Tuesday, April 1, 2008

மிதந்து திரியும் திறப்புகள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்

------------------------------------------------------------------

சில சைக்கிள்களின்
கண்டிலை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
சீற்றை
கழற்றி எடுத்தார்கள்
சில சைக்கிள்களின்
கரியலை
கழற்றி எடுத்தார்கள்.

சைக்கிள்களின் சொந்தக்காரர்கள்
திரும்புவார்கள் என்ற நம்பிக்கை
யாரிடமுமில்லை.

சில பேர் சைக்கிளையே
திருடிக்கொண்டு போனார்கள்.

அலுமாரிகளை உடைத்து
புதையலை கண்டெடுப்பதுபோல
எனது தோழர்கள்
மகிழ்கிறார்கள்
அவர்களின் வாசனை செண்டுகளும்
பவுடரும்
சீப்புகளும் இன்னும்
வாசனையுடனிருந்தன.

உடுப்புகளை கிழறி
அறையில் எறிந்து விட்டனர்
சிலர் அந்த உடுப்புகளால்
அறையின் தூசியை
தட்டிக்கொண்டார்கள்
கடைசியில்
குப்பைத்தொட்டியில்
நிரம்பியிருந்தன அந்த உடைகள்.

அடிப்பகுதி கழன்ற சப்பாத்துக்களும்
உருக்குலைந்த செருப்புகளும்
அறையை விட்டு
ஒதுங்கியபடியிருந்தது.

பாடக்குறிப்புகள் கிழிந்தும்
உருக்குலைந்தும்
அள்ளி வீசப்பட்டும்
காற்றோடும்
கால்ளோடும் மிதிபட்டும்
குப்பையாகி கரைந்தன.

அவர்கள் எழுதிய
பாடக்குறிப்புகளும்
சேகரித்த
பத்திரிகை பகுதிகளும்
அடிமட்டங்களும்
மை இறுகிய பேனாக்களும்
சிப்புகள் அறுந்த
ப்பாக்குகளை விட்டு
தூரக்கிடக்க
அலுமாரிகளை விட்டு
தூரக்கிடந்தன
அந்த தூசி படிந்த ப்பாக்குகள்.

அறைகளின் மூலைகள்
பக்கங்கள்
எங்கும் கிடந்து உருண்டன
அவர்களிடமிருந்து
உதிர்ந்த முடிகள்
தலையணைகள்
வேலி ஓரமாய் எறிந்து கிடந்தன.

குளியலறை தட்டுகளில்
கிடந்தன
ஈரம் உலராத சவர்க்காரங்கள்
மலஅறையில்
வெண்கட்டியால் எழுதப்பட்ட
தூஷனங்கள்
தண்ணீரால் கழுவி
அழிக்கப்பட்டிருந்தது.

முகம் அழியாத கண்ணாடியுடன்
பெயரும் ஊரும் வகுப்பும்
எழுதப்பட்ட சுவர்களுக்கு
வெளுறிய வண்ணம் பூசப்பட்டிருந்தது.

அவர்களின் பொருட்களில் ஏக்கம் வழிகிறது
பெரும் ஆறாய்
யாரும் கண்டுகொள்ளாத
கரைகளை எடுத்து உடைத்தபடி..

அவர்கள் புதிய சைக்கிள்களோடும்
புதிய ப்பாக்குகளோடும்
திரும்பி வருவார்கள்
என்ற நம்பிக்கை யாருக்குமில்லை.

சிதறுப்பட்டு கலைந்து
மிதக்கிற
அவர்களின் கனவின் ஏக்கங்களைப்போல
சைக்கிள்களினதும்
அறைகளினதும்
துருப்பிடித்த திறப்புகள்
எங்கும் அலைந்து
மிதந்து கொண்டிருந்தன..
01.04.2008
--------------------------------------------------------------

No comments: