Monday, August 18, 2008

துண்டிக்கப்பட்ட சொற்கள்


----------------------------------------------------------------
கவிதை:தீபச்செல்வன்

_______________________________


01
தோல்வியின் வர்ணிப்பு
நிரம்பிய
உனது குரல்
எனக்கு கேட்க வேண்டாம்

துண்டிக்கப்பட்ட
தொலைபேசிகளிலிருந்து
எனது நகரத்தின்
கண்ணீர் வடிகிறது

கம்பிகளின் ஊடாய்
புறப்பட முயன்ற
எனது சொற்கள்
தவறி விழுகின்றன
கம்பிகள் அறுந்து கிடக்கின்றன

மேலும்
தோல்வி வருணிக்கப்பட்டு வரும்
உனது குரல்
எனக்கு கேட்க வேண்டாம்.

02
உனது கடிதம்
வந்து
சேராமலிருந்திருக்கலாம்
நீ
எந்தக் கடிதத்தையுமே
எழுதாமல் விட்டிருக்கலாம்

தபாலுறை
நாலாய் கிழிந்திருந்தது
முகவரிகளில்
இராணுவம் முன்னேறிய
குறியீடுகள் இருந்தன

நான் தேடி அலைந்தேன்
கடிதம் எங்கும்
வெட்டி மறைக்கப்பட்டிருந்த
உன்னையும்
உனது சொற்களையும்.

மறைக்கப்பட்டிருந்த
உனது சொற்களுக்கு
கீழாய்
உனது முகம் நசிந்து கிடக்க
தோல்வி வருணிக்கப்பட்டிருந்தது.

No comments: