Monday, December 31, 2007

பயங்கர வாதிகளும் பதுங்குகுழிகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
காலாவதியான ஒரு
கொக்கக்கோலாவை சுற்றி
எறும்புகள் சூழ்ந்திருந்தன.

எனது வஸ்திரங்கள் கரைய
அதிகாரத்தின் முன்
நிருவாணமாய் நின்றிருந்தேன்
அது என்னை அடிமையாக்கி
பயங்கரவாதி என அழைத்தது.

புரட்சி ஒன்றின் விளிம்பில்
அடிமை பீடிக்கிறதை
நான் உணர்ந்தேன்
கூச்சலிட்டு சொல்லி உதருகிறேன்.

சனங்கள் நிறைந்த
எனது கிராமத்தின் மேலாக
வேக விமானம் ஒன்றை
உக்கிரேன் விமானி ஓட்டுகிறாள்.

பயங்கரவாதிகளுக்குள்
பதுங்குகுழிகள் பதுங்குகின்றன.

குழந்தைகள்
தாய்மார்கள்
முதியவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள்
என ஜநா அறிவித்தது.

நான் பயங்கரவாதி என்பதை
உரத்து சொல்கிறேன்.

என்னை அமெரிக்காவின் நேர்மை
தேடிவருகிறது
ஜநா படைகளும்
அமெரிக்காப் படைகளும்
இந்தியப் படைகளும்
இலங்கைப்படைகளைப்போல
எனது தெருவுக்கு வர
ஆசைப்படுகிறார்கள்.

நான் அப்பிள் பழங்களை
புசிப்பதற்கு ஆசைப்பட்டிருக்கிறேன்.
கிரேப்ஸ் பழங்களை
உற்பத்தி செய்யத்தொடகினேன்.

நான் ஒலிவம் இலைகளை
மறந்திருந்தேன்
பேரீட்சை பழங்களை
உண்ணாதிருந்தேன்
எனது பனம்பழங்களை
இழக்க நேர்ந்தது.

ஒட்டகங்களின் முதுகில்
குவிந்திருந்த பொதிகள்
சிதைந்ததை நான் மறந்தேன்
எனது மாட்டு வண்டிகள்
உடைந்து போயின.

தலைவர்களின் இடைகளில்
எண்ணைக்குடங்கள் நிரம்பியிருந்தன
அவர்களின் கூடைகளில்
எனது பனம்பழங்கள்
நிறைக்கப்பட்டிருந்தன.

கனியின் விதை கரைய
என்மீது கம்பிகள் படர்ந்தன.

02
திருவையாற்றில் குருதி
பெருக்கெடுத்து ஓடுகிறது
பிணங்களை அள்ளிச் செல்கிறது
வெங்காயத்தின் குடில்கள்
கருகிக்கிடந்தன
தோட்டம் சிதறடிக்கப்பட்ட
செய்தியை அமெரிக்கா வாசிக்கிறது.

இரணைமடுவில் பறவைகளின்
குளிர்ந்த சிறகுகள் உதிர்ந்தன
தும்பிகளும் நுளம்புகளும்
எழும்ப அஞ்சின
இரணைமடுக்குளத்தில்
குருதி நிரம்ப பிணங்கள் சேர்ந்தன
நோர்வேயின் படகு மிதக்கிறது.

இந்தியாவும் பாகிஸ்தானும்
ஆயுதங்கள் பெருக
எனது ஊரின் நடுவில்
போரிட்டுக்கொண்டிருக்கிறது.

உலைப்பானைகளும்
அடுப்புகளும் சிதைய
எனது மனைவி நசிந்து கிடந்தாள்.

எனது வீதியை ஜப்பான்
சுருட்டி எடுத்தது
அமெரிக்காவும் ஜநாவும்
எனது குழந்தையை
பள்ளியோடு கொன்று விட்டது
பிரித்தானியாவின்
சிறையில் நானிருந்தேன்.

ஒரு மாம்பழத்தை தின்பதற்கு
எல்லோரும் அடிபட்டு
எனது காணியை சிதைத்தார்கள்
கத்திகளை இன்னும்
கூர்மையாக்கி வருகிறார்கள்.

இந்தியாவும் அமெரிக்காவும்
எனது தலையில்
காலுன்ற அடிபடுகிறது
சீனாவும் ரசியாவும்
எனதூர் ஆலயத்தின்
கூரைகளை பிரித்துப்போட்டது.

நான் முதலில் அமெரிக்காவிற்கு
பதில் சொல்ல வேண்டும்

கோதுமைகளுடன்
அமெரிக்காவின் கப்பல்
திருமலைக்கு வருகிறது
அமெரிக்கா எனது படத்தை
குறித்திருந்தது
ஜநா எனது குழந்தையின் படத்தை
குறித்திருந்தது.

எல்லாவற்றக்காகவும்
வலிந்து விழுங்கிய
அதிகாரங்களால்
நான் பயங்கரவாதி எனப்பட்டேன்
ஒடுக்கப்பட்டவர்களின் கூட்டத்தில்
நான் தூக்கி எறியப்பட்டேன்.

நமது ஓலங்களிற்குள்
பெருகும் குருதி ஆறுகளிற்குள்
சந்தை பரவி நிகழ்ந்தது.

அமெரிக்கா இரணைமடுவுக்கு
ஆசைப்படுகிறது.
---------------------------------

Thursday, December 27, 2007

காகத்தின் நிழலும் கிழிந்த பைகளும்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

மெலிந்த மனிதர்கள் மீது
காகங்கள் பறந்து
வற்றிக்கொண்டிருந்தன.

வாயிலிருக்கும்
மிகச்சிறிய வடையில்
ஆயிரம் இலையான்கள்
மொய்க்கின்றன.

கோப்பையில்
தேனீர் வற்றியிருக்க
மேசை வெளித்திருக்கிறது.

சோறு காய்ந்து
அழிந்து போயிருக்கும்
உணவுத்தட்டுக்களை
தெருநாய்கள்
காவிவந்து தின்கின்றன.

பழைய செய்தித்தாள்
ஒன்றில் கட்டப்பட்ட
ஒரு சோற்றுப் பார்சலை
ஜந்தாறு குழந்தைகள்
பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

சோற்றுப்பானைகள்
ஓட்டையாய்ப்போயிருக்க
தேனீர்க்கோப்பைகள்
உடைந்து போயிருக்க
வீசப்பட்டிருந்தன.

கிழிந்த பைகளோடு
மனிதர்களை
ஏற்றிய ஒரு பேரூந்து
உள் வீதிகளுக்குள் அலைகிறது.

காகங்கள்
கூரைகளை தின்கின்றன.
-------------------------------------------

Monday, December 24, 2007

எலும்புக்கூடுகள் நிறைக்கப்பட்ட வகுப்பறை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

னது முகத்தின் வெளியில்
மெளனம் ஒட்டப்பட்டிருந்தது.

எனது குரலை மடித்து
புத்தகத்தின் நடுவில்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

ஒரு சிறுவன் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.

ஒரு முதியவர் மீது
இராணுவம் துன்புறுத்தி
தாக்கியதைக் கண்டேன்.

எனது வெள்ளைச் சீருடைகளின்
நிறங்கள்
உதிர்ந்து விழுந்தன.

எனது கண்களின் மீது
படர்ந்திருத்த
அந்த வன்முறைக்காட்சிகள்
இமைகளை அரித்து
விழிகளை குடைந்தன.

குருதி ஓட்டத்தில்
முளைத்திருந்த உலகம்
கரைந்து தொலையத் தேடினேன்.

அவர்களுக்கு.. எனக்கு..
என்று நீளுகிற
அந்த சீருடைகளின்
கொலுத்த அதிகாரம்
எனது இனம்
முழுவதுமாய் பரவுகிறது.

நமது குழந்தைகளின்
முகங்களை குத்துமளவில்
நீண்டு கூர்மையாயிருந்தது.

நிறைக்கப்பட்ட துப்பாக்கிகளின்
களியாட்டம்
சிறிய சைக்கிளில் போகும்
சிறுமி மீதான குறியாயிருந்தது.

எல்லோருடைய முகங்களும்
சுருங்கியிருக்க
தீராத வலிகள்
எழுதப்பட்டிருந்தன.

மனித நேயமும் உரிமைகளும் பற்றி
பாடம் நடத்தப்படட்ட
வகுப்பறையின்
கூரைகளிலும் சுவர்களிலும்
கிழிந்த புன்னகையோடு
எலும்புக்கூடுகள் வரைந்து
நிறைக்கப்பட்டிருந்தன

புத்தகத்தின் நடுவில்
வைத்திருந்த எனது குரல்
சைக்கிளில் சென்ற
சிறுமியைப் போல
கரைந்து கிடக்கிறது.
------------------------------------------

Wednesday, December 19, 2007

பாம்பு விழுங்கிய நிலத்தில் கிடந்த மோதிரங்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
டைந்த வானத்தின் கீழாக
நிலவு
தொங்கிக்கொண்டிருந்தது
நட்சத்திரங்கள்
பேரிரைச்சலோடு
புழுதியில் விழுந்து கிடந்தன.

கனவு நிரம்பிய
அழகிய வாழ்வில்
புழுக்கள் நெளிந்தன.

எனது காதலியின் முகம்
ஒடுங்கிக்கொண்டிருந்தது.

அச்சம் அவளின்
முகத்தில் கசிந்து
நாடி வழியாக
வழிந்து கொண்டிருந்தது.

எனது கைகள் சோர்ந்திருந்தன.

நாம் அணிந்திருந்த
மோதிரங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரையத்தொடங்கின.

இருவருடைய மடிகளிலும்
மரணம் பிசுபிசுத்தது.

அவள் எனது கன்னங்களில்
அச்சம் பீறிடக் கண்டாள்
நான் அவள் உதடுகளில்
ஏக்கம் வழியக் கண்டேன்.

நமது கண்கள்
தத்தளிக்க வாழ்வு
அந்தரத்தின் துயரத்தில்
ஆடிக்கொண்டிருந்தது.

சிறிய துண்டு நிலத்தில்
கசங்கிய துணி விரிக்கப்பட்டிருந்தது.

பாம்பு விழுங்கிய
நிலத்தின் மீதியில்
நமது சொற்கள்
உயிரற்றுக்கிடக்க
உரையாடல்கள்
மடிந்துகிடந்ததன.

எனது முகம் சுருங்கிக்கொண்டிருந்தது.

நமக்காய் சிரட்டையில்
எடுத்து வைத்திருந்த
கஞ்சியில்
ஒரு துண்டு செல்
வந்து விழுகிறது.

நமது உடல்களில்
விசம் பரவ
துண்டு நிலமும் சிதைகிறது.
-------------------------------------

ஒற்றைகையின் குறிப்பு

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
னது முகத்தை
நான் பறிகொடுத்துவிட்டேன்
பதுங்குகுழியின்
அழுகையின் ஓரத்தில்
உனது புன்னகை
எறிந்து கிடக்கிறது.

பதுங்கு குழிக்காக
எல்லோரும்
நிலத்தை அளவெடுக்கிறார்கள்
அதன் இன்றைய
பொய்மையில்
உனது தோற்றம்
சிதறி கிடக்கிறது.

உனக்கு ஒரு விமானம்
உனது தம்பிக்கு
ஒரு விமானம்
ஆளுக்கு நான்கு குண்டுகள்
மொத்தம்
இருபது குண்டுகளுக்கு
உனது குடும்பம்
பதிலளித்திருக்கிறது.

நீ ஒரு மாணவனாக
இருக்கலாம்
உன்னோடு
உனது வெள்ளைச்சீருடை
புத்தகங்கள்
பேனாக்கள் மீதெல்லாம்
உனது இன அடையாளத்தின்
அடிப்படையிலேயே
குண்டு வீசப்படும்.

தேசிய பாதுகாப்பு
என்கின்ற அட்டவணையின்
வரிசையில் இன்று
நீஇ உனது குடும்பம்
தெரிவுசெய்யப்பட்டு
அழிக்கப்பட்டிருக்கிறது.

இனி நீ அணிந்திருந்த
வெள்ளை சீருடையும்
வைத்திருந்த புத்தகங்களும்
மறைக்கப்பட்டு
ஆயுதம் தரித்திருந்தவனாகவே
கருதப்படுவாய்
உனது வீட்டினுள்ளிருந்து
அவர்களின் தேசிய பாதுகாப்பை
அச்சுறுத்தும்படி
நடமாடியவனாகவே
பார்க்கப்படுவாய்.

உனது அப்பாவித்தனமான
குருதியை திருகி
குடித்து
ஏப்பமிடுகிறது
அதிகாரம் தங்கிய
ஜனநாயகம்.
-----------------------------------------

01.11.2006 அன்று என் வீட்டிற்கு அருகில்
இலங்கை அரச விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
கிளிநொச்சி வைத்தியசாலைக்கு பின் புறமாக
இடம்பெற்ற இந்தத்தாக்குதலில்
எனது கல்லூரியைச்சேர்ந்த(கிளிநொச்சி।மத்திய கல்லூரி) மாணவரான ச.கிருசாந்தன் பலியாக்கப்பட்டிருப்பதை இந்தப்படத்தில் காணலாம். அவருன் அவரது சகோதரன் மாணவன் ச.சசிக்குமார் உட்பட வீட்டார் ஜந்து போர் கொல்லப்பட அவர்களின் வீடு காணி என்பனவுடன் குடும்பம் தரைமட்டமாய் அழிந்தன.
விடுதலைப்புலிகளின் இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டதாகவும் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் எனவும் இராணுவப்பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத்சமரசிங்க கூறுகிறார்.
------------------------------------------------------------------------------------------

பேய்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


முகாரி ராகம்
கேட்கிறது..

இங்கே
மாமிச பிண்டங்களின்மீது
நடந்து கொண்டு
அவைகள்.....
எங்கும் இரத்த
ஆறு பாய்கிறது
எங்கள் உடலங்கள்
சிதைந்து
விதைந்து கிடக்கின்றன.

எஞ்சிய உயிர்கள்
போகுமிடம்
அறியாது
பொதிகளை சுமந்தபடி
போகின்றன
நிர்வாணமாய்
துடிக்கிறது நெஞ்சம்.
பருந்துகள்
இதைப்பார்த்து
வருந்தவில்லை
மாறாக அருந்துகிறது
எங்கள் சடலங்களை
எங்கள் துயரங்களை
எங்கள்
முகாரி ராகத்திற்கு
அவைகள் முகமகிழ்ந்து
கூத்தாடுகிறது.

எங்கள் துயரங்களை
மாலையாகப்
போட்டுக்கொண்டு
எங்கள் மரணங்களை
சலங்கையாக
கட்டிக்கொண்டு

அந்தப்பேய்கள்.
---------------------------------------------------------------------------------------

இந்தக் கவிதை 2004ஆம் ஆண்டு நான் முதலில் எழுதிய கவிதை ஆனால். 2005இல்தான் இது என் ஒருசில கவிதைகளுக்கு பிறகு பிரசுரமானது..

------------------------------------------------------------------------------

பூனையும்நாயும் நிரம்பியவீடு

கவிதை___________________________
--------------------------
தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
என் சப்பாட்டிற்குஅருகில்
என்பூனை காவலிருக்கிறது
சாப்பாட்டின் மிகுந்தவாசனையில்
உடைகள் வேகமாக கழறுகின்றன.

வீட்டிற்கு வெளியே இப்பொழுதெல்லாம்
மனிதர்களை சந்திக்கமுடிவதில்லை
நடமாடித்திரிபவர்களிடம்
உண்மை முகங்கள்
மருங்கியிருக்கின்றன
வீடு வரும்பொழுதெல்லாம்
அந்த மனிதர்களின்
பொய்முகங்கள் பின்தொடர்ந்து
துன்புறுத்துகின்றன.

பூனை கால்களை உரசும் பொழுதெல்லாம்
எல்லா வலிகளும் அகலுகின்றன
நிம்மதியை கெடுக்கிற
ஒலிகளின் மத்தியில்
பூனையின் குரல்
சங்கீதமாய் ஒலிபரப்பாகிறது.

எங்கள் வீட்டில்
பூனைக்கும் நாய்க்கும் கூட
நல்லநெருக்கம் இருக்கிறது
அவைகளின் தோற்றம் விகாரப்பட்டு
நெருக்கத்தின் வடிவமாய்
சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தன.
பூனையும் நாயும்
எப்பொழுதும் ஞாபகமாயிருக்கின்றன.

வீட்டில் நெருக்கமும் ஆறுதலும் பரவுகிறது
அமைதியும் ஒழுங்கும் நிலவுகிறது
பூனையும் நாயும் கூடிய எனதுவீடு
எப்பொழுதும்
எல்லாவற்றுக்குமாக காத்திருக்கிறது.
-----------------------------------------

Tuesday, December 11, 2007

இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
தூரம் நீண்டிருக்கிறது

இரவுமீது ஒருசிவப்புப் பறவை
வந்து அமர்ந்திருக்கிறது
எனது உணவுத்தட்டில்
தண்ணீர் காய்ந்திருக்கிறது.

அம்மாவின்
சிரட்டையிலான அகப்பை
பாவனையற்று
பரணியில் வறண்டு கிடக்கிறது.

நூலகத்தோடு
முடிவடையும் வீதியில்
வெறும் சன்லைட்டுப் பைகள்
கிடக்கின்றன.

தொலைத்தொடர்பு கம்பிகளிற்குள்
அடையாள அட்டை
சொருகிய முகங்கள்
அழைப்பிற்க்காய் காத்திருக்கின்றன.

அம்மாவின் அழைப்பு
வந்து திரும்பிப் போகிறது.

மேலதிக விலையில்
வாங்கப்பட்ட
போனா அடிக்கடி
விழுந்து உறங்குகிறது
எழுத்துக்கள் சிறுத்து
பெருகிக்கொண்டிருக்கின்றன.

நடுங்கிக்கொண்டிருக்கும்
கை விரல்களின்
நகங்களின் நிறம்
வெளுக்கிறது.

மேசையில் குவிந்திருக்கும்
புத்தகங்களிற்கிடையில்
மிகத்தாமதமாக
கிடைக்கப்பெற்ற
தங்கையின் கடிதம்
மீண்டும் வாசிக்க கிடக்கிறது.

இன்றோடு தீரும்
சிறிய துண்டு
மெழுகு வர்த்தியின்
சுவாலையின் கடைசித்துளி மீதில்
ஒரு வெள்ளைவான்
ஒளிந்திருக்கிறது.
-----------------------------------------------------------

Monday, December 10, 2007

மாடு சூரியனை மேய்ந்து விட்டுப்போகிறது

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

ல்லா வார்த்தைகளும்
தகர்ந்து விட்டன
மிக வேகமாக வீசியெறியப்பட்ட
அந்தக் குரூரக்கல்லில்
நமக்காயிருந்த
வார்த்தையின் கடைசிமலர்
உடைந்து கிடக்கிறது.

மிஞ்சியிருந்த சொற்களின்
வாசனையும்
குளிர்மையும்
நெருப்பாய் தகிக்கிறது.

எல்லோரும்
சேர்ந்து வெளியிட்ட
மிகப்பெரிய புன்னகை
ஒரு சூரியனில் பிறந்து
அதுவாய் விளங்கியது.

அதன் நிறம்
சிதறடிக்கப்பட்டிருக்கிறது
கீற்றுக்கள்
பிய்க்கப்பட்டுள்ளன.

எல்லாக் கைகளின் முன்பும்
மலராய்க்கிடந்தது.

நமது குரல்களின்
எல்லா வார்த்தைகளாயும்
சிறகுகளாயும்
விரிந்து பறந்தன.

பூந்தோட்டத்தில் வைத்தே
நமது மலர்
சாகடிக்கப்பட்டது
ஒரு அதிகாலையிலேயே
நமது சூரியன்
கிழித்துப் போடப்பட்டது.

கிணறு வற்றி
வெறுமையாய்க் கிடக்கிறது.

நிறம் மாறிய புன்னகைகளும்
ஒலியின் முனைப்புகளுமற்ற
வார்த்தைகளும்
நமது வேலியில்
சிக்குப்பட்டுக் கிடக்கிறது.

வேலியில் அமர்ந்து காத்திருந்த
பறவையின் முகத்தில்
இப்பொழுது
மாடு ஒட்டப்பட்டிருக்கிறது.

கிணற்று வாழியில்
தண்ணீர் குடித்த மாடு
மலரை சிதைத்துவிட்டு
சூரியனை மேய்ந்து கொண்டு
வெள்ளையாய்ப் போகிறது.
----------------------------------------------

Sunday, December 9, 2007

இந்த நாகரிகத்தின் வேர் படுகிறது

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

01
ங்களில் யாருக்கும்
இங்கு வாழ்க்கையில்லை
படையெடுத்து வந்தவர்களின்
வாழ்வுக்குள் நசியக்கூடிய
சிறிய வாழ்க்கை ஒன்றை
ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்.

இனி யாருடைய ஆதிகளும்
இங்கிருப்பதாய்
மார்பு நிமித்த முடியாது
இப்பொழுது
நிமிர்ந்த மார்புகள்தான்
சரிக்கப்பட்டிருக்கின்றன
இந்தக்குறியில்
எப்படி நாங்கள்
நமது மார்புகளை
நிமித்தப்போகிறோம்?

நாம் எல்லோரும்
குனிந்து கொண்டுதானே
போகிறோம்.

02
எங்கள் நாகரிக்தின்
வேர் படுகிறது
இந்த நகரத்தை விட்டு
ஒவ்வொருவராக
வெளியேறி வருகிறார்கள்
இது கைவிடப்பட்ட
நகரமாகிறது
துண்டிக்கப்பட்ட
தனிமையிலிருக்கிறது.

ஆதியை துறந்தவர்களாய்
வெளுறிய வீதிகளிலிருந்து
கால்களைத் தூக்கி
படகுகளில் நிரப்பி
மடக்கிக்கொள்கிறார்கள்.

இந்த நகரத்தை
யாருக்காக விட்டுச்செல்கிறோம்?
இங்கு யாருடைய வாழ்வு
சாத்தியப்பட்டடிருக்கிறது?

03
நாங்கள் ஒரு சங்கில்லியன் சிலை
வளர்த்திருக்கிறோம்
இப்பொழுது
சங்கிலியனின் சிலையை
எங்களால் நிமிர்ந்து
பார்க்க முடியாதிருக்கிறது
அது சிதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
ஜயத்துடன்
கண்களை வேலியின் கீழாக
சொருகிப்போகிறோம்
எங்கள் முன்னவர்களின்
நடுகல்கள்,நினைவுத்தூபிகள்
சில இரவுகளில்
அகழ்ந்து மண்ணாய் கிடக்கிறது
எங்களின் மம்மிகள்
இல்லை என்றாகின்றன.

இனி இந்த சுவர்களுக்ககு
வண்ணம் பூசவியலாது
அதில் பாசி படர்ந்திருக்கிறது
எங்கள் வாசகங்கள்
மறைக்கப்பட்டுவிட்டன.
எங்கள் சுவர்களின் ஆணிகள்
துருப்பிடித்து உக்கிவிட்டன.

எங்கள் நாகரிகத்தின் சுவடுகளை
சுவர்களில்
தொங்கவிடமுடியாது.

சிறைச்சாலை வண்ணம் பூசப்பட்டிருக்கிறது
அரச சிறைச்சாலை
அடைக்கலம் புகுவதற்கும்
அகதிகளாக்குவதற்கும்
தரப்பட்டிருக்கிறது
நாங்கள் நடமாட முடியாது
உயிரைப்பொத்தி வைத்திருக்கலாம்
கால்களில்
கட்டுப்போடப்பட்டிருக்கும்.

04
துப்பாக்கிகளால்
தவரவிடப்பட்டவர்களாயிருந்தாலும்
எதுவரை வாழப்போகிறோம்
எப்படி இங்கு ஒரு சந்ததி
உருவாகப்போகிறது?
நீ சந்ததியை உருவாக்க
திறனற்றவனாக்கி
விடுவிக்கப்பட்டிருக்கிறாய்
இவளின் கருவிலிருக்கும்
குழந்தையின் ஆயுள்
எவ்வளவு நீளமானது?
குழந்தையைவிட
இவளின் கருவில்
என்ன நிறைந்திருக்கிறது?

நீ குழந்தைகளுக்காக
சுவர்களில் வரைந்நிருந்த
உனது நாகரிகத்தின்
வீரதீர காட்சிகள் அழிந்துவிடட்ன
மீண்டும் அதை உன்னால்
வரைய இயலுமா?
நமது நாகரிகத்தின்
நிறங்கள் உதிர்கையில்
உருவப்படுகையில்
வெளுறிய பிள்ளைகள்
காலம் பிசகிய
பள்ளிக்கு போகிறார்கள்.

05
நிறைய வீடுகள்
பூட்டடப்பட்டிருக்கின்றன
பாழடைந்து விட்டன
நிறையவீதிகள் சருகுகளால்
நிரம்பி உள்ளன
ஒன்றில் அவர்கள்
வெளியேறியிருப்பார்கள்
அல்லது
கொலைசெய்யப்பட்டிருப்பார்கள்
சில வீடுகள்
சோபையிழந்து புகைகின்றன
அங்கு அவர்கள்

ஊமைகளாக்கப்பட்டிருக்கலாம்
குருடர்களாக்கப்பட்டிருக்கலாம்.

இங்கு யாருடை விழிகள்
திறந்திருக்கின்றன?
இங்கு யாருடைய வாய்கள்
பேசுகின்றன?
இங்கு யாருடைய நடமாட்டங்கள்
நிகிழ்கின்றன?

எங்கள் வீதி என்ற
துணிச்சலுடன் போகிறோமா?
நாம் பிரதான வீதியில்
செல்ல அனுமதிக்கப்படுகிறோமா?
வைத்தியசாலைப்பயணத்ததிற்கு
ஒரு மூதாட்டி நெடு நேரமாய்
காத்திருக்கிறாள்
எல்லோரும் தடுக்கப்பட்டு
உள்வீதிகளில்
நிறுத்தப்பட்டிருக்கிறோம்
இவைகளில் நசுங்கி
சில பிள்ளைகள்
தாமதமாக பள்ளி போகிறார்கள்.

06
நமது நாகரிகத்தின்
வேர் படுகிறது
நமது நாகரிகத்தின்
வாழ்வு அழிந்துவிட்டது
என்பதை வெட்கத்துடன்
ஒப்புக்கொள்வோமா?

இந்தக்குடா இப்பொழுது
எதற்கு விரிந்திருக்கிறது?

படையெடுத்தவர்கள்
நிறைந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு கையாள
பயங்கர ஆயுதங்கள்
நிறைந்திருக்கின்றன
அவர்கள் மரணத்தை
நிறைத்திருக்கிறார்கள்.

இதற்குள்ளளாகவே அந்த
வாழ்வு தரப்பட்டிருக்கிறது
நிறம் உருவப்பட்ட
வாழ்வை ஏற்க
நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்
அல்லது அரச படகு இருக்கிறது
கால்களை மடக்கி
அதில் ஏறிப்போகலாம்?

நமது வாழ்வில் வழியும்
வெட்கத்தை துடையுங்கள்
நாம் நமது மார்புகளை
எப்படி நிமித்த வேண்டும்?
இந் த நாகரிகத்தின் வேரை
எப்படி துளிர்க்கச் செய்யவேண்டும்?
நமது வர்ணங்கள் எங்கிருக்கின்றன?
நமதேயான வாழ்வை
மீட்டெடுக்க வேண்டும்..
---------------------------------------
யாழ்நகர்செல்படலம்2007

குட்டி மானின் புள்ளிகள்.


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

அந்த குட்டிமானை யாரோ
துரத்திக்கொண்டிருக்கிறான்
துரத்திக்கொண்டு வருபவன்
இராமனாக இருக்கலாம்
இரவணனாக இருக்கலாம்
மான்மீது
சீதையும் ஆசைப்பட்டிருக்கலாம்
சூர்ப்பனையும் ஆசைப்பட்டிருக்கலாம்.

குட்டிமானின் கண்களிள்
தவிப்பு பெரியளவில்
ஊறி சிந்திக்கொண்டிருந்தது.

அந்த மான் மாரீசனாக இருக்கலாம்
சூர்ப்பனையாக இருக்கலாம்
சீதையாக இருக்கலாம்.

இப்பொழுது மானாகவே தெரிகிறது
மானின் காலடியில்
பொறிகள் இருக்கலாம்
கால்சுவடுகளில் பொறிகள் முளைத்திருக்கலாம்.

மானே பொறியாக இருக்கலாம்.

கால்கள் இடருப்பட
கால்களை விரித்து ஒதுக்கி
மான் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது
மானகா மாறியவர்களும்
மானிற்கு ஆசைப்பட்டவர்களும்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

காடுகள் நீண்டு பரந்திருக்கின்றன.

இப்பொழுது
மானைப்போலவே
எல்லோருடைய கண்களிலும்
தவிப்பு பெரியளவில் சிந்துகிறது.

Friday, November 30, 2007

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01
ருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

02

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்

பதுங்குகுழியினுள்
அவர்களின் பள்ளிக்கூடங்கள்
தொலைந்துவிட்டன.
இசையின் நாதம்
செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறக்கின்றன

மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.

நமது வாடிய முலைகளுடன்
மெலிந்த குழந்தைகளை பெற்று
புன்னகைப்பட்ட
நாடு செய்கிறோம்.
இந்தப் பதுங்கு குழியில்
கிடக்கும்
எனது குழந்தையின் தாலாட்டில்
நான் எதை வனைந்து பாடுவது?

03

தாய்மார்களின் வற்றிய
மடிகளின் ஆழத்தில்
குழந்தைகளின் கால்கள்
உடைந்துகிடக்க
பாதணிகள்
உக்கிக்கிடந்தன.

அவர்களின் உதடுகள்
உலர்ந்து கிடக்கின்றன
நாவுகள் வரண்டு
நீள மறுக்கின்றன
நாங்களும்
திறனியற்ற நாவால்
இந்தக் குழந்தைகள்
கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?

04

குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

எதையும் அறியது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்

05

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்;த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்

அது நாளை என்னிடம்
ஜனாதிபதியையும்
இராணுவத் தளபதிகளையும்
விசாரிக்கக்கூடும்
நான் நிறையவற்றை
சேமித்துவைக்க வேண்டும்.

கண்ணாடிகளை உடைத்து
தண்ணீரைக் கிறுக்கி
எங்களை நாங்கள்
காணாமல்
இருட்டில் வாழ்ந்தோம் என்றும்
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின்
தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கருத்திருந்தது என்றும்
நான் கூறவேண்டும்.

06

நான் மலட்டுத் தன்மை அடைவதற்கு
வேண்டியதற்காக
அப்பொழுது வெட்கப்பட வேண்டியிருக்கும்
ஏதாவது பேசுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
என்ற எனது உரையால்கள்
தலைகுனிந்து கிடக்கும்

07

பதுங்குகுழிக்குள்
எனது குழந்தையின் அழுகை
உறைந்துவிடுகிறது

08

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
---------------------------------------------------

கடைசி உணவு நாட்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்
__________________________________________


------------------------------------------------------------------
01
மது கோப்பைகள்
வெறுமையாயிருக்கின்றன
துயரங்கள் நிரம்பிய
கோப்பைகளோடு
நாட்கள் கடைசியாகிவிட்டன.

கோப்பையில்
நிரம்பியிருக்கும் துயரத்தை
என்னால் சாப்பிடமுடியவில்லை.

இருட்டுப்பந்தலில்
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன
நான் திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றிற்கு
போகப்போகிறேன்
நான் வாழமுடியாத
நகரம் ஒன்றில்
தங்கியிருக்கப்போகிறேன்.

கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.

02
எனக்கு மிகவும் பிடித்த
தோழனே
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது
சாந்தம் அழிந்திருக்கும்
உனது முகத்திலும்
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்
உனது கண்களிலும்
சூழ்ந்திருக்கும் துயரத்தை
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது
நான் உன்னோடு
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.

நமது விளக்குகளை
இரவுகள் விழுங்கிவிட்டன
எனது பயணம்
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.

நாம் வளர்த்த மரத்தின் கீழ்
அடையாளம் தெரியாத
நிழல் படருகிறது
அந்த மரத்தின் வேர் படுகிறது
சந்தர்ப்பங்களற்றிருக்கும்
நமது நாற்காலிகளில்
தெரு நாய்கள்
மலம் கழித்திருக்கின்றன
சிறு நீர்பெய்திருக்கின்றன.

எனது கோப்பை நெழிய
உணவு பழுதாகி கிடக்கிறது.


03
தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.

நம்பிக்கையற்ற நகரத்திற்கு
நம்பிக்கையின்றியே போகிறேன்
பயங்கரம் நிரம்பிய
வீதிகளில் நடக்கப்போகிறேன்
ஆபத்தான வண்டிகளில்
ஏறப்போகிறேன்
சுடும் வெந்நீரில்
நீந்தப்போகிறேன்
நான் திரும்புவதைப்பறிறியே
நீ யோசிக்கிறாய்?

நாம் நிச்சயமற்ற இனத்திலே
பிறந்திருக்கிறோம்
அவர்களது கோப்பையில்
நிரம்பியிருக்கும்
எனது குருதியை நினைத்து
அச்சப்படுகிறாய்
பலிகளுக்கு ஏற்கப்பட்ட
இனத்திலிருந்து பேசுகிறோம்.

04
அதிகாரங்கள் நம்மை
தேடி வதைக்கின்றன
வன்முறைகள் நம்மை
மொய்கின்றன
நமது அலைச்சல் நீளுகிறது
நாம் அமைதிக்காக
அதிகாரங்களோடு போராடுகிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த தோழனே
நான் போகிறேன்
எனக்காக முகத்தினோடு.
மிகப்பாரமான
எனது பயணப்பையில்
இந்தக்குரல்
மொத்தமாய் கிடக்கிறது.
--------------------------------------------------

Wednesday, November 28, 2007

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.
_________________________

Tuesday, November 27, 2007

ஏ-9 வீதி

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

நமது நகரத்தை சூழ்ந்திருந்த
எல்லா எண்டிகளும் புறப்பட்டுவிட்டன
புனரமைக்கப்பட்ட வீதி
மீண்டும் தனித்திருக்கிறது
நம்மிடம் இப்பொழுது
ஒரு பயங்கர அமைதியும்
குரூர கலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளயைடித்து பயணிக்கப்பட்ட
இந்த வீதியை சிதைப்பது பற்றி
யாரிடம் முறையிடுவது?
அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?
குருதியால் பெறப்பட்ட
சிவப்பு வீதியின் வரலாற்றை
வெள்ளைத்தோரணங்கள்
பிரதிபலிக்காமலே போய்விட்டன
வீதி கிழிந்து கிடக்கிறது.

இது எனது வீதி
எனது வீட்டிற்கு பிரதானமானது
எனக்காக நீளுகிறது
இதற்காக நம்மில் பலர்
குருதி சிந்தியிருக்கிறார்கள்
உயிரை புதைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த வீதி
பசியின் வரலாறாகவும்
நோயின் தரிப்பிடமாகவும்
உயிர்களை பறிகொடுக்கிறது
நிழலுக்காக முளைத்த
பனைமரங்களின் கனவுகள்
தின்னப்படுகிற முகாமாகிவிட்டது.

பனைமரங்களை தறியாதீர்
என்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன
எத்தனை பனைமரங்கள்
காயப்பட்டிருக்கின்றன
எத்தனை பனைமரங்கள்
அழிந்துவிட்டன
எதிர்கால பனைமரங்களுக்கான
விதைகளும் நாற்றுக்களும்
எங்கிருக்கின்றன.?

வந்த வண்டிகள் எதையோ
ஏற்றி விட்டு திரும்பிப்போகின்றன.
எங்கள் வண்டிகள் எதுவும்
எரிபொருள் இன்றி நகருவதில்லை
வெள்ளைப்போர்நம்மை சூழ்கிறது.

எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?
_________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 11 2007 உடன் ஏ-9 வீதி
மூடப்பட்டு ஒரு வருடமாகிறது

நீயும் நமதுகுழந்தைகளும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

னது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்

நாம் புன்னகைக்காலம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னைகக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்

யார் முதலில்
பயங்கரத்தை துறப்பது என்பதில் கூட
நமக்குள் இழுபறியும் பிடியும்.
பயங்கரத்தின்
முரண்களுக்குள்
நமது குழந்தைகள்
புதைந்து போகிறார்கள்.

உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்.

இப்போது நமது
மௌனத்திலும் பயங்கரம்
பாய்ச்சி வழியவிடுகிறோம்.

குழம்பிய நித்திரையில்
நமது குழந்தைகள்
தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளார்கள்
அவர்கள் எழும்பியதும்
நாம் பதில் கூறவேண்டும்
அவர்கள்
நமது விரல்களைத்தான்
நோக்கப் போகிறார்கள்

அவர்களுக்காக நம்மிடம்
என்ன பதில் கிடக்கிறது?
பயங்கரத்தை தவிர
எதையும் குழப்பதேவையில்லை
பயங்கரத்தை கூட
பகிரத் தேவையில்லை
முற்றங்களை
விழுங்காமல் இருப்போம்

நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
----------------------------------------------------------

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
தானியங்கள் வீடுகளில்
நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய
கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லா பாதைகளும்
தலையில்
பொதிகளை சுமந்திருக்கின்றன.

எல்லோரும் ஒருமுறை
நமது கிராமங்களை
திரும்பிப்பாருங்கள்
இப்பொழுதே
தின்னைகள் சிதைந்துவிட்டன
வீடுகள்
வேரோடு அழிந்து விட்டன.

ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்.

எனது அம்மாவும்
ஏதோ ஒரு வழியில்
போய்க்கொண்டிருக்கிறாள்.
நான் எங்காவது
அம்மாவை சந்திக்கலாம்.

எனது வயதிற்கும்
எனது உருவத்திற்கும் ஏற்ற
பொதி ஒன்றை
நான் சுமந்திருக்கிறேன்
எனது அம்மாவும்
தனக்கேற்ற
பொதி ஒன்றை சுமந்தே
போய்க்கொண்டிருக்கிறாள்.

இந்த பொதிகளை
வைத்து
நாம் ஒரு வாழ்வை
தொடங்கப்போகிறோம்
எங்கள் வானம்
பறிக்கப்பட்டு விட்டது
எங்கள் நட்சத்திரங்கள்
பறிக்கப்பட்டு விட்டன.

செல்கள் முற்றங்களை
மேய்கின்றன
முற்றங்கள் சிதைந்து
மணக்கின்றன
விமானங்கள் வானங்களை
பிய்க்கின்றன
கிராமங்களை தின்னுகின்றன
வீதிகளை இராணுவம்
சூறையாடுகிறது.

எங்ள் கிராமங்களை
விடுவித்துக்கொண்டதாக
அரச வானொலி அறிவிக்கிறது.

சாம்பல் நாகரிகத்திற்கு
கிராமங்களை
பறிகொடுத்து விட்டு
போவதைப் போலிருக்கிறது
நதிகள் வற்றிவிட்டன
நமது பறவைகளின்
முட்டைகள்
கரைந்து விட்டன.
வேர் சிதைந்துகொண்டிருக்கிறது

இனி நாங்கள்
ஒரு துண்டு தரப்பாலுக்கு
திரியப்போகிறோம்
ஒரு மரத்தை தேடி
அலையப்போகிறோம்.

உற்றுப்பாருங்கள்….
இங்கு இரவாயிருக்கிறது.

நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்பு பொதிகளை
சுமந்தபடி
நிழல் வீடுகளை
பறிகொடுத்து விட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
………………………………………………………………………………

யாழ்.நகரம்:கவிதை


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


ரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ்.நகரம்.

01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.

மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.

எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.

வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.

யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.


02

நான் யாரென்பதை
நீங்கள் அறியாதிருப்பீர்கள்
ஆவலற்றிருப்பீர்கள்
நீங்கள் சாப்பிடும்
கொத்துரெட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்.

இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்கமாட்டமடீர்கள்
உங்களால்
தொடர்ந்து அமைதியாய்
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்.


03

கடையில் இருக்கும்
பொருட்களில்
சிலவற்றை முண்டியடித்து
வாங்கிவிட்டு
குறைந்த பொருட்களோடு
கூடிய பாரத்தோடு
வீட்டிற்கு வருவீர்கள்
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி
கூப்பிட்டு
அவதானமாக கதவை திறந்து
உள் நுழைவீர்கள்
கதவுகள ஜன்னல்களை
இறுக சாத்திக்கொள்வீர்கள்.

அவன் என்ன செய்திருப்பான்
என்ற கேள்வி
நீர் தீர்ந்து காற்று வரும்
குழாயை உலுப்புகையிலும்
எழாமலிருக்கும்.

ஒரு பக்கத்துடன் வெளிவரும்
நாளைய தினஇதழ்
அதில் அவன் சாவு
இனங்காணப்பட்டிருக்கும்
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
ஏழு மணியுடன்
கண்னை மூடிக்கொள்கையில்
இரவு பெரிதாக விரிகையில்
எதுவும் நினைவு வராது.

நாளை அந்த கொத்துரொட்டிக்கடை
பூட்டியிருக்கலாம்
வேறு எங்கேனும்
ஒரு கொத்துரொட்டிக்கடை
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.
கொஞ்ச பொருட்களுடன்
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.

04

நான் என்ன செய்தேன்
எதை விரும்பினேன்
யாரை நேசித்தேன்
யாரை எதிர்த்தேன்?

எனது வீடு எந்த
கிராமத்திலிருக்கிறது
எனது பேஸில்
யாருடைய படம் இருந்தது
எந்த பிரதேச வாடையுடைய
உடைகளை
நான் அணிந்திருந்தேன்
எனது தலைமுடி
எப்படி சீவப்பட்டிருந்தது?

யார் என்ன கவனித்தார்கள்
எந்த முகாங்கள்
அமைந்திருக்கும் வீதியால்
நான் பயணிக்காதிருந்தேன்?

எந்த சீருடைகளுக்கு
நான் அச்சமாயிருந்தேன்
ஏன் பொது உடைகளுடன்
வந்தவர்களால்
நான் சுடப்பட்டேன்?

எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?

05

நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரங்களுக்குள்
என்ன இருக்கிறது?
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்
என்ன நடக்கிறது?
______________________________________
05.09.2006.யாழ்.நகரம்.

Monday, November 26, 2007

இரவு நட்சத்திரங்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
ந்த இரவு
நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது
ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை
தூக்கி அருந்தமுடிகிறதில்லை
நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன்
எங்களால் எப்படி
இந்த செயற்கை மகிழ்ச்சியோடு
வாழ்ந்துவிட முடிகிறது.

ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது
நாம் பேசுகிறோம்
உன்னைப்பற்றி என்னைப்பற்றி
எங்களைப்பற்றி
எங்களை சூழ்ந்திருப்பவை பற்றி
மனந் திறந்து பேசுகிறோம்.

எங்களோடு கூடியிருந்த நண்பன்
களத்தில் மரணித்ததுபற்றி
நினைவுகொள்கிறோம்
எல்லைகளில் அடிக்கடி
மூளும் போரைப்பற்றி பேசுகிறோம்
துப்பாக்கிகளோடு எந்நேரமும்
எல்லைகளில் விழித்திருக்கும்
போராளிகளைபற்றி பேசுகிறோம.

எங்களால் பாடல்களை இசைக்கமுடிகிறது
சிகரட் விரலிடுக்கில்
புகைந்துகொண்டிருக்கிறது
மதுக்கோப்பபைகள்
சிதறலாக தெரிகின்றன.

எனினும் நாம் எதைப்புரிந்தோம்
நமது தோள்கள்
உதிர்வதைப்போலிருக்கின்றன
நேற்று எங்களோடிருந்த
இந்த மேசையின் நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடிப்போயிருக்கிறான்.

நாம் நிறையவற்றை அறியாதிருக்கிறோம்
மலரவேண்டிய இடத்தில்
மௌனமாயிருந்து உதிருகிறோம்
மதுக்கோப்பைகளின் இருட்டில்
நெருங்கியிருக்கும் நமதன்புகளை
எந்தக்காலையில் உலர்த்தப்போகிறோம்.

நாம் எந்த நிதானத்தை பற்றி
பேசவேண்டும்
எந்த புரிதலும் வார்த்தைளும்
நமக்கு தேவைப்படுகின்றன
பிரகாசமும்
மங்களலும் எங்கிருக்கிறது.

நாம் எந்த பாடல்களை
இசைக்கவேண்டும்
எங்களுக்கு மதுவை
சேவகம் செய்பவனின் வியர்வைத்துளிகள்
பியர்கள்மீது படுகின்றன
அவனிடம் ஒரு நிறைந்த
புன்னகை இருக்கிறது
ஓவ்வொரு காலையிலும்
அவனின் முகம் பிரகாசமடைகிறது.

மதுக்கோப்பைகளிலும்
சிகரட்டுக்களிலும் கலந்துகிடக்கும்
இந்த வெளிச்ச சூழலின்
ஆயுளைப்பற்றி என்ன பேசினேன்?
சிலவேளை நான் தவறாய் பேசலாம்
இந்த மேசையில் நிறைய விடயங்களை
புரியமுடியும்
நெருக்கத்தை பரிமாறமுடியும்
ஆதரவும் பலமும் பிறக்கமுடியம்
வார்த்தைள் கடும் அர்த்தமாயிருக்கும்
நாம் அறியவேண்டியவை
நிறைய இருக்கிறது.

நான் தள்ளாடுகிறேன்
சிகரட்டின் நுனியில் குடிவாழும்
நெருப்பை இழத்தபடி
இரவில் வெளிச்சம் தீர்வதுபோலிருக்கிறது.

பாடல்களை நிறுத்துகிறோம்
வானத்திற்கு காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது
அவதானத்துக்கான நேரம் வருகிறது
வானத்தில் நட்சத்திரங்களை காணவில்லை
சிகரட்டுகள் அணைகின்றன
மதுதீர்ந்த கோப்பைகளை
சேவகன் எடுத்துப்போகிறான்
மேசை வெளிக்கிறது.

நாம் இரவின் நடுவிலிருக்கிறோம்.

பதுங்குகுழியை இன்றும் கூட
சுத்தம்செய்ததுபோலிருக்கிறது.
2007.08.22
-----------------------------------------------------------------

கடலில்கரைந்த ஒருதுண்டுபடகு.



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
மது வாழைமரங்களை
அழிக்க அவர்கள்
மிகப்பெரிய வாட்களோடு
புகுந்தார்கள்
எல்லா வாழைஇலைகளும்
கிழிந்து கிடக்கின்றன
பசுமையைகாலடியில் போட்டு
மிதித்திருந்தார்கள்
காற்றின் கூடுகளை
கிழித்தழித்தார்கள்.

நமது மிகப் பழமையான
மண் அரித்துச்
செல்லப்பட்டுக்கொண்டிருந்தது
வீடுகளும்
வீதிகளும் வாழ்வும்
கரைந்துகொண்டிருந்தன.
நிலவு அழுதுவடிக்கிறது
மிகப்பசுமையான
வாழையிலையில்
கலந்து படைத்திருந்த
நமது முகங்களையும்
அவர்கள் கிழிக்க
நான் கடலில் மிதந்தேன்
நமது கண்கள்
காற்றில் மிதந்தன
எனது முகத்தை காணவில்லை.

அலைகள் மொழிகளை
இழந்து அமைதியாயிருந்தன
கடலின் முகங்கள்
வீங்கி பெருத்திருந்தன
நானிருந்த படகு
அலைந்துகொண்டிருந்தது
இறுகிய
தண்ணீர் மேடுகளில்
மோதி
துண்டுதுண்டாய் உடைந்தது.

எஞ்சியிருந்த
ஒரு துண்டு படகும்
கரைந்துவிட்டது
உப்புக்காற்று தேங்கிய
ஈரமான
எனது வெள்ளைத்துணி
தவறி கடலில் விழுந்தது
நான் எடுத்து வந்த
அரிசி அடங்கிய
சின்ன பொதிகளும்
கைதவறி விழுந்து
கடலில் தாண்டன.

நான் கண்டேன்
எனதூரில்
அவர்கள் கிழித்த
சில வாழையிலைகள்
கடலில் எறியப்பட்டிருந்தன
மீன்களும் கொலைசெய்யப்பட்டு
மிதந்துகொண்டிருந்தன.
-------------------------------------------------

Sunday, November 25, 2007

கடைசி உணவு நாட்கள்


_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


01
மது கோப்பைகள்
வெறுமையாயிருக்கின்றன
துயரங்கள் நிரம்பிய
கோப்பைகளோடு
நாட்கள் கடைசியாகிவிட்டன.

கோப்பையில்
நிரம்பியிருக்கும் துயரத்தை
என்னால் சாப்பிடமுடியவில்லை.

இருட்டுப்பந்தலில்
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன
நான் திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றிற்கு
போகப்போகிறேன்
நான் வாழமுடியாத
நகரம் ஒன்றில்
தங்கியிருக்கப்போகிறேன்.

கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.

02
எனக்கு மிகவும் பிடித்த
தோழனே
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது
சாந்தம் அழிந்திருக்கும்
உனது முகத்திலும்
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்
உனது கண்களிலும்
சூழ்ந்திருக்கும் துயரத்தை
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது
நான் உன்னோடு
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.

நமது விளக்குகளை
இரவுகள் விழுங்கிவிட்டன
எனது பயணம்
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.

நாம் வளர்த்த மரத்தின் கீழ்
அடையாளம் தெரியாத
நிழல் படருகிறது
அந்த மரத்தின் வேர் படுகிறது
சந்தர்ப்பங்களற்றிருக்கும்
நமது நாற்காலிகளில்
தெரு நாய்கள்
மலம் கழித்திருக்கின்றன
சிறு நீர்பெய்திருக்கின்றன.

எனது கோப்பை நெழிய
உணவு பழுதாகி கிடக்கிறது.


03
தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.

நம்பிக்கையற்ற நகரத்திற்கு
நம்பிக்கையின்றியே போகிறேன்
பயங்கரம் நிரம்பிய
வீதிகளில் நடக்கப்போகிறேன்
ஆபத்தான வண்டிகளில்
ஏறப்போகிறேன்
சுடும் வெந்நீரில்
நீந்தப்போகிறேன்
நான் திரும்புவதைப்பறிறியே
நீ யோசிக்கிறாய்?

நாம் நிச்சயமற்ற இனத்திலே
பிறந்திருக்கிறோம்
அவர்களது கோப்பையில்
நிரம்பியிருக்கும்
எனது குருதியை நினைத்து
அச்சப்படுகிறாய்
பலிகளுக்கு ஏற்கப்பட்ட
இனத்திலிருந்து பேசுகிறோம்.

04
அதிகாரங்கள் நம்மை
தேடி வதைக்கின்றன
வன்முறைகள் நம்மை
மொய்கின்றன
நமது அலைச்சல் நீளுகிறது
நாம் அமைதிக்காக
அதிகாரங்களோடு போராடுகிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த தோழனே
நான் போகிறேன்
எனக்காக முகத்தினோடு.
மிகப்பாரமான
எனது பயணப்பையில்
இந்தக்குரல்
மொத்தமாய் கிடக்கிறது.
--------------------------------------------------

சவம் நிரம்பியபுத்தகபைகள்



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------



ள்ளிக்கூட மாணவர்கள்
வெள்ளை சீருடைகளை
அணிந்து
நண்பர்களை
நிரப்பிய
சவப் பெட்டியுடன்
மயானங்களை நோக்கி
போய்க் கொண்டிருந்தார்கள்

புத்தகங்களை
சோதனைச்சாவடியில்
விரித்தும்
முகாங்களில்
ஒதுக்கியும்
சீருடைகளை
முட்கம்பிசுருள்களில்
உலரவிட்டும்

பள்ளிக்கூடங்கள்
இராணுவ முகாம்கள் என்று
அறிவிக்கப்பட்டது
இராணுவ சீருடைகளுக்கு
கீழேயும்
துப்பாக்கிகளில் அமர்ந்தும்
பரீட்சை எழுதும்படியும்
அறிவிக்கப்பட்டது

பள்ளிக் கூடங்கள்
சிறைச்சாலையாகவும்
துப்பாக்கி கதவுகளை தாண்டி
வருபவர்களும் அஞ்சுவர்களும்
புத்தகத்தின் நடுப்பக்கத்தை
தாண்டாதவர்களும்
சீருடைகளால் கட்டி
தகர்க்கப்பட்டனர்.

முட்கம்பி ஓடைக்குள் நின்று
மாணவர்கள்
அழுதார்கள்
ஆசிரியர்களும்
சவப்பெட்டியை நினைத்து
திடுக்கிட்டார்கள்

ஆசிரியர்களும்
மாணவர்களுமாய்
துப்பாக்கிகளின் முன்
அணிவகுத்து நின்றார்கள்
இராணுவ சீருடையின் பின்னணியில்
விழுத்தப்பட்ட ஒளிப்படத்துடன்

சவத்தை நிரப்பிய
புத்தக பைகளுடன்
மயானங்களை முதலிய
பள்ளிக்கு மாணவர்கள்
தோள்களை சுமந்தார்கள்
----------------------------------------------------------

இருள் சூழ்ந்த கிழக்கு



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
சூரியனோடு கிழக்கை
சிங்கம் விழுங்கிவிட்டது.

முட்கம்பிகளாலும்
எச்சரிக்கை அறிவிப்புகளாலும்
இராணுவ நடமாட்டங்களாலும்
மீன்கள் இடம்பெயர்ந்தன
வாவிகள்
தற்கொலை செயதுகொண்டன.

கிழக்கில்தான் சூரியன் உதிக்கும்
கிழக்கு சூரியனை பிரிந்து
இருட்டாகிவிட்டது
மலைகளுக்கு இடையில்
அழிவுகள் கும்பியாயிருக்கின்றன.

தெருக்களெல்லாம்
குருதி பிறன்ட கேக்துண்டுகள்
மனித சதைகளோடு கிடக்கின்றன
சிங்கத்தின்
கோரப்பற்கள் பொறிக்கப்பட்ட
கேக்துண்டுகளில்
முகாம்கள் எழும்பிவந்தன.

தலைகளற்ற மக்கள் நடுவில்
நீண்ட காலமாய்
முகங்களை மறைத்த
சிங்கத்தின் கோரப்புன்னகையுடைய
பயங்கரக்கொடி
பறந்தபடி இருக்கிறது
கொடியின் அசைவு
சுவாசங்களை உலுப்பி
குழந்தைகளை தூக்கிஎறிந்தது.

எந்த இடத்தில் நாம்
மௌனமாயிருந்தோம்
எப்பொழுது அசையாதிருந்தோம்
குரல்கள் வெடிப்பதன் அவசியம்
எங்குஒளிந்துகொண்டன.
உதடுகள் தீப்பற்றி எரிகின்றன.

நாங்களில்லை
இங்கு நாங்கள் யாருமில்லை
ஊரில்லை
இது நாம் வாழ்ந்த ஊரில்லை
நாம் மீண்டும் தேடுகிறோம்.

பொறிகளாக கேக்குகள்
முளைக்கின்றன
இராணுவம் கேக்கை இனிக்கிறது
ஜனாதிபதி வந்து கொடியேற்றுகிறார்
தலைதுண்டிக்கப்பட்ட எங்களுக்கு
கேக்குகளால் செய்யப்பட்ட
சவப்பொட்டிகளை வழங்குகிறார்.

மாரடித்து அழும் ஓசையோடு
நாம் சூரியனை தேடுகிறோம்
மீன்கள் எங்குபோயின
மீன்களின்பாடல்
புளுதியில் வாடிக்கிடக்கின்றன.

குடும்பிமலையின் மௌனங்களை
அழுகைகளை மெல்லியதாக
சிங்கம் தின்றுகொண்டிருக்கிறது
சிங்கத்தின் வாயிலிருந்து
கொடுரம் கொட்டியபடி இருக்கிறது.

சிங்கத்தின் வாயைகிழித்து
சூரியனோடுகிழக்கை வெளியிலேடுப்போம்
வுhவிகள் திரும்பிவிடும்
மீன்கள் திரும்பிவிடும்
காடுகள் பரந்து நீள்கின்றன
பசுமை மலைகளாய் உயர்கின்றன
கிழக்கில் மீண்டும் சூரியன் உதிக்கும்
_______________________________________
பின்குறிப்பு: இலங்கைஅரசு கிழக்கை ஆக்கிரமித்து
ஜீலை19 கிழக்கின் உதயம் என்ற வெற்றிவிழாவை
கொண்டாடியுள்ளது. இதனால் பலநூற்றுக்கணக்கான
மக்கள் கொள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்
இடம்பெயப்ந்துள்ளனர்

Thursday, November 22, 2007

செஞ்சோலைவலி




கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


டிந்த கட்டிடங்களுக்குலிருந்து
பள்ளிக்கூடங்கள்
மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
நைந்துபோன
வெள்ளைச்சீருடைகளும்
கிழிந்த புத்தகங்களும்
உடைந்த பேனாக்களும்
வெளியிலெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு அழுகிறது
சூரியன் குருதியில்
மூழ்கி திணறியது
நாம் தூக்கிய
தேனீர்கோப்பைகளினுள்
குருதி தீடீரென கொட்டியது
சிதறிய நம்சதைகள்
மேகங்களுக்கிடையில்
சிக்கிக்கொண்டன.

செஞ்சோலை சிவப்புசோலையானது
மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

அதிகாரவாதிகளிடம் பேசினோம்
கருணையாளர்களிடம் பேசினோம்
நடுநிலையாளர்களிடம் பேசினோம்
யாரும் எதையும் பேசஇயலாது
உதடுகளை சொறுகிக்கொண்டனர்
முல்லைத்தீவு அழுகிறது.

போர் நமக்காகவும் தொடங்கப்படுகிறது
நம்மீதும் தாக்குதல்கள்
இடம்பெறுகின்றன
நமக்காக குண்டுகளும் விமானங்களும்
இறக்குமதி செய்யப்படுகின்றன
நாம் தொடர்ந்து
யுத்தத்துடன் போராடுகிறோம்
வெள்ளைச்Pருடைகளின்
சமாதிகளின் மத்தியில்
நமது புத்தகங்கள்
தொடர்ந்து எரிகின்றன.

மிஞ்சிய ஒருகையில்
பேனாவை எடுக்கிறேன்
மிஞ்சிய ஒருகால்
பள்ளிக்கூடம் நோக்கிபோகிறது
காயப்பட்ட தேகம்மீது
குருதியுறிய வெள்ளைச்சீருடையை
கழுவி உலர்த்;தி
அணிந்திருக்கிறேன்.

கூடு உடைந்ததிற்காகவும்
நிழல் கிழிந்ததிற்காகவும்
முல்லைத்தீவின் அழுகை
அடங்காது எரிந்தது.
__________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 14 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
வள்ளிபுனம் செஞ்சேலைவளாகத்தில்
இலங்கை வான்படை கீபீர்விமானம் குண்டு வீசி
தாக்கியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.125க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெளிக்குநகரும் மரங்கள்

-----------------------------------------படம்:விழியன்
கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

எந்த மரங்களும் எனது கையில்லை.
நிழலுக்கான அதிகாரங்கள்
பறிபோன நிலையில்
தோப்பைவிட்டு
நான் துரத்தப்பட்டுவிட்டேன்.
எனினும் அந்த மரங்களிலேயே
எனது இருப்பும் ஆவலும்
மொய்த்துக்கொண்டிருக்கின்றது.

நான் எதுவும் செய்யாதிருந்தேன்
நிழலில்லாத
வெம்மை வெளிகளில் காலை
புதைத்தபடி நிற்கின்றேன்.

தூரத்திலிருந்து தோப்பைப் பார்த்து
மனதாறிவிட்டோ
நிழலை ரசித்துவிட்டோ
வாழமுடியாதிருக்கிறது.

ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு மரமாக
குறைந்துகொண்டு வருகிறது.


எனது மரங்களின் உயிர் குடிக்கப்பட்டு
கட்டைகளாகத் தகனம் செய்யப்படுகின்றன.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்.

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.


என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்

கோடரிகளை மீறி
என்னைக் கடந்து
மரங்கள் வெளிக்கு நகர்கின்றன.
---------------------------------------------------------

கிளிநொச்சி



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01

பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.

இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.

02

நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை

இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.

03
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்

04

வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.

வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்

05

கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.

அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.

06

எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.

07

கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தாள்.
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை.
நேரம் சரியில்லை.

08

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.

09

படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.

சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.

10

சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்

11

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
___________________________

Wednesday, November 21, 2007

கனவில் நிகழுகிற பயங்கர உலகம்




கவிதை________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

-------------------------------------------------------------

01.
எனது கனவுகள் ஏன்
பயங்கரமானவையாக
இருக்கின்றன?

முதலில் இரவு
பயங்கரமாக வருகிறது
மிக தாமதமாகவே
தூக்கம் வருகிறது
முழு தூக்கத்தையும்
பயங்கர கனவுகள்
விழுங்கி விடுகின்றன.

02
ஆற்றங்கரை குடிசைகளை
வெள்ளம்
அள்ளிப்போகிறது
எனது அம்மாவையும்
தங்கையையும்
எங்கள்
சமையல் பாத்திரங்களையும்
வெள்ளம்
வழித்தெடுத்துக்கொண்டிருக்கிறது.

03
நான் ஒரு மாட்டு வண்டியில்
எனது நகரத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறேன்
வழிநிறைய கிடந்த
சோதனைசாவடி ஒன்றின்
சுவர்களில் மோதி
நான் பயணித்த வண்டி
சிதைகிறது
இழுத்து வந்த எருதுகள்
செத்து கிடக்கின்றன
வேறு இரண்டு எருதுகள்
தமது கொம்புகளால்
என் வயிற்றை கிழிக்கின்றன.

04
ஆறுகள் சிதைந்து கிடக்க
மரங்கள்
அழிக்கப்பட்டிருக்க
எனதூரில்
எல்லோரும் கூடியிருக்கிறார்கள்
சவப்பெட்டிகளும்
பாடைகளும்
நிறைந்து கிடக்கின்றன
வானத்தை இருள்
சூழ்ந்திருக்க
அவர்கள் கட்டி
அழுதபடியிருக்கிறார்கள்.

05
எனது கால்கள் உடைந்து கிடக்க
பாழடைந்து வரும்
நகரத்தில் உறைந்து விடுகிறேன்
வெளுறிய வீதியில்
செல்ல முற்பட்ட
என் மாட்டு வண்டி
சாம்பலாய் கிடக்கிறது.

06
பகல்களில் தப்பியிருந்தேன்
மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர இரவு வருகிறது
மெல்ல மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர தூக்கமும் வருகிறது.

மிக வேகமாவே
அச்சமூட்டியபடி
பயங்கர கனவுகள் வந்து
தீவிரமாகின்றன
நான் திடுக்கிடுகிறேன்.

எனது கனவுகள்
ஏன் பயங்கரமானவையாகவே
தொடர்கின்றன.. ?
-----------------------------------------------------