Sunday, April 27, 2008

கமராப்போராளி




தீபச்செல்வன்



குழந்தைகள் பூக்களை நிரப்பி
உன்னை வணங்கிச் செல்கிறார்கள்
குருதி பிறண்ட கமராவோடு இருக்கிறது உனது அறை
சனங்கள் சனங்கள் பேசிய
எனது அன்புத்தோழனே

சனங்களின் கனவு நிரம்பிய உனது கல்லறைக்கு
ஒரு நாள் நான் வருவேன்.

சனங்களின் ஏக்கங்களை
அள்ளி நிரப்பி வரும்
உனது கமரா களத்தில் தோளிலிருந்து
உதிர்ந்து விழுந்ததை
நான் நம்பாமலிருக்கிறேன்.

சனங்கள் துரத்தப்பட்ட கிராமத்தில்
ஒரு துப்பாக்கியோடும்
உனதான கமராவோடும்
இன்னும் நீ சமராடிக்கொண்டிருக்கிறாய்.

நஞ்சு நிரப்பிய
உனது சயனைட் குப்பியில்
பதுங்குகுழிச்சனங்களின்
கண்ணீரையும் கோபத்தையும்கூட
நிரப்பிவைத்திருந்தாய்
அது ஒரு சூரியனாய்
உனது கழுத்தில் தொங்கியது.

உனது ஒரு சூரியனின் முகத்தையும்

உனது அறையில் நிரம்பியிருந்த
நமது வார்த்தைகளையும்
நான் எந்த களமுனையில் தேடுவேன்.

சீருடைகயையும்
துப்பாக்கியையும்
கமராவையும் இவைகளுடனான
உனது கடமையையும்
உனது அறையில் நான் தேடித்திரிகிறேன்
நாம் பருகிய தேனீர்க்கோப்பைகள்
அழுது கிடக்கின்றன.

நீ களப்பலியானாய்
என்ற செய்தியை சொல்லிவிட்டு
ஒரு பறவை துடிக்கிறது
கனவில் நிரம்பியுள்ள கல்லறைகளில்
எந்தக் கல்லறையில் நீ உறங்குகிறாய்?

உனது கமராவிற்குள்
இன்னும் அசைந்து கொண்டிருக்கின்றனர்
பதுங்குகுழிச்சனங்களின் அழுகை வார்த்தைகள்.


மன்னார் களமுனையில் 21 கார்த்திகை 2007 இலங்கை இராணுவத்தினருடனான சமரில் எனது அன்புத்தோழன் கமராப் போராளி மேஜர் அன்பழகன் களப்பலியாகினான்.

No comments: