Sunday, July 27, 2008

அடிமைகள் நகரத்தின் தீபாவளி

எழுதியவர்___________________________
--------------------------தீபச்செல்வன்


````````````````````````````````````````````````````````````
இந்த அடிமைகளும்
ஒரு தீபவாவளி கொண்டாடினர்.

வாகனங்கள் வீதியில்
இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன
ஒரு இராணுவ வண்டியின்
நீளத்தினுள்
முழு வீதியும் அடங்கி
நசிந்து கிடந்தது.

நேற்றிரவு வெட்டி
கொலை செய்யப்பட்டவர்களின்
துண்டுதுண்டு உடல்களும்
சனங்களோடு வீதியில்
ஒதுங்கி நின்றன.

அடிக்கடி அடிமைகள்
நகரத்தினுள்
கடல் நுழைந்து திரும்பியது.

வீட்டிலிருந்து சனங்களை
திறந்து
வெளியில் விடுகிற
சாவிக் காலை
கறுப்பாகிக் கிடந்தது
துண்டுதுண்டாய்
வெட்டி எறியப்பட்ட
வீதியல் கிடந்தன
குழந்தைகளின்
தீபாவளி உடைகள்.

அடிமைகள் நகரத்தில்
தீபாவளி ஒன்று நடந்ததுதான்.

வெடிகள் தீர்க்கப்பட்டன
ரவைகள் நிரம்பிய
நகரத்தின் நடுவே
குருதிப்புள்ளடியிடப்பட்ட
உடைகளை வாங்கி
திரும்பினர் சனங்கள்
அடிவாங்கிப் போகிற
சனங்களின் முதுகில்
கிடக்கின்றன பலகாரங்கள்.

வளைந்த சனங்களின்
முதுகில் பீரங்கியை
பூட்டி விடுகிறான் படையினன்
இந்த அடிமைகள்
குனிந்தபடி
தீபாவளி கொண்டாட
அனுமதிக்கப்பட்டனர்.
`````````````````````````````````````````````````````````````

No comments: