Monday, September 22, 2008

திருவிழாவில் மண்சுவரில் மோதுண்ட குழந்தை


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்
_______________________________

காணாமல்ப்போன குழந்தை
கடவுளை விளையாட கேட்டிருந்தது.

பொம்மைகள் தொங்கும்
திருவிழாவில்
நமது மணல்த்தரை சேறாகிக்கிடக்கிறது.

முட்கள் முளைத்திருக்க
புதைந்து கொண்டு வருகிறது தேர்.
இரத்தம் வடியும் கால்கள்
தீ மிதிக்கின்றன.

தேர்களில் இருள் நிரம்பிக்கிடக்க
பூக்கள் கருகியிருந்தன
வடத்தின் நீளம் சுருங்கி
ஏதோ ஒரு சுவரில் மோதி அறுகிறது.

கால்களுக்குள் ஒளி புதைகிறது

கடவுளின் தலையை காணாதபோதும்
காய்ந்த தலைகளின்மீது
கைகள் கூப்பியிருந்தன.

மணற்சுவர்களிற்கிடையில்
நடக்கும் திருவிழாவில்
காணாமல்ப்போன குழந்தையை
தேடித்திரிகிற மனைவியிடம்
கண்கள் இல்லாத பொம்மைகள் இருந்தன.

சுற்றிச்சுற்றி மணற்சுவர்களுக்கிடையில்
குனிந்தபடி இழுக்கும்
எல்லா தேர்களிலும் இருந்த கடவுள்களின்
கண்களிலிருந்தும் இரத்தம் கசிந்தது.

நானும் அவளும்
முதன் முதலில் பார்த்துப்பேசிய
மணல்த்தரையில்
காய்ந்து விடாத நமது முத்தத்துடன்
புதைந்து கிடந்தன
குழந்தையின் வளையல்கள்.

கடவுளை பொம்மை என்று
குழந்தை கூறியது ஞாபகத்திற்கு வருகிறது.
--------------------------------------------------------
20.09.2008
----------------------------------

No comments: