Sunday, March 9, 2008

நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்




------------------------------------------------------------------
மரங்கள் பிடுங்கி
எரிக்கப்பட்டிருக்கும்
சாம்பல்மேட்டில்
நான் குந்தியிருக்கிறேன்.

வாயில் சிகரட்
ஓரு பாம்பாய் வழிகிறது
அதன் சாம்பலில்
கால்கள் புதைகின்றன.

சாலையில் நொருங்கிக் கிடக்கும்
கடதாசிச் சைக்கிள்களுக்கிடையில்
காணாமல் போன
காதலியை தேடி
துருப்பிடித்த
எனது சைக்கிள் அலைகிறது.

நொருங்கிய தேனீர்சாலையின்மீது
வழியும்
வெறுமைக்கோப்பை துண்டுகளை
நக்கிய நமது பூனைக்குட்டி
கால்களுக்கிடையில்
சோர்ந்து படுத்திருக்கிறது.

இப்பொழுது பியர்போத்தலினுள்
பாம்பு அடைக்கப்பட்டிருக்கிறது
கோப்பையில்
கரித்துண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது.

கோழி சாப்பலை சாப்பிடுகிறது.

இலைகள் வாடிக்கொட்டின
கிளைகள் வெட்டி
மொட்டையடிக்கப்பட்ட
மெலிந்த தடிகளாய்
நிற்கும் மரங்களாலான
வேலியின் கீழ்
படுத்திருக்கும் ஆடு
பற்களை அசை போடுகிறது.

துருப்பிடித்து உக்கிய
சைக்கிள்கள்
பொது மண்டபத்தில் அடுக்கப்பட்டிருந்தன.

கரும்பேன்கள்
ஆடைகளை தின்றன
உக்கிய புத்தகங்களும்
ஆடைகளும்
தெருவின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருக்கிறது.

அவள் கருகிய பூவையே
சூடியிருந்தாள்
அவள் ஓட்டிச்சென்ற
சைக்கிள் நொருங்கிக்கிடந்தது
நாம் அமர்ந்து பேசிய
புல் வெளிமீதில்
சூரியன் உருண்டு துடிக்கிறது.

தடிகாளாய்ப் போன
மரங்களுக்கிடையில்
நிழல் தவித்துத் திரிகிறது.

பேரூந்தின் ரயரும் ரீப்பும்
மடிந்து பிய்ந்து கிடந்தது
காற்று வெளியேறியிருந்தது
கண்ணாடிகள் உடைய
துருப்பிடித்து கொட்டியது
உருக்குலைந்த
ஜன்னலின் ஊடாய்
நகரம் உள்நுழைந்து
ஒளித்திருக்கிறது.

ஒரு தாய் அதில் பயணம்போக
ஏறியிருக்கிறாள்
வீதி அறுந்து கிடக்கிறது.

காணாமல் போன இளைஞர்களின்
செருப்புகளும் குடைகளும்
கெல்மட்டுக்களும்
தாய்மார்களிடம் வழங்கப்பட்டன.

துடித்தபடி நானும் அவளும்
ஒருவரை ஒருவர் அணைத்தோம்
சாம்பலாய் உதிர்கிறது.
--------------------------------------------
அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.

No comments: