Friday, November 30, 2007

பதுங்குகுழியில் பிறந்தகுழந்தை

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01
ருவேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும.?

குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிறம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது

02

குழந்தைகளின் புன்னகைகளை
நிலங்களின் அடியில்
புதைத்து வைத்துவிட்டு
நாம்
நசுங்கிய எதிர்காலத்தோடு
அமர்ந்திருக்கிறோம்

பதுங்குகுழியினுள்
அவர்களின் பள்ளிக்கூடங்கள்
தொலைந்துவிட்டன.
இசையின் நாதம்
செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறக்கின்றன

மலர்கள்
தறிக்கப்பட்ட தேசத்தில்
இராணுவச் சப்பாத்துகளின்கீழ்
வாழ்வைத் தொலைத்துவிட்டு
இனத்தின் ஆதிப்புன்னகையை
அறியாது வளர்கிறார்கள.

நமது வாடிய முலைகளுடன்
மெலிந்த குழந்தைகளை பெற்று
புன்னகைப்பட்ட
நாடு செய்கிறோம்.
இந்தப் பதுங்கு குழியில்
கிடக்கும்
எனது குழந்தையின் தாலாட்டில்
நான் எதை வனைந்து பாடுவது?

03

தாய்மார்களின் வற்றிய
மடிகளின் ஆழத்தில்
குழந்தைகளின் கால்கள்
உடைந்துகிடக்க
பாதணிகள்
உக்கிக்கிடந்தன.

அவர்களின் உதடுகள்
உலர்ந்து கிடக்கின்றன
நாவுகள் வரண்டு
நீள மறுக்கின்றன
நாங்களும்
திறனியற்ற நாவால்
இந்தக் குழந்தைகள்
கருவூட்டப்பட்டிருக்கையில்
எதைப் பேசினோம்?

04

குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக
குடிவாழ்கிறது
அவர்களுடன் ஓட்டிப்பிறந்த
கருணை வார்த்தைகளும்
விடுதலைப் பாதங்களும்
அவர்கள் அறியாமல்
பறிக்கப்பட்டுள்ளன

எதையும் அறியது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக் காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்

05

நான் கடும் யுத்தப்பேரழிவில்
பிறந்ததாய்
அம்மா சொன்னாள்
எனது குழந்தையை
நான் இந்;த பதுங்குகுழியில்
பிரசவித்திருக்கிறேன்

அது நாளை என்னிடம்
ஜனாதிபதியையும்
இராணுவத் தளபதிகளையும்
விசாரிக்கக்கூடும்
நான் நிறையவற்றை
சேமித்துவைக்க வேண்டும்.

கண்ணாடிகளை உடைத்து
தண்ணீரைக் கிறுக்கி
எங்களை நாங்கள்
காணாமல்
இருட்டில் வாழ்ந்தோம் என்றும்
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின்
தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கருத்திருந்தது என்றும்
நான் கூறவேண்டும்.

06

நான் மலட்டுத் தன்மை அடைவதற்கு
வேண்டியதற்காக
அப்பொழுது வெட்கப்பட வேண்டியிருக்கும்
ஏதாவது பேசுங்கள்
ஏதாவது செய்யுங்கள்
என்ற எனது உரையால்கள்
தலைகுனிந்து கிடக்கும்

07

பதுங்குகுழிக்குள்
எனது குழந்தையின் அழுகை
உறைந்துவிடுகிறது

08

ஏன் இது
ஒரு ஈழக்குழந்தையாக
இங்குவந்து பிறந்திருக்கிறது?
அதுவும் இந்தப் பதுங்குகுழியில்
கண்ணை விழித்திருக்கிறது?
எனது குழந்தையின் அழுகை
நாளை இந்நாட்டின்
தேசிய கீதமாய் மாறலாம்
---------------------------------------------------

கடைசி உணவு நாட்கள்

கவிதை_____________________________
--------------------------தீபச்செல்வன்
__________________________________________


------------------------------------------------------------------
01
மது கோப்பைகள்
வெறுமையாயிருக்கின்றன
துயரங்கள் நிரம்பிய
கோப்பைகளோடு
நாட்கள் கடைசியாகிவிட்டன.

கோப்பையில்
நிரம்பியிருக்கும் துயரத்தை
என்னால் சாப்பிடமுடியவில்லை.

இருட்டுப்பந்தலில்
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன
நான் திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றிற்கு
போகப்போகிறேன்
நான் வாழமுடியாத
நகரம் ஒன்றில்
தங்கியிருக்கப்போகிறேன்.

கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.

02
எனக்கு மிகவும் பிடித்த
தோழனே
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது
சாந்தம் அழிந்திருக்கும்
உனது முகத்திலும்
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்
உனது கண்களிலும்
சூழ்ந்திருக்கும் துயரத்தை
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது
நான் உன்னோடு
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.

நமது விளக்குகளை
இரவுகள் விழுங்கிவிட்டன
எனது பயணம்
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.

நாம் வளர்த்த மரத்தின் கீழ்
அடையாளம் தெரியாத
நிழல் படருகிறது
அந்த மரத்தின் வேர் படுகிறது
சந்தர்ப்பங்களற்றிருக்கும்
நமது நாற்காலிகளில்
தெரு நாய்கள்
மலம் கழித்திருக்கின்றன
சிறு நீர்பெய்திருக்கின்றன.

எனது கோப்பை நெழிய
உணவு பழுதாகி கிடக்கிறது.


03
தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.

நம்பிக்கையற்ற நகரத்திற்கு
நம்பிக்கையின்றியே போகிறேன்
பயங்கரம் நிரம்பிய
வீதிகளில் நடக்கப்போகிறேன்
ஆபத்தான வண்டிகளில்
ஏறப்போகிறேன்
சுடும் வெந்நீரில்
நீந்தப்போகிறேன்
நான் திரும்புவதைப்பறிறியே
நீ யோசிக்கிறாய்?

நாம் நிச்சயமற்ற இனத்திலே
பிறந்திருக்கிறோம்
அவர்களது கோப்பையில்
நிரம்பியிருக்கும்
எனது குருதியை நினைத்து
அச்சப்படுகிறாய்
பலிகளுக்கு ஏற்கப்பட்ட
இனத்திலிருந்து பேசுகிறோம்.

04
அதிகாரங்கள் நம்மை
தேடி வதைக்கின்றன
வன்முறைகள் நம்மை
மொய்கின்றன
நமது அலைச்சல் நீளுகிறது
நாம் அமைதிக்காக
அதிகாரங்களோடு போராடுகிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த தோழனே
நான் போகிறேன்
எனக்காக முகத்தினோடு.
மிகப்பாரமான
எனது பயணப்பையில்
இந்தக்குரல்
மொத்தமாய் கிடக்கிறது.
--------------------------------------------------

Wednesday, November 28, 2007

பாட்டியின் கதையும் குழந்தைகளின் உலகமும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

வானம் இடிந்து விழுந்திருந்தது
பாட்டியின் முகத்தில்
பழைய கதைகள்
உறைந்திருக்க
புதிய உலகம் பற்றியகதை
தெரியத்தொடங்கியிருந்தது
குழந்தைகள் கதைக்காக
பாட்டியை சூழ்ந்தார்கள்.

பழைய கதைகளின்
ஐதீகமும் மர்மமும்
குழந்தைகளிடம் ஆர்வமற்றிருந்தது
ஐதீகமும் மர்மமுமுடைய
கனவுலகின் கதையில்
தீவிரம் அற்றுப்போயிருந்தது.
உலகம் வேறொன்றாக இருந்தது.
குழந்தைகள் பாட்டியிடம்
ஜதார்த்தமும்
நடைமுறைச்சாத்தியமுமுடைய
கதையை எதிர்பார்த்தார்கள்.

நிலவு கலவரத்தில்
சிக்கியிருந்தது
முற்றங்கள் பாதிக்கப்பட்டு
சுருங்கிக்கொண்டிருந்தன.
சதையும் குருதியுமுடைய
மண்டைஓடுகளின் மத்தியில்
குழந்தைகளின் விளையாட்டுவீடுகள்
குழம்பியிருந்தன.

பாட்டி புதிய உலகம்
பற்றிய கதையை
அளக்கத்தொடங்கினாள்.

மண்டை ஓடுகளின் குவியல்கள்
நிரம்பியிராத உலகம்
உருவாகப் போகிறது.
அங்கு மரங்கள்
கிழிந்திருக்கப்போவதில்லை
நிலவு கலவரமின்றியிருக்கும்
முற்றம் அச்சமின்றி
விரிந்திருக்கும்
காற்றில் மரணத்தின்
வாசனை இருக்காது.

சொற்களில் குருதியின்
வாசனை வீசப்போவதில்லை
பறவைகள் மீண்டும் தங்கள்
சங்கீதங்களை இசைக்கும்
தெருக்களில் சூழ்ச்சி இருக்காது
மரணங்கள் பற்றியும்
சவப்பெட்டிகள் பற்றியும்
நம்மில் யாரும் அறியாதிருப்போம்.
வானம் மனிதாபிமானத்தில்
வெளித்திருக்கும் விழிகள்
எந்தக் காயங்களுமின்றி திறந்திருக்கும்
மிகப் பசுமையானகாட்சிகளால்
அந்த உலகம் நிரம்பியிருக்கும்

ஜதார்த்தமுடைய கதையை
கூறியதாகப் பாட்டி
திருப்திப்பட்டாள்
பாட்டியின் இருப்பில்
நிம்மதியிருந்தது.
கதையில் நம்பகம் இருப்பதாக
குழந்தைகள் உணர்ந்தனர்.

குழந்தைகளின் விழிகளில்
அச்சம் நீங்கின
பாட்டியின் வார்த்தையின்
ஆர்வம் குழந்தைகளை
குதூகலிக்கச் செய்தது.

குழந்தைகளின் முகங்களில்
புதிய உலகம்
நிகழத்தொடங்கியது.
_________________________

Tuesday, November 27, 2007

ஏ-9 வீதி

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

நமது நகரத்தை சூழ்ந்திருந்த
எல்லா எண்டிகளும் புறப்பட்டுவிட்டன
புனரமைக்கப்பட்ட வீதி
மீண்டும் தனித்திருக்கிறது
நம்மிடம் இப்பொழுது
ஒரு பயங்கர அமைதியும்
குரூர கலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளயைடித்து பயணிக்கப்பட்ட
இந்த வீதியை சிதைப்பது பற்றி
யாரிடம் முறையிடுவது?
அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?
குருதியால் பெறப்பட்ட
சிவப்பு வீதியின் வரலாற்றை
வெள்ளைத்தோரணங்கள்
பிரதிபலிக்காமலே போய்விட்டன
வீதி கிழிந்து கிடக்கிறது.

இது எனது வீதி
எனது வீட்டிற்கு பிரதானமானது
எனக்காக நீளுகிறது
இதற்காக நம்மில் பலர்
குருதி சிந்தியிருக்கிறார்கள்
உயிரை புதைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த வீதி
பசியின் வரலாறாகவும்
நோயின் தரிப்பிடமாகவும்
உயிர்களை பறிகொடுக்கிறது
நிழலுக்காக முளைத்த
பனைமரங்களின் கனவுகள்
தின்னப்படுகிற முகாமாகிவிட்டது.

பனைமரங்களை தறியாதீர்
என்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன
எத்தனை பனைமரங்கள்
காயப்பட்டிருக்கின்றன
எத்தனை பனைமரங்கள்
அழிந்துவிட்டன
எதிர்கால பனைமரங்களுக்கான
விதைகளும் நாற்றுக்களும்
எங்கிருக்கின்றன.?

வந்த வண்டிகள் எதையோ
ஏற்றி விட்டு திரும்பிப்போகின்றன.
எங்கள் வண்டிகள் எதுவும்
எரிபொருள் இன்றி நகருவதில்லை
வெள்ளைப்போர்நம்மை சூழ்கிறது.

எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?
_________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 11 2007 உடன் ஏ-9 வீதி
மூடப்பட்டு ஒரு வருடமாகிறது

நீயும் நமதுகுழந்தைகளும்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

னது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
உனது பிள்ளைகளும்
அழுகிறார்கள்
நமது குழந்தைகள்
நமது தோள்களின்
பயங்கர வெளிக்குள்
நித்திரையின்றி திரிகிறார்கள்.

முற்றங்களுக்காக எல்லைகளுக்காக
வெளிகளுக்காக
முகங்களை பகிர்வோம்

நாம் புன்னகைக்காலம்
எனக்கும் புன்னகை மீது
மொய்ப்பதே விருப்பம்
உனக்கும் கூட என்கிறாய்
நாம் நாமாக
புன்னைகக்க வேண்டும்
அதற்காக
முதலில் நமது முகங்களில்
வழியும் பயங்கரத்தை
துடைப்போம்

யார் முதலில்
பயங்கரத்தை துறப்பது என்பதில் கூட
நமக்குள் இழுபறியும் பிடியும்.
பயங்கரத்தின்
முரண்களுக்குள்
நமது குழந்தைகள்
புதைந்து போகிறார்கள்.

உனக்கும் எனக்குமான
வெளியின் பயங்கரத்தில் உலவும்
நமது குழந்தைகள்
முற்றங்களை குழப்பிவருகிறார்கள்.

இப்போது நமது
மௌனத்திலும் பயங்கரம்
பாய்ச்சி வழியவிடுகிறோம்.

குழம்பிய நித்திரையில்
நமது குழந்தைகள்
தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளார்கள்
அவர்கள் எழும்பியதும்
நாம் பதில் கூறவேண்டும்
அவர்கள்
நமது விரல்களைத்தான்
நோக்கப் போகிறார்கள்

அவர்களுக்காக நம்மிடம்
என்ன பதில் கிடக்கிறது?
பயங்கரத்தை தவிர
எதையும் குழப்பதேவையில்லை
பயங்கரத்தை கூட
பகிரத் தேவையில்லை
முற்றங்களை
விழுங்காமல் இருப்போம்

நமது குழந்தைகளின்
வீடுகள் சிதையாமலிருக்க வேண்டும்
பயங்கரமில்லாத
ஒரு முற்றம்
அவர்களுக்கு அவசியம்.
----------------------------------------------------------

கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
தானியங்கள் வீடுகளில்
நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய
கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்.

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லா பாதைகளும்
தலையில்
பொதிகளை சுமந்திருக்கின்றன.

எல்லோரும் ஒருமுறை
நமது கிராமங்களை
திரும்பிப்பாருங்கள்
இப்பொழுதே
தின்னைகள் சிதைந்துவிட்டன
வீடுகள்
வேரோடு அழிந்து விட்டன.

ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்.

எனது அம்மாவும்
ஏதோ ஒரு வழியில்
போய்க்கொண்டிருக்கிறாள்.
நான் எங்காவது
அம்மாவை சந்திக்கலாம்.

எனது வயதிற்கும்
எனது உருவத்திற்கும் ஏற்ற
பொதி ஒன்றை
நான் சுமந்திருக்கிறேன்
எனது அம்மாவும்
தனக்கேற்ற
பொதி ஒன்றை சுமந்தே
போய்க்கொண்டிருக்கிறாள்.

இந்த பொதிகளை
வைத்து
நாம் ஒரு வாழ்வை
தொடங்கப்போகிறோம்
எங்கள் வானம்
பறிக்கப்பட்டு விட்டது
எங்கள் நட்சத்திரங்கள்
பறிக்கப்பட்டு விட்டன.

செல்கள் முற்றங்களை
மேய்கின்றன
முற்றங்கள் சிதைந்து
மணக்கின்றன
விமானங்கள் வானங்களை
பிய்க்கின்றன
கிராமங்களை தின்னுகின்றன
வீதிகளை இராணுவம்
சூறையாடுகிறது.

எங்ள் கிராமங்களை
விடுவித்துக்கொண்டதாக
அரச வானொலி அறிவிக்கிறது.

சாம்பல் நாகரிகத்திற்கு
கிராமங்களை
பறிகொடுத்து விட்டு
போவதைப் போலிருக்கிறது
நதிகள் வற்றிவிட்டன
நமது பறவைகளின்
முட்டைகள்
கரைந்து விட்டன.
வேர் சிதைந்துகொண்டிருக்கிறது

இனி நாங்கள்
ஒரு துண்டு தரப்பாலுக்கு
திரியப்போகிறோம்
ஒரு மரத்தை தேடி
அலையப்போகிறோம்.

உற்றுப்பாருங்கள்….
இங்கு இரவாயிருக்கிறது.

நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்பு பொதிகளை
சுமந்தபடி
நிழல் வீடுகளை
பறிகொடுத்து விட்டு
சிறுதுண்டு நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்.
………………………………………………………………………………

யாழ்.நகரம்:கவிதை


கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


ரு கொத்துரொட்டிக்கடை
இனந்தெரியாத பிணம்
நீளும் அமைதி:யாழ்.நகரம்.

01
எனது சைக்கிள்
சந்தியில்
குருதி வழிய வழிய
உடைந்து கிடக்கிறது
நாட்குறிப்புக்களை
காற்று வலிமையாக
கிழித்து போகின்றன
எனது பேனா
சிவப்பாகி கரைகிறது.

மதிய உணவிற்கு
வாங்கப்பட்ட
அரை ராத்தல் பாணை
நாய்கள் அடிபட்டு
பிய்த்து தின்னுகின்றன
வாழைப்பழங்களை
காகங்கள்
கொத்தி தின்னுகின்றன.

எனது பிணம்
உரிமை கோரப்படாமல்
குருதியால் போர்க்கப்பட்டிருக்கிறது.

வீட்டின் கூரை
உக்கியிருக்கிறது
சுவர்கள் கரைந்து
சரிந்திருக்கின்றன
அம்மா.அக்கா.தம்பி.தங்கைகள்
அழுகையில்
கூடியிருக்கிறார்கள்.

வீதி மயானமாகிறது
சீருடைகள் சவப்பெட்டியாகின்றன
மின் தூன்கள்
உயிரை குடிக்கின்றன.

யாரோ சாப்பிட வருகிறார்கள்
கொத்துரொட்டிக்கடை திறந்திருக்கிறது.


02

நான் யாரென்பதை
நீங்கள் அறியாதிருப்பீர்கள்
ஆவலற்றிருப்பீர்கள்
நீங்கள் சாப்பிடும்
கொத்துரெட்டி
மேசையில் பரவியிருக்க
எனது பிணம்
பின்னணியாய் தெரியும்.

இவன் ஏன் சுடப்பட்டான்
என்பது பற்றிக்கூட
நீங்கள் சிந்திக்கமாட்டமடீர்கள்
உங்களால்
தொடர்ந்து அமைதியாய்
சாப்பிட முடியும்
நாளைக்கு வெடிக்கப்போகிற
வன்முறைகளுக்கு
ஊரடங்கு அமுலுக்கு
நீங்கள் தயாராகுவீர்கள்.


03

கடையில் இருக்கும்
பொருட்களில்
சிலவற்றை முண்டியடித்து
வாங்கிவிட்டு
குறைந்த பொருட்களோடு
கூடிய பாரத்தோடு
வீட்டிற்கு வருவீர்கள்
பூட்டிய வீட்டுக்கதவை தட்டி
கூப்பிட்டு
அவதானமாக கதவை திறந்து
உள் நுழைவீர்கள்
கதவுகள ஜன்னல்களை
இறுக சாத்திக்கொள்வீர்கள்.

அவன் என்ன செய்திருப்பான்
என்ற கேள்வி
நீர் தீர்ந்து காற்று வரும்
குழாயை உலுப்புகையிலும்
எழாமலிருக்கும்.

ஒரு பக்கத்துடன் வெளிவரும்
நாளைய தினஇதழ்
அதில் அவன் சாவு
இனங்காணப்பட்டிருக்கும்
என்றுகூட எதிர்பார்க்கமாட்டீர்கள்
மின்சாரம் துண்டிக்கப்பட்டு
ஏழு மணியுடன்
கண்னை மூடிக்கொள்கையில்
இரவு பெரிதாக விரிகையில்
எதுவும் நினைவு வராது.

நாளை அந்த கொத்துரொட்டிக்கடை
பூட்டியிருக்கலாம்
வேறு எங்கேனும்
ஒரு கொத்துரொட்டிக்கடை
கொஞ்சரொட்டிகளுடன் திறந்நிருக்கும்.
கொஞ்ச பொருட்களுடன்
ஓரு பலசரக்குகடையும் திறந்திருக்கும்.

04

நான் என்ன செய்தேன்
எதை விரும்பினேன்
யாரை நேசித்தேன்
யாரை எதிர்த்தேன்?

எனது வீடு எந்த
கிராமத்திலிருக்கிறது
எனது பேஸில்
யாருடைய படம் இருந்தது
எந்த பிரதேச வாடையுடைய
உடைகளை
நான் அணிந்திருந்தேன்
எனது தலைமுடி
எப்படி சீவப்பட்டிருந்தது?

யார் என்ன கவனித்தார்கள்
எந்த முகாங்கள்
அமைந்திருக்கும் வீதியால்
நான் பயணிக்காதிருந்தேன்?

எந்த சீருடைகளுக்கு
நான் அச்சமாயிருந்தேன்
ஏன் பொது உடைகளுடன்
வந்தவர்களால்
நான் சுடப்பட்டேன்?

எனது பிணத்தில்
எத்தனை கேள்வியிருக்கிறது
எப்பொழுது நான்
இனங்காணப்படுவேன்?

05

நான் எந்தவகை அமைதியாயிருக்கிறேன்?
நீங்கள் எந்தவகை அமைதியாயிருக்கிறீர்கள்?
குறிப்பிட்ட நேரங்களுக்குள்
என்ன இருக்கிறது?
இயல்பு குழைந்த யாழ்.நகரத்தில்
என்ன நடக்கிறது?
______________________________________
05.09.2006.யாழ்.நகரம்.

Monday, November 26, 2007

இரவு நட்சத்திரங்கள்

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
ந்த இரவு
நட்சத்திரங்கள் பூட்டப்பட்டதைப்போலிருக்கிறது
ஓரு திருப்தியோடு மதுக்கோப்பைகளை
தூக்கி அருந்தமுடிகிறதில்லை
நான் அடிக்கடி வானத்தைப் பார்க்கிறேன்
எங்களால் எப்படி
இந்த செயற்கை மகிழ்ச்சியோடு
வாழ்ந்துவிட முடிகிறது.

ஓரு விருந்து ஓழுங்குசெய்யப்பட்டிருக்கிறது
நாம் பேசுகிறோம்
உன்னைப்பற்றி என்னைப்பற்றி
எங்களைப்பற்றி
எங்களை சூழ்ந்திருப்பவை பற்றி
மனந் திறந்து பேசுகிறோம்.

எங்களோடு கூடியிருந்த நண்பன்
களத்தில் மரணித்ததுபற்றி
நினைவுகொள்கிறோம்
எல்லைகளில் அடிக்கடி
மூளும் போரைப்பற்றி பேசுகிறோம்
துப்பாக்கிகளோடு எந்நேரமும்
எல்லைகளில் விழித்திருக்கும்
போராளிகளைபற்றி பேசுகிறோம.

எங்களால் பாடல்களை இசைக்கமுடிகிறது
சிகரட் விரலிடுக்கில்
புகைந்துகொண்டிருக்கிறது
மதுக்கோப்பபைகள்
சிதறலாக தெரிகின்றன.

எனினும் நாம் எதைப்புரிந்தோம்
நமது தோள்கள்
உதிர்வதைப்போலிருக்கின்றன
நேற்று எங்களோடிருந்த
இந்த மேசையின் நண்பன்
எதுவும் சொல்லாமல் நாட்டைவிட்டு
ஓடிப்போயிருக்கிறான்.

நாம் நிறையவற்றை அறியாதிருக்கிறோம்
மலரவேண்டிய இடத்தில்
மௌனமாயிருந்து உதிருகிறோம்
மதுக்கோப்பைகளின் இருட்டில்
நெருங்கியிருக்கும் நமதன்புகளை
எந்தக்காலையில் உலர்த்தப்போகிறோம்.

நாம் எந்த நிதானத்தை பற்றி
பேசவேண்டும்
எந்த புரிதலும் வார்த்தைளும்
நமக்கு தேவைப்படுகின்றன
பிரகாசமும்
மங்களலும் எங்கிருக்கிறது.

நாம் எந்த பாடல்களை
இசைக்கவேண்டும்
எங்களுக்கு மதுவை
சேவகம் செய்பவனின் வியர்வைத்துளிகள்
பியர்கள்மீது படுகின்றன
அவனிடம் ஒரு நிறைந்த
புன்னகை இருக்கிறது
ஓவ்வொரு காலையிலும்
அவனின் முகம் பிரகாசமடைகிறது.

மதுக்கோப்பைகளிலும்
சிகரட்டுக்களிலும் கலந்துகிடக்கும்
இந்த வெளிச்ச சூழலின்
ஆயுளைப்பற்றி என்ன பேசினேன்?
சிலவேளை நான் தவறாய் பேசலாம்
இந்த மேசையில் நிறைய விடயங்களை
புரியமுடியும்
நெருக்கத்தை பரிமாறமுடியும்
ஆதரவும் பலமும் பிறக்கமுடியம்
வார்த்தைள் கடும் அர்த்தமாயிருக்கும்
நாம் அறியவேண்டியவை
நிறைய இருக்கிறது.

நான் தள்ளாடுகிறேன்
சிகரட்டின் நுனியில் குடிவாழும்
நெருப்பை இழத்தபடி
இரவில் வெளிச்சம் தீர்வதுபோலிருக்கிறது.

பாடல்களை நிறுத்துகிறோம்
வானத்திற்கு காதெறிகிறோம்
வேவு விமானம் சுற்றுகிறது
அவதானத்துக்கான நேரம் வருகிறது
வானத்தில் நட்சத்திரங்களை காணவில்லை
சிகரட்டுகள் அணைகின்றன
மதுதீர்ந்த கோப்பைகளை
சேவகன் எடுத்துப்போகிறான்
மேசை வெளிக்கிறது.

நாம் இரவின் நடுவிலிருக்கிறோம்.

பதுங்குகுழியை இன்றும் கூட
சுத்தம்செய்ததுபோலிருக்கிறது.
2007.08.22
-----------------------------------------------------------------

கடலில்கரைந்த ஒருதுண்டுபடகு.



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
மது வாழைமரங்களை
அழிக்க அவர்கள்
மிகப்பெரிய வாட்களோடு
புகுந்தார்கள்
எல்லா வாழைஇலைகளும்
கிழிந்து கிடக்கின்றன
பசுமையைகாலடியில் போட்டு
மிதித்திருந்தார்கள்
காற்றின் கூடுகளை
கிழித்தழித்தார்கள்.

நமது மிகப் பழமையான
மண் அரித்துச்
செல்லப்பட்டுக்கொண்டிருந்தது
வீடுகளும்
வீதிகளும் வாழ்வும்
கரைந்துகொண்டிருந்தன.
நிலவு அழுதுவடிக்கிறது
மிகப்பசுமையான
வாழையிலையில்
கலந்து படைத்திருந்த
நமது முகங்களையும்
அவர்கள் கிழிக்க
நான் கடலில் மிதந்தேன்
நமது கண்கள்
காற்றில் மிதந்தன
எனது முகத்தை காணவில்லை.

அலைகள் மொழிகளை
இழந்து அமைதியாயிருந்தன
கடலின் முகங்கள்
வீங்கி பெருத்திருந்தன
நானிருந்த படகு
அலைந்துகொண்டிருந்தது
இறுகிய
தண்ணீர் மேடுகளில்
மோதி
துண்டுதுண்டாய் உடைந்தது.

எஞ்சியிருந்த
ஒரு துண்டு படகும்
கரைந்துவிட்டது
உப்புக்காற்று தேங்கிய
ஈரமான
எனது வெள்ளைத்துணி
தவறி கடலில் விழுந்தது
நான் எடுத்து வந்த
அரிசி அடங்கிய
சின்ன பொதிகளும்
கைதவறி விழுந்து
கடலில் தாண்டன.

நான் கண்டேன்
எனதூரில்
அவர்கள் கிழித்த
சில வாழையிலைகள்
கடலில் எறியப்பட்டிருந்தன
மீன்களும் கொலைசெய்யப்பட்டு
மிதந்துகொண்டிருந்தன.
-------------------------------------------------

Sunday, November 25, 2007

கடைசி உணவு நாட்கள்


_______________________________________
--------------------------கவிதை:தீபச்செல்வன்
__________________________________________


01
மது கோப்பைகள்
வெறுமையாயிருக்கின்றன
துயரங்கள் நிரம்பிய
கோப்பைகளோடு
நாட்கள் கடைசியாகிவிட்டன.

கோப்பையில்
நிரம்பியிருக்கும் துயரத்தை
என்னால் சாப்பிடமுடியவில்லை.

இருட்டுப்பந்தலில்
நாற்காலிகள் இருட்டாகிகிடக்கின்றன
நான் திரும்பி வரமுடியாத
பிரதேசம் ஒன்றிற்கு
போகப்போகிறேன்
நான் வாழமுடியாத
நகரம் ஒன்றில்
தங்கியிருக்கப்போகிறேன்.

கோப்பைகள் பாரமாயிருக்கின்றன.

02
எனக்கு மிகவும் பிடித்த
தோழனே
என்னால் தாங்கமுடியயதிருக்கிறது
சாந்தம் அழிந்திருக்கும்
உனது முகத்திலும்
சிவந்து கசிந்துகொண்டிருக்கும்
உனது கண்களிலும்
சூழ்ந்திருக்கும் துயரத்தை
கொஞ்சமும் பார்க்கமுடியாதிருக்கிறது
நான் உன்னோடு
பேச முடியாமல் மௌனமாயிருக்கிறேன்.

நமது விளக்குகளை
இரவுகள் விழுங்கிவிட்டன
எனது பயணம்
இருட்டு வீதியில் தத்தளிக்கிறது.

நாம் வளர்த்த மரத்தின் கீழ்
அடையாளம் தெரியாத
நிழல் படருகிறது
அந்த மரத்தின் வேர் படுகிறது
சந்தர்ப்பங்களற்றிருக்கும்
நமது நாற்காலிகளில்
தெரு நாய்கள்
மலம் கழித்திருக்கின்றன
சிறு நீர்பெய்திருக்கின்றன.

எனது கோப்பை நெழிய
உணவு பழுதாகி கிடக்கிறது.


03
தோழனே எல்லாம்
கடைசி என்றாகி விட்டது
இவை கடைசி உணவாகிவிட்டது.

நீயும் நானும் கூடியிருக்கவே
விரும்புகிறோம்
நான் விலகியிருக்கிறேன்
எனக்கு சிலுவை காத்திருக்கிறது
எனக்கு ஆணிகள் காத்திருக்கின்றன
எனது குருதி
பகிர்ந்துண்ணப்படவிருக்கிறது.

நம்பிக்கையற்ற நகரத்திற்கு
நம்பிக்கையின்றியே போகிறேன்
பயங்கரம் நிரம்பிய
வீதிகளில் நடக்கப்போகிறேன்
ஆபத்தான வண்டிகளில்
ஏறப்போகிறேன்
சுடும் வெந்நீரில்
நீந்தப்போகிறேன்
நான் திரும்புவதைப்பறிறியே
நீ யோசிக்கிறாய்?

நாம் நிச்சயமற்ற இனத்திலே
பிறந்திருக்கிறோம்
அவர்களது கோப்பையில்
நிரம்பியிருக்கும்
எனது குருதியை நினைத்து
அச்சப்படுகிறாய்
பலிகளுக்கு ஏற்கப்பட்ட
இனத்திலிருந்து பேசுகிறோம்.

04
அதிகாரங்கள் நம்மை
தேடி வதைக்கின்றன
வன்முறைகள் நம்மை
மொய்கின்றன
நமது அலைச்சல் நீளுகிறது
நாம் அமைதிக்காக
அதிகாரங்களோடு போராடுகிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த தோழனே
நான் போகிறேன்
எனக்காக முகத்தினோடு.
மிகப்பாரமான
எனது பயணப்பையில்
இந்தக்குரல்
மொத்தமாய் கிடக்கிறது.
--------------------------------------------------

சவம் நிரம்பியபுத்தகபைகள்



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------



ள்ளிக்கூட மாணவர்கள்
வெள்ளை சீருடைகளை
அணிந்து
நண்பர்களை
நிரப்பிய
சவப் பெட்டியுடன்
மயானங்களை நோக்கி
போய்க் கொண்டிருந்தார்கள்

புத்தகங்களை
சோதனைச்சாவடியில்
விரித்தும்
முகாங்களில்
ஒதுக்கியும்
சீருடைகளை
முட்கம்பிசுருள்களில்
உலரவிட்டும்

பள்ளிக்கூடங்கள்
இராணுவ முகாம்கள் என்று
அறிவிக்கப்பட்டது
இராணுவ சீருடைகளுக்கு
கீழேயும்
துப்பாக்கிகளில் அமர்ந்தும்
பரீட்சை எழுதும்படியும்
அறிவிக்கப்பட்டது

பள்ளிக் கூடங்கள்
சிறைச்சாலையாகவும்
துப்பாக்கி கதவுகளை தாண்டி
வருபவர்களும் அஞ்சுவர்களும்
புத்தகத்தின் நடுப்பக்கத்தை
தாண்டாதவர்களும்
சீருடைகளால் கட்டி
தகர்க்கப்பட்டனர்.

முட்கம்பி ஓடைக்குள் நின்று
மாணவர்கள்
அழுதார்கள்
ஆசிரியர்களும்
சவப்பெட்டியை நினைத்து
திடுக்கிட்டார்கள்

ஆசிரியர்களும்
மாணவர்களுமாய்
துப்பாக்கிகளின் முன்
அணிவகுத்து நின்றார்கள்
இராணுவ சீருடையின் பின்னணியில்
விழுத்தப்பட்ட ஒளிப்படத்துடன்

சவத்தை நிரப்பிய
புத்தக பைகளுடன்
மயானங்களை முதலிய
பள்ளிக்கு மாணவர்கள்
தோள்களை சுமந்தார்கள்
----------------------------------------------------------

இருள் சூழ்ந்த கிழக்கு



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
சூரியனோடு கிழக்கை
சிங்கம் விழுங்கிவிட்டது.

முட்கம்பிகளாலும்
எச்சரிக்கை அறிவிப்புகளாலும்
இராணுவ நடமாட்டங்களாலும்
மீன்கள் இடம்பெயர்ந்தன
வாவிகள்
தற்கொலை செயதுகொண்டன.

கிழக்கில்தான் சூரியன் உதிக்கும்
கிழக்கு சூரியனை பிரிந்து
இருட்டாகிவிட்டது
மலைகளுக்கு இடையில்
அழிவுகள் கும்பியாயிருக்கின்றன.

தெருக்களெல்லாம்
குருதி பிறன்ட கேக்துண்டுகள்
மனித சதைகளோடு கிடக்கின்றன
சிங்கத்தின்
கோரப்பற்கள் பொறிக்கப்பட்ட
கேக்துண்டுகளில்
முகாம்கள் எழும்பிவந்தன.

தலைகளற்ற மக்கள் நடுவில்
நீண்ட காலமாய்
முகங்களை மறைத்த
சிங்கத்தின் கோரப்புன்னகையுடைய
பயங்கரக்கொடி
பறந்தபடி இருக்கிறது
கொடியின் அசைவு
சுவாசங்களை உலுப்பி
குழந்தைகளை தூக்கிஎறிந்தது.

எந்த இடத்தில் நாம்
மௌனமாயிருந்தோம்
எப்பொழுது அசையாதிருந்தோம்
குரல்கள் வெடிப்பதன் அவசியம்
எங்குஒளிந்துகொண்டன.
உதடுகள் தீப்பற்றி எரிகின்றன.

நாங்களில்லை
இங்கு நாங்கள் யாருமில்லை
ஊரில்லை
இது நாம் வாழ்ந்த ஊரில்லை
நாம் மீண்டும் தேடுகிறோம்.

பொறிகளாக கேக்குகள்
முளைக்கின்றன
இராணுவம் கேக்கை இனிக்கிறது
ஜனாதிபதி வந்து கொடியேற்றுகிறார்
தலைதுண்டிக்கப்பட்ட எங்களுக்கு
கேக்குகளால் செய்யப்பட்ட
சவப்பொட்டிகளை வழங்குகிறார்.

மாரடித்து அழும் ஓசையோடு
நாம் சூரியனை தேடுகிறோம்
மீன்கள் எங்குபோயின
மீன்களின்பாடல்
புளுதியில் வாடிக்கிடக்கின்றன.

குடும்பிமலையின் மௌனங்களை
அழுகைகளை மெல்லியதாக
சிங்கம் தின்றுகொண்டிருக்கிறது
சிங்கத்தின் வாயிலிருந்து
கொடுரம் கொட்டியபடி இருக்கிறது.

சிங்கத்தின் வாயைகிழித்து
சூரியனோடுகிழக்கை வெளியிலேடுப்போம்
வுhவிகள் திரும்பிவிடும்
மீன்கள் திரும்பிவிடும்
காடுகள் பரந்து நீள்கின்றன
பசுமை மலைகளாய் உயர்கின்றன
கிழக்கில் மீண்டும் சூரியன் உதிக்கும்
_______________________________________
பின்குறிப்பு: இலங்கைஅரசு கிழக்கை ஆக்கிரமித்து
ஜீலை19 கிழக்கின் உதயம் என்ற வெற்றிவிழாவை
கொண்டாடியுள்ளது. இதனால் பலநூற்றுக்கணக்கான
மக்கள் கொள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள்
இடம்பெயப்ந்துள்ளனர்

Thursday, November 22, 2007

செஞ்சோலைவலி




கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


டிந்த கட்டிடங்களுக்குலிருந்து
பள்ளிக்கூடங்கள்
மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
நைந்துபோன
வெள்ளைச்சீருடைகளும்
கிழிந்த புத்தகங்களும்
உடைந்த பேனாக்களும்
வெளியிலெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு அழுகிறது
சூரியன் குருதியில்
மூழ்கி திணறியது
நாம் தூக்கிய
தேனீர்கோப்பைகளினுள்
குருதி தீடீரென கொட்டியது
சிதறிய நம்சதைகள்
மேகங்களுக்கிடையில்
சிக்கிக்கொண்டன.

செஞ்சோலை சிவப்புசோலையானது
மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

அதிகாரவாதிகளிடம் பேசினோம்
கருணையாளர்களிடம் பேசினோம்
நடுநிலையாளர்களிடம் பேசினோம்
யாரும் எதையும் பேசஇயலாது
உதடுகளை சொறுகிக்கொண்டனர்
முல்லைத்தீவு அழுகிறது.

போர் நமக்காகவும் தொடங்கப்படுகிறது
நம்மீதும் தாக்குதல்கள்
இடம்பெறுகின்றன
நமக்காக குண்டுகளும் விமானங்களும்
இறக்குமதி செய்யப்படுகின்றன
நாம் தொடர்ந்து
யுத்தத்துடன் போராடுகிறோம்
வெள்ளைச்Pருடைகளின்
சமாதிகளின் மத்தியில்
நமது புத்தகங்கள்
தொடர்ந்து எரிகின்றன.

மிஞ்சிய ஒருகையில்
பேனாவை எடுக்கிறேன்
மிஞ்சிய ஒருகால்
பள்ளிக்கூடம் நோக்கிபோகிறது
காயப்பட்ட தேகம்மீது
குருதியுறிய வெள்ளைச்சீருடையை
கழுவி உலர்த்;தி
அணிந்திருக்கிறேன்.

கூடு உடைந்ததிற்காகவும்
நிழல் கிழிந்ததிற்காகவும்
முல்லைத்தீவின் அழுகை
அடங்காது எரிந்தது.
__________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 14 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
வள்ளிபுனம் செஞ்சேலைவளாகத்தில்
இலங்கை வான்படை கீபீர்விமானம் குண்டு வீசி
தாக்கியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.125க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.

வெளிக்குநகரும் மரங்கள்

-----------------------------------------படம்:விழியன்
கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

எந்த மரங்களும் எனது கையில்லை.
நிழலுக்கான அதிகாரங்கள்
பறிபோன நிலையில்
தோப்பைவிட்டு
நான் துரத்தப்பட்டுவிட்டேன்.
எனினும் அந்த மரங்களிலேயே
எனது இருப்பும் ஆவலும்
மொய்த்துக்கொண்டிருக்கின்றது.

நான் எதுவும் செய்யாதிருந்தேன்
நிழலில்லாத
வெம்மை வெளிகளில் காலை
புதைத்தபடி நிற்கின்றேன்.

தூரத்திலிருந்து தோப்பைப் பார்த்து
மனதாறிவிட்டோ
நிழலை ரசித்துவிட்டோ
வாழமுடியாதிருக்கிறது.

ஒவ்வொரு இரவிலும்
ஒவ்வொரு மரமாக
குறைந்துகொண்டு வருகிறது.


எனது மரங்களின் உயிர் குடிக்கப்பட்டு
கட்டைகளாகத் தகனம் செய்யப்படுகின்றன.

நான் எந்த மரங்களையும்
நாட்டாதவன்
அந்த மரங்களுக்கும்
நீர் ஊற்றாதவன்.

எனக்காக வழங்கப்பட்ட மரங்களே
பறிபோய் அழிகிறபொழுது
கோடரிகளைத் தடுக்க இயலாதவன்.
அப்படியாயின் எனக்கு
வெம்மை தானே பரிசளிக்கப்படும்.
நிழல்தீர்ந்த எரிந்த காட்டின்
தணலில்தான்
நடக்கவிடப்படுவேன்.

நாளைக்கு எனது பிள்ளைகள்
நிழலுக்காகத் துடிக்கிறபொழுது
நான் எந்தத்தோப்பின் வாசலில் நிற்பேன்
யாரிடம் நிழலுக்குக் கையேந்துவேன்.


என்னால் அவர்கள் அலையப்போகிறார்கள்
அவர்களின் தலை
நிழல் இன்றி கருகிற பொழுது
இந்த வெம்மையையா வைத்து
குடைபிடிக்கப்போகின்றேன்

கோடரிகளை மீறி
என்னைக் கடந்து
மரங்கள் வெளிக்கு நகர்கின்றன.
---------------------------------------------------------

கிளிநொச்சி



கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------
01

பிரகாசிற்கு இப்பொழுது
பியரில் நாட்டமில்லை
முன்பு நாம்
பியர் குடிப்பதில்லை
சமாதான காலத்தில்தான்
இங்கு பியர்கள்
கொண்டுவரப்பட்டன.
அப்போதுதான்
நானும் பிரகாசும்
பியர் குடிக்கப்பழகினோம்.

இப்பொழுது இங்கு
பியர்கள் அனுமதிக்கப்படுவதில்லை
முன்பு கொண்டுவரப்பட்ட
பியர் போத்தல்களின்
சுட்டுத்துண்டு நிறங்கள்
வெளுறிக்கிடக்கின்றன.

02

நாங்கள் பயணம் செய்த
பேருந்துகள்
ஓய்ந்தோ முடங்கியோ
கிடக்கின்றன
நாங்கள்
பேருந்துகளையோ பயணங்களையோ
விரும்புவதில்லை

இப்பொழுது
சைக்கிளை
மெதுவாக ஓட்டியபடி போகிறோம்
எங்கள் மோட்டார் சைக்கிள்
வீட்டில் நிற்கிறது.
இனி நடந்தும் போகவேண்டி இருக்கும்.

03
பிரகாசின் அம்மா
புற்றுநோயில்
இறந்துவிட்டாள்
பாதை பூட்டியிருந்தததால்
அவளுக்கான வைத்தியங்கள்
தவறிவிட்டன.
கடைசி நாட்களில்
நல்ல சாப்பாடுகளைக்கூட
பிரகாசு
வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

இப்பொழுது அவன்
பியரை நன்றாக
வெறுத்துவிட்டான்

04

வீடுகளில்
விளக்கு வைப்பது
பெரும்பாடாகி விட்டது.
சிவப்புநிற மண்ணெண்ணையில்
வண்டிகள்
புகையுடனும்
பெரும் இரைச்சலுடனும்
ஓடுகின்றன
எமது வண்டிகளுக்கு
எதிர்காலமே
இல்லாமலாகி விட்டதென்று
அனேகரும் கவலைப்படுகிறார்கள்.

வீதிகள் எல்லாம்
குன்றும் குழியுமாகி விட்டன.
சில்லுடைந்துவிடும்
காற்றுப் போயிவிடும்
சைக்கிளை
மெதுவாக ஓட்டுகிறோம்

05

கான்ஸ்பிரஸ்கரின்
சிரிப்புடன்கூடிய படம்
எரிக்சொல்கெய்மின்
சிரிப்புடன் கூடிய படம்
எல்லாம்
சுவர்களில் இருந்து
அகற்றவேண்டி ஆகிவிட்டது.
அவர்கள்தான்
எங்களுக்கான பியர்களை
எடுத்துவந்திருக்க வேண்டும்.

அவர்கள்தான் சோடாவும்
கொண்டு வந்திருக்க வேண்டும்
மினரல் தண்ணீர்களும்
கொண்டு வந்திருக்க வேண்டும்.
இப்பொழுது சுடும்
கலர் தண்ணிகளை
பொலித்தீன் பையில் அடைத்து
இங்கு விற்கிறார்கள்
அது சூடாய் இருக்கிறது.
கடைகள் குறைந்து விட்டன.

06

எங்கள் தாத்தாவின்
வாயில்
மூள மறுக்கும்
குறைச்சுருட்டுக் கிடக்கிறது
அவர் பழைய
குறைச்சுருட்டுக்களை
தேடிக்கொண்டிருக்கிறார்
நெருப்புக் கொள்ளியுடன்
போராடுகிறார்.

07

கடிகாரத்திற்கான
பென்டோச் பற்றியுமில்லை
சுவர்க்கடிகாரம் ஓடுவதில்லை
ரணில் விக்கிரமசிங்கவும்
தலைவர் பிரபாகரனும்
இணைக்கப்பட்ட படமுடைய
கடிகாரத்தை
புத்தளத்தில் இருந்து வந்த
முஸ்லீம் கடையில்
அம்மா வாங்கி வந்தாள்.
அது பழுதாகி விட்டது.
பற்றி போட்டும் வேலையில்லை.
நேரம் சரியில்லை.

08

எப்படி வீடுகளில்
பதுங்குகுழி என்று
நானும் பிரகாசும்
விசாரித்துக் கொள்கிறோம்.

நாங்கள் நல்ல
பதுங்குகுழி அமைக்கவில்லை.
சாமாதான காலத்தில்
சீமெந்துகள்
அனுமதிக்கப்பட்டிருக்கையில்
நிலத்தின்கீழ்
வீடுகட்டியிருக்க வேண்டும்.

09

படுகொலை செய்யப்பட்டவர்களின்
பெயர் விபரங்கள்
சந்தியில் அறிவிக்கப்படுகின்றன.
அது நமது பாடலாகி ஒலிக்கிறது.

சைக்கிளை விட்டு
இறங்கி வீதிக்கரையில்
நிற்கிறோம்
களமுனையில் வீழ்ந்த
மாவீரர் ஒருவரின்
விதையுடல்
சிப்பு மஞ்சள் வண்டியில்
துயிலும் வீடுநோக்கிப் போகிறது.

10

சைக்கிளை ஒதுக்கி
வழி விடுகிறோம்
விமான தாக்குதலில்
காயமடைந்த
மக்களைக் காவிக்கொண்டு
அம்புலன்ஸ் வண்டி
ஓமந்தை நோக்கிப் போகிறது
சிலவேளை
பிணத்துடன் திரும்பி வந்துவிடும்

11

நமது உடைகள்
மங்கி சுருங்கி விட்டன
செருப்பும் தேய்ந்துவிட்டது.

பசிக்கிறது.
கொஞ்சமாய் சாப்பிட வேண்டும்.
நானும் பிரகாசும்
மெலிந்து விட்டோம்

மீண்டும் ஒருநாள்
நானும் பிரகாசும்
பதுங்குகுழியை விட்டு
வெளியில் வந்து பேசுகிறோம்.
___________________________

Wednesday, November 21, 2007

கனவில் நிகழுகிற பயங்கர உலகம்




கவிதை________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

-------------------------------------------------------------

01.
எனது கனவுகள் ஏன்
பயங்கரமானவையாக
இருக்கின்றன?

முதலில் இரவு
பயங்கரமாக வருகிறது
மிக தாமதமாகவே
தூக்கம் வருகிறது
முழு தூக்கத்தையும்
பயங்கர கனவுகள்
விழுங்கி விடுகின்றன.

02
ஆற்றங்கரை குடிசைகளை
வெள்ளம்
அள்ளிப்போகிறது
எனது அம்மாவையும்
தங்கையையும்
எங்கள்
சமையல் பாத்திரங்களையும்
வெள்ளம்
வழித்தெடுத்துக்கொண்டிருக்கிறது.

03
நான் ஒரு மாட்டு வண்டியில்
எனது நகரத்திற்கு
போய்க்கொண்டிருக்கிறேன்
வழிநிறைய கிடந்த
சோதனைசாவடி ஒன்றின்
சுவர்களில் மோதி
நான் பயணித்த வண்டி
சிதைகிறது
இழுத்து வந்த எருதுகள்
செத்து கிடக்கின்றன
வேறு இரண்டு எருதுகள்
தமது கொம்புகளால்
என் வயிற்றை கிழிக்கின்றன.

04
ஆறுகள் சிதைந்து கிடக்க
மரங்கள்
அழிக்கப்பட்டிருக்க
எனதூரில்
எல்லோரும் கூடியிருக்கிறார்கள்
சவப்பெட்டிகளும்
பாடைகளும்
நிறைந்து கிடக்கின்றன
வானத்தை இருள்
சூழ்ந்திருக்க
அவர்கள் கட்டி
அழுதபடியிருக்கிறார்கள்.

05
எனது கால்கள் உடைந்து கிடக்க
பாழடைந்து வரும்
நகரத்தில் உறைந்து விடுகிறேன்
வெளுறிய வீதியில்
செல்ல முற்பட்ட
என் மாட்டு வண்டி
சாம்பலாய் கிடக்கிறது.

06
பகல்களில் தப்பியிருந்தேன்
மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர இரவு வருகிறது
மெல்ல மெல்ல அச்ச மூட்டியபடி
பயங்கர தூக்கமும் வருகிறது.

மிக வேகமாவே
அச்சமூட்டியபடி
பயங்கர கனவுகள் வந்து
தீவிரமாகின்றன
நான் திடுக்கிடுகிறேன்.

எனது கனவுகள்
ஏன் பயங்கரமானவையாகவே
தொடர்கின்றன.. ?
-----------------------------------------------------