Sunday, November 8, 2009

சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி



தீபச்செல்வன்
__________________
எடுபடாது கிடக்கிற உனது வாக்குமூலம்
தராசில் வைக்கப்பட்டபோது சரிந்து போகிறது நீதிமன்றம்.
குழந்தைகள் தெருவுக்கு வருவதற்கு
அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள்.
உனது காலம் முழுவதையும் சிறையிடுகிறார்கள்.
யாரும் பேசுவதாயில்லை
விலங்குகளை மாட்டுகிற கைகளைப்பற்றி.
சொற்களடங்கி அதிகாரத்தின் கால் விரிந்தகலுகிறது.
வெருண்டு கிடக்கின்றன காலத்தின் சொற்கள்.

குற்றம்சாட்டி
கைது செய்து இழுத்துச் செல்கையிலும்
இத்தனை நாட்களாய் சிறையிருக்கையிலும்
அஞ்சும் கண்களால் நிரம்பியிருந்தன வெள்ளைத்தாள்கள்.
எல்லாப் பத்திரிகையிலும்
ஏக்கம் பொருந்திய தலைப்புச் செய்தியாய்
வடிந்து கொண்டிருக்கிறது உனது முகம்.
பேனைகளையும் தாள்ளையும் எச்சிரிக்கிறது
வளைத்திருக்கிற கம்பி.

காலம் அரசனைப் பார்த்து
மிகவும் அஞ்சிக்கொண்டிருக்கிறது.
எதைத்தான் பேச முடியும்?
வாய்கள் கட்டப்பட்டு அரச மரங்களை
சுத்திக்கொண்டிருக்கின்றன ஒலிவாங்கிகள்.

கொடிய ஆட்சியின்
கழுத்து நெறிக்கும் சக்கரங்கள்
இரவிலும் பகலிலும் மோதி எழுகிற
பெருஞ் சத்த்தில் தகர்ந்து போகிறது முழுவதும்.
விலங்கை மாட்டி
கவலில் கொண்டு செல்லும்பொழுது
சொற்கள் வாயில் வழிந்து கொட்டிக்கொண்டிருந்தன.

தடுக்கப்பட்ட சொற்களால் நிரம்பிய சிறைச்சாலையில்
கழிக்க முடியாத ஒரு இரவு
பல யுகத்தின் சித்திரவதைகளை வைத்திருக்கின்றன.
அதிகாரம் ஆடுகிற நடனத்தின் உச்சத்தில்
சனங்கள்
எங்கும் எலும்புக்கூடுகளாகி விழுந்துகொண்டிருக்கின்றனர்.
பெரும் சத்தமிடுகின்றன அதிகாரத்தின் கட்டளைகள்.
முழுச் சொற்களையும் களைந்து விடுகிறது
சிறைச்சாலையின் ஓலம்.

காலம் வதைகளால் நிரம்பிய நரகமாக
உனது கடைசிக் குழந்தையின் முத்தம் சிதறிக்கொட்டுகிறது.
இணையத்தில் பரவிக்கொண்டிருக்கிறது
விலங்கிடப்பட்ட உனது கைளில்
படர்த்தியிருக்கும் பலி.
நிராகரிக்கப்பட்டிருக்கின்றன
உனது குழந்தைகள் கொண்டு வந்த வாக்குமூலங்கள்.

எல்லாக் காலங்களையும் பறித்துக்கொண்டு
முகத்தை கம்பிகளால் பின்னி அடைக்கும்படி உத்தரவிட்ட
முதிய நேரத்திற்கு சற்று முன்பான பொழுதில்
எல்லோரும் நீமன்றத்தில் நிற்கையில்
அடங்கிக்கொண்டிருந்தது சிறைச்சாலையில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த பெருங்கடல்.
சிறைச்சாலைக்கும் நீதிமன்றத்திற்கும்
இடையில் கொட்டிக்கிடந்த உனது சொற்களை
பொறிக்கிக்கொண்டிருக்கின்றனர் உனது குழந்தைகள்.
-------------------------
(2008ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி முதல் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸாநாயகத்திற்கு 31.08.2009 அன்று மேல் நீமன்றம் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசரகாச்சட்டத்தின் கீழ் 20 வருட கடுழிய சிறை தண்டனையை வழங்கியிருக்கிறது.)

Tuesday, March 31, 2009

பாழ்நகரத்தின் பொழுது

---------------------------------------------------------
தீபச்செல்வன்
---------------------------------------------------------------
பாழடைந்த தெருவில் சொறுகப்பட்டவர்களின்
குருதியின் மேலால்
வடிகிறது சொற்களுடன் கலந்திருந்த இளம் கனவு.

மற்றும் சில இரவுகளை பறித்த சந்தியில்
அச்சத்தின் கனவு தொடங்குகிறது.
விடிந்திராத இளங்காலையை நசித்து
முடிவுபடுத்துகிற கறுப்பான பின்னேரத்தில்
உதிர்த்தெறியப்பட்டன எனது சொற்கள்.

தொலைபேசி எங்கும்
துவக்கு புகுந்து
அலரிக்கொண்டிருக்கிற இராத்திரியில்
எங்கும் செல்ல இயலாது
தோற்றுப்போன சொற்கள்
கட்டிலின் கீழாய் கிடந்து
முதுகை குத்திக் கொண்டிருக்கின்றன.

தூக்கலிடும் நாட்களைப் பற்றியும்
மரணம் அளிக்கும் முறையினைப்பற்றியும்
அவர்கள் என்னிடமே சொல்லிச் சென்றனர்.
விலங்கிடப் பட்ட சொற்கள்
கிழே துடித்தலைய
அதிகாரம் என்னை தூக்கி
மின்கம்பத்தில் சொறுகுகிறது.

பாழடைந்து போயிருக்கிற நகரத்தில்
மண் தின்கிற கால்களை
ஊடுருவி
ஒற்றை நாய் வந்து கால்களை நக்கிச் செல்லுகிறது.
வரிசையாக புன்னகைகளால்
துவக்கு
சோதனையிட்டு பிடுங்கிக்கொண்டிருக்கிறது
இயல்பான வாழ்வை.

கூர்மையான துவக்கு
எதை வேண்டுமானாலும் செய்யும்.
என்னை உருவி எடுத்துக்கொண்டு
அனுப்புகிற பழுதடைந்த பொழுதில்
தெருவிளக்குகள் அணைந்துபோய்விட்டன.

கறுப்புத்துணியால் போர்த்து
வந்திருக்கிறது பிரியமான நண்பனின் முகம்.
விளக்கற்றுக் கிடக்கிறது வீடுகள்.

நான் கண்டேன் சிவப்பு மையால்
நனைத்தெடுக்கப்பட்டிருக்கிற எனது பெயரை.
பீர்வீக நகரத்திலிருந்து
பிடுங்கப்பட்டிருக்கிற எனது வாழ்வை.
துடிதுடித்துக் கலைகிற என் கனவுகளை.

கதவுகளுக்குப் பின்னால்
யாரும் அறியாத இருட்டில் ஒதுங்கியிருக்கிறது
பாழ் பொழுதொன்றில் விலங்கிடப்பட்ட சந்தி.

--------------------------------------------------------
(10.02.2009 5.00-6.00 எச்சரிக்கப்பட்ட மாலைப்பொழுது)

(புகைப்படம்:தீபச்செல்வன், யாழ்ப்பாணம் கொக்குவிலில் 13.12.1987 இல் இந்தியராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் நினைவாக எடுக்கப்பட்ட நினைவுக்கல் சிதைக்கப்பட்டிருக்கிறது)

Thursday, February 5, 2009

சொற்கள் பற்றி எரிந்துருகிய முகம்

----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்

____________________________________

தீயின் கிணறுகள் வெடித்து விரிகிற
நகரங்களில்
உன்னை பற்றியெறித்து விடிந்த
காலையில் உனது
கனதியான சொற்கள் தீப்பிடித்தன.

அணையாத பெருந்தீயில் எரிந்துருகியபோது
நமது தலையின் தீ கனக்கிறது.
வழிகள் அடைபட்டு வீடுகளை தீ வைத்து
வருகிற படைகளிடம்
இனத்தின் வேர் கருகுவதற்கான
தீ எரிக்கிற கோப்பையில்
நமது சொற்கள் போடப்படுகின்றன.

உயிர் வளர்த்த சொற்களினை
தேடுகிற உனது கடைசிச் சொற்கள்
எண்ணையில் மிதக்கிறது.

கதிரைகளை கிழித்தெறிந்த காலையின்
தீயில் சூரியன் வேகிட
வானம் வாடிப்போயிற்று.
தீயெழுதுகிற கவிதையின் சொற்கள்
பற்றி உயிர் எரிகிறது.

இன்னும் அணையாமல் பரவுகிற
தீயில் உனது சொற்கள் பிரகாசிக்க
தீயை கருக்கும் உயிரின் வாசம் பெருகுகிறது.

மண்ணை தின்னுகிற கால்களின்
அடியை உனது நினைவுத் தீயெரிக்கிறது.
உனதுறவுகள் புதைகிற மண்ணில்
எரிபடுகிற சாம்பலில் பெரும் கற்களென
உனது உயிரும் சொற்களும்
அனல் கொண்டு வருகிறது.

எரிந்து கருகிய முகத்தினை தேடுகிறது
நமது சனங்களின் தீக்கிடங்குகள்.
-----------------------------------------------------------------------------------
தீக்குளித்து தியாகச் சாவடைந்த முத்துக்குமரனுக்கு

Thursday, January 8, 2009

குழந்தைகள் பலிவாங்கப்படுகிற நகரம்


----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________

இங்கும் ஒரு தாயின் அழுகைதான்
நகரத்தை உலுப்புகிறது.
குழந்தைகள்தான்
பலியிடப்பட்டு அடுக்கப்படுகின்றனர்.

பேரீட்சைமரங்களின் கீழே
பாலஸ்தீனக் குழந்தைகள் தென்னை மரங்களை
தேடுகின்றதை நான் கண்டேன்.

எனது அம்மாவே நீ எங்கும்
குருதி சிந்துகிறாய்.
நமக்காய் குழிகளைக்கூட
வழங்க பிடிக்காத அதிகாரத்திடம்
குழந்தகைள் திரிகிற
நகரம் பலியிடப்படுகிறது.

காஸா எல்லைகளில்
இலங்கைப்படைகள்; மோத வருகிறது.
கிளிநொச்சியை இஸ்ரேல்படைகள்
முற்றுகையிடுகிறது.

குழந்தைகள் என்ன செய்தார்கள்?

நமது குழிகளில் கிடக்கிற
குழந்தைகள் அங்கு அடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் மேலுமாய்
சனங்கள் தோற்றுப்போகிற அதிகாரத்தை
கடக்க இயலாதிருக்கிறது?

அந்த நகரமும்
எரிந்துகொண்டுதான் இருக்கிறது.
குழந்தைகள்தான் உலகத்திடம்
பலிவாங்கப்படுகிறார்கள்.
தாய்கள்தான் விலைகொடுக்கிறார்கள்.

சிதைந்த சுவர்களினிடையில்
இன்னும் நுழைய
காத்திருக்கும் விமானம்
எனக்கு மேலால் அலைந்து திரிகிறது.

விழப்போகிற குண்டுகளிடமிருந்து
தப்புவதற்கு அலைகிற நம்மைபோலான சனங்களின்
குழியிலிடப்படுகிற நகரத்தில்
நானும் நசிந்து கிடக்க
காயங்களால் நீ அழுகிறாய்.

பாலஸ்தீனக் குழந்தைககளை
பலியிட அலைகிற
இலங்கை இராணுவத்தளபதி
வழிநடத்துவிக்கிற
காஸா எல்லையில் ராங்கிகள் முன்நகருகின்றன.

நகரத்துள் படைகள்
நுழைந்து குழந்தைகளை தேடுகிறபோது
நமது நகரத்தின்
அதே அழுகை ஒலி கேட்கிறது.

நெருப்புப்பிடித்து எரிகிற நகரத்தில்
அதன் புகையிடையில் நமது முகங்கள்
கிடந்து கறுப்பாகின்றன.

விமானங்கள் நகரத்தை
முழுமையாய் தின்று களிக்க
சாம்பலில் பிறண்டு அழுகிற தாயிடம்
நமது நகரத்தின் அதே
குருதிச்சொற்கள்தான் இருக்கின்றன.
-------------------------------------------------------------------------
01.01.2009,காஸா,பாலஸ்தீனம்.