Monday, March 17, 2008

கிணத்தினுள் இறங்கிய கிராமம்


கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------
எனது கிராமம் இப்பொழுது
கிணத்தினுள்
இறங்கியிருக்கிறது.

தவளைகள் தரித்திருக்கும்
பொந்துகளினுள்
ஒளிந்திருக்கும் அம்மாவே
உன்னைப் போன்ற
நமது கனவுகள் நிரம்பிய
பைகள்
மாமரத்தில் தொங்கியபடியிருக்கிறது.

நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.

காட்டில் பதுங்கியிருக்கும்
சூரியன்
பாலைமரங்களையும்
வீர மரங்களையும் விலத்தியபடி
புழுதி உதிர
நமது கிராமம் திரும்பிவிடும்.

சூரியனை காணாத
இரவோடிக்கிறது நமது நாடு.

கிணத்தினுள் நிரம்பிய
உனது வியர்வை வெளியில் வழிகிறது.

*பள்ளிப் பேருந்துமீது
ஒரு கிளைமோர் வெடிக்கிறது
பிணங்களாய் பள்ளி மாணவர்கள்
அடுக்கப்பட்டிருந்தார்கள்
புத்தக மேசைகளில்.

குழந்தை யேசுவை தூக்கி வைத்திருக்கும்
மாதாவின்
மடு தேவாலயத்தின்மீது
விமானங்கள் பறந்தடிக்கிறது.

**எனக்கு இளநீர் பருகத்தந்த
தோழன் ஒருவனின்
தலையை
விமானம் கடித்தெறிந்தது
அவனது தலை
இரத்தினபுரத்தில் கிடந்தெடுக்கப்பட்டது..


***கிராஞ்சியில் குழந்தைகளின்
கைகள் பிடுங்கி எறியப்பட்டன
கையில் கட்டியிருந்த
பாசி மணிமாலைகளும்
கிழிந்த பாய்களும் வலைகளும்
தென்னை மரங்களும்
மணல் தரையில் குருதியாய் கிடந்நது.
ரஷ்யா இன்னும் வேகமான
விமானங்களை
இந்த தலைகளின் மேலால் பறக்கவிடுகிறது.

கிணத்தினுள் தண்ணீர் ஊறுகிறது.

கருணாநிதியின்
கவிதைகளை கேட்க முடியாமலும்
ஜெயலலிதாவின் கூச்சல்களை
கேட்க முடியாமலும்
தவளைகள் கத்துகின்றன.

****கடைசியாய் இருந்த
முறிகண்டியின்
கச்சான்கடைகளாலான
வழி இறங்கு இடமும்
தகர்ந்து கிடக்கிறது
அம்மா உனது நேத்திகளும்
உடைந்த தேங்காய்களும்
தும்பிக்கை உடைந்த
பிள்ளையாரோடு.

கிராமம் கிணத்துக்குள் இறங்கிவிட
இராணுவத்தின்
கவசவாகனங்களும் ராங்கிகளும்
சேற்று நிலத்தில் புதைகின்றன
வீடு கடலில் இறங்கித் திரிகிறது.

தங்கச்சி கனவுகண்டு துடித்தெழும்பி அழுகிறாள்.

எனினும் நீயும் நானும்
நமது சனங்களைப்போலவே
இன்னும் நம்பிக்கையோடிருக்கிறோம்.
-----------------------------------------------------------------------------

*29.01.2008 செவ்வாய்க்கிழமை
மன்னார் மடுவில் இலங்கை இராணுவம் பள்ளிப் பேரூந்துமீது ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் 11 பள்ளி மாணவர்கள் உட்பட 20பேர் பலியாகியுள்ளனர்.

**02.11.2007 அன்று நடைபெற்ற விமானத்தாக்குதலில் எனது தோழன் நிர்மலசிங்கள். பலியாகினான்.

***பெப்ருவரி 22 பூநகரி கிராஞ்சியில் நடத்தப்பட் விமானத்தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பொதுமக்கள் பலியாகியிருந்தனர்.

****16.11.2007 நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் முறிகண்டியில் உள்ள மீன்பிடி படகு உற்பத்தி நிறுவனம் அழிந்தது. இது ஏ-9 வீதியில் பேருந்து தரித்து நிற்கும் முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலிருக்கிறது.
--------------------------------------------------------------------

Sunday, March 9, 2008

நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்




------------------------------------------------------------------
மரங்கள் பிடுங்கி
எரிக்கப்பட்டிருக்கும்
சாம்பல்மேட்டில்
நான் குந்தியிருக்கிறேன்.

வாயில் சிகரட்
ஓரு பாம்பாய் வழிகிறது
அதன் சாம்பலில்
கால்கள் புதைகின்றன.

சாலையில் நொருங்கிக் கிடக்கும்
கடதாசிச் சைக்கிள்களுக்கிடையில்
காணாமல் போன
காதலியை தேடி
துருப்பிடித்த
எனது சைக்கிள் அலைகிறது.

நொருங்கிய தேனீர்சாலையின்மீது
வழியும்
வெறுமைக்கோப்பை துண்டுகளை
நக்கிய நமது பூனைக்குட்டி
கால்களுக்கிடையில்
சோர்ந்து படுத்திருக்கிறது.

இப்பொழுது பியர்போத்தலினுள்
பாம்பு அடைக்கப்பட்டிருக்கிறது
கோப்பையில்
கரித்துண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறது.

கோழி சாப்பலை சாப்பிடுகிறது.

இலைகள் வாடிக்கொட்டின
கிளைகள் வெட்டி
மொட்டையடிக்கப்பட்ட
மெலிந்த தடிகளாய்
நிற்கும் மரங்களாலான
வேலியின் கீழ்
படுத்திருக்கும் ஆடு
பற்களை அசை போடுகிறது.

துருப்பிடித்து உக்கிய
சைக்கிள்கள்
பொது மண்டபத்தில் அடுக்கப்பட்டிருந்தன.

கரும்பேன்கள்
ஆடைகளை தின்றன
உக்கிய புத்தகங்களும்
ஆடைகளும்
தெருவின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டிருக்கிறது.

அவள் கருகிய பூவையே
சூடியிருந்தாள்
அவள் ஓட்டிச்சென்ற
சைக்கிள் நொருங்கிக்கிடந்தது
நாம் அமர்ந்து பேசிய
புல் வெளிமீதில்
சூரியன் உருண்டு துடிக்கிறது.

தடிகாளாய்ப் போன
மரங்களுக்கிடையில்
நிழல் தவித்துத் திரிகிறது.

பேரூந்தின் ரயரும் ரீப்பும்
மடிந்து பிய்ந்து கிடந்தது
காற்று வெளியேறியிருந்தது
கண்ணாடிகள் உடைய
துருப்பிடித்து கொட்டியது
உருக்குலைந்த
ஜன்னலின் ஊடாய்
நகரம் உள்நுழைந்து
ஒளித்திருக்கிறது.

ஒரு தாய் அதில் பயணம்போக
ஏறியிருக்கிறாள்
வீதி அறுந்து கிடக்கிறது.

காணாமல் போன இளைஞர்களின்
செருப்புகளும் குடைகளும்
கெல்மட்டுக்களும்
தாய்மார்களிடம் வழங்கப்பட்டன.

துடித்தபடி நானும் அவளும்
ஒருவரை ஒருவர் அணைத்தோம்
சாம்பலாய் உதிர்கிறது.
--------------------------------------------
அர்ஜென்றீனாவில் காணாமல் போன இளைஞர்களின் அன்னையர்கள் சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகளை மீட்க கடதாசிச் சைக்கிள்களை செய்து காட்சிக்கு வைத்தபடி போராடினார்கள். பின்னர் அந்த அன்னையர்களில் பலரும் காணாமல் போயிருந்தார்கள்.