்கள் புதைகின்றன.

சாலையில் நொருங்கிக் கிடக்கும்
கடதாசிச் சைக்கிள்களுக்கிடையில்
காணாமல் போன
காதலியை தேடி
துருப்பிடித்த
எனது சைக்கிள் அலைகிறது.

நொருங்கிய தேனீர்சாலையின்மீது
வழியும்
வெறுமைக்கோப்பை துண்டுகளை
நக்கிய நமது பூனைக்குட்டி
கால்களுக்கிடையில்
சோர்ந்து படுத்திருக்கிறது.

இப்பொழுது பியர்போத்தலினுள்
பாம்பு அடைக்கப்பட்டிருக்கிறது
கோப்பையில்
கரித்துண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது.

கோழி சாப்பலை சாப்பிடுகிறது.

இலைகள் வாடிக்கொட்டின
கிளைகள் வெட்டி
மொட்டையடிக்கப்பட்ட
மெலிந்த தடிகளாய்
நிற்கும் மரங்களாலான
வேலியின் கீழ்
படுத்திருக்கும் ஆடு
பற்களை அசை போடுகிறது.

துருப்பிடித்து உக்கிய
சைக்கிள்கள்
பொது மண்டபத்தில் அடுக்கப்பட்டிருந்தன.

கரும்பேன்கள்
ஆடைகளை தின்றன
உக்கிய புத்தகங்களும்
ஆடைகளும்
தெருவின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருக்கிறது.

அவள் கருகிய பூவையே
சூடியிருந்தாள்
அவள் ஓட்டிச்சென்ற
சைக்கிள் நொருங்கிக்கிடந்தது
நாம் அமர்ந்து பேசிய
புல் வெளிமீதில்
சூரியன் உருண்டு துடிக்கிறது.

தடிகாளாய்ப் போன
மரங்களுக்கிடையில்
நிழல் தவித்துத் திரிகிறது.

பேரூந்தின் ரயரும் ரீப்பும்
மடிந்து பிய்ந்து கிடந்தது
காற்று வெளியேறியிருந்தது
கண்ணாடிகள் உடைய
துருப்பிடித்து கொட்டியது
உருக்குலைந்த
ஜன்னலின் ஊடாய்
நகரம் உள்நுழைந்து
ஒளித்திருக்கிறது.

ஒரு தாய் அதில் பயணம்போக
ஏறியிருக்கிறாள்
வீதி அறுந்து கிடக்கிறது.

காணாமல் போன இளைஞர்களின்
செருப்புகளும் குடைகளும்
கெல்மட்டுக்களும்
தாய்மார்களிடம் வழங்கப்பட்டன.

துடித்தபடி நானும் அவளும்
ஒருவரை ஒருவர் அணைத்தோம்
சாம்பலாய் உதிர்கிறது.
--------------------------------------------
அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.

Thursday, February 21, 2008

முறிப்புக் கிராமம்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
நீயும் நானும் குளத்தில்
இறங்கினோம்.

கொக்குகள் குளத்தை
குடித்து நிரம்பின
மீன்கொத்திகள்
மீன்களாக மாறி
கால்களை கொத்துகின்றன.

குளக்கட்டில்
பாட்டில் போடப்பட்டிருக்கும்
சின்னச் சைக்கிளில் இருந்த
புத்தகங்களை
காற்று படிக்கிறது.

குளத்தின் கீழ்கரை வாய்க்காலில்
தண்ணீர் குடிக்கும்
ஆடு மாடுகள்
தலைகளை திருப்பி
தண்ணீர் பாடல்களை கேட்கின்றன.

நமது கால்களுக்கள் மீன்கள்
ஓடித்திரிந்தன.

சனங்களை அள்ளி
நிரப்பி வழியும்
பேருந்தின் நடத்துனர்
வாய்க்கால் தண்ணீரை
அள்ளி எஞ்சினில்
விட்டு சூடு குறைக்கிறான்.

பேரூந்து நம்மை விலத்திப் போகிறது

புழுதி படிந்த தென்னை மரங்களில்
பழுத்து விழுந்த
ஓலைகளை
கறுப்பய்யா வாய்காலில் போட்டு
பின்னி அடுக்கிறார்.

கிடுகுகளின் குளிர்ந்த
நிழல் வீட்டில்
நாம் அருந்துவதற்காய்
பசும் பால் முட்டியிலிருக்கிறது.

முற்றி வளைந்திருக்கும்
நெற்கதிர்களை
பார்வையிட்ட செல்வரத்தினம்
சத்தமிடும் சைக்கிளில்
நெல்மணிகள் கொட்ட போகிறார்.

எப்போதாவது வரும்
வாகனங்களை விலத்தி விட்டு
நெல்மணிகளை கோழிகள்
பொறுக்கி எடுக்கின்றன
கூடுகளில் கோழிகள்
பெரிய முட்டைகள் இட்டிருந்தன.

மிளகாய் கன்றுகளுக்கு
பரமேஸ்வரி
தண்ணீர் விடுகிறாள்
மண் வெம்மை அடங்க ஈரமாகிறது.

பள்ளிக் கூடம் போகாத
சிறுவர்கள் நெல் பொறுக்கப்போக
அவர்களின் புத்தக பைகள்
சுவரை கிழித்து
வெளியில் தெரியும்
கிணியாத் தடிகளில்
கொலுவியிருந்தன.

மண்வீடுகளோடும்
ஓலைப் பள்ளிக்கூடத்தோடும்
காடுகளோடும் முடியும்
முறிப்பு வீதியில்
மேல்நிலைக் கல்விபயிலும் மாணவி
மலைநேர நிறத்தோடு
கிராமம் திரும்புகிறாள்.

வைக்கோலின் வாசனையோடு மாடுகளும்
குலைகளின் வாசனையோடு ஆடுகளும்
பட்டியில் நிறைந்தன
சனம் போக குளம் மெளனமாகிறது.

ஏற்றமான வீதியில்
நீயும் நானும் சைக்கிளை மிதிக்கிறோம்..
------------------------------------------------------------------------------------
முறிப்பு: கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய ஒருகிராமம்

Sunday, January 27, 2008

மழையில் உதிர்ந்த உடைகள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

அடர்ந்த மழையின் வெள்ளத்தில்
நமது குடைககள்
மிதக்கின்றன
நடுங்கும் உதடுகளுடன்
குளிரில் ஊதிய புன்னகை
முகத்தை முட்டுகிறது.

வெள்ளம் நமது செருப்புகளை
அள்ளிச் செல்கிறது
எனது காதலி
அடர்ந்த மழையின் தூறலில்
ஒளிந்து விடுகிறாள்.

அவளின் பட்டின் தோடுகள்
எனது பொக்கற்றில்
குளுங்கிக் கொண்டிருந்தன.

மழையின் ஒலியில்
சங்கீதம் நிரம்பிய அவளின் குரல்
நுழைகிறது
அவளின் நிறம் கலந்த
வெள்ளம்
அழகிய ஓவியமாய் படர்கிறது.

கண்களின் அசைவுகள்
மின்னலின் ஒளியை பிடித்து தின்கிறது
முழக்கத்தை மீறி
அவளின் புன்னகை ஒலிக்கிறது.

கைக்குள் குடைகள் நிறைந்திருக்க
தோழ்களில் ஊஞ்சல் முளைக்கிறது.

மழையில் நமது வீடுகளும் மரங்களும்
குளிர்த்து சிலிர்க்கின்றன
நமது வீட்டில் குளிர்
நிரம்பி
ஜன்னலின் ஊடாய் வழிகிறது.

நாம் நடக்கும் வனத்தின் தெருவில்
நமது சைக்கிள்கள்
சுருண்டு விறைத்துக் கிடக்கின்றன.

நமது காதலின் சொற்கள்
செடிகளின் மீது படிய
புல் பூடுகளின் பூக்களில்
வாசனை பெருகியது.

சிறிய தெருக்கோவிலும்
அதனுளிருந்த சிற்பமும்
மழையை
குடித்து மகிழ்ந்தது.

சிறிய குழந்தையின்
காகிதக் கப்பலில் இருந்தபடி
எனது காதலி
இலையை குடையாக பிடித்திருக்கிறாள்.

சிறுவன் மண்வெட்டியால்
கீறிவிட அழகின் வேகமாய் நகரும்
நதியில் அந்தக் கப்பல்
மிதந்து வருகிறது.

மழையில் நமதாடைகள்
உதிர்ந்து விடுகின்றன.
--------------------------------------------------------

Friday, January 11, 2008

யுத்தத்தின் பின்னரான நிறுத்தமும் பிரகடனமும்.


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

தூங்க மறுக்கும் குழந்தைமீது
தாயின் பாடல்
மிக மெல்லியதாக படர்கிறது.

நள்ளிரவு அதிர
கூவுகிற
வெளுறிய கொண்டையுடைய
சேவலின்
தொண்டைக்குழியில்
எறிகனைபோய்
சிக்கிக்கொள்கிறது.

தறிக்கப்பட்ட
பனைமரங்களில் வழியும்
சொற்களை
சூன்யப்பிரதேசத்தில்
திரியும்
குட்டையடைந்த நாய்
முகர்ந்து பார்க்கிறது.

குழந்தைகள்
தூக்கி எறியப்பட்ட
நாட்டிலிருந்து
சூரியன் விலகுகிறது.

திசைகளை விழுங்கும்
இராணுவ
தொலைத்தொடர்பு கோபுரத்தில்
திடுக்கிட்டு எழும்பும்
குழந்தையின்
அதிர்வு நிரம்பிய பாடல்
பதிவாகிக்கொண்டிருந்தது.

அதில் குரல் பிடுங்கி
எறியப்பட
பேசும் பறவையின்
வேகமும் சிறகுகளும்
காயப்பட வீழ்கிறது.

இடைவெளிகளில் மிதக்கும்
நாற்காலிகளில்
இருள் வந்து குந்தியிருக்கிறது.

கருவாடுகளை குத்தி குருதி
உறிஞ்ச முனையும்
நுளம்புகளை
பூனைகள் பிடித்து சாப்பிடுகின்றன.

தலைகளை பிடுங்கி
எறிகிற
அதிவேகத்தோடு
மக்களின் குடிமனைகளிற்குளிருந்து
எறிகனைகள்
எழும்பி பறக்கின்றன.

முழு யுத்தத்திற்கான
பிரகடனமாக
குட்டையடைந்த நாய்
பெரியதாய் ஊழையிடுகிறது.

வீட்டு வாசலில்
வந்து நின்ற போர்
கதவை சத்தமாக தட்டுகிறது.

குழந்தை ஒலி அடங்கி அழுகிறது.
--------------------------------------