Tuesday, November 27, 2007

ஏ-9 வீதி

கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------

நமது நகரத்தை சூழ்ந்திருந்த
எல்லா எண்டிகளும் புறப்பட்டுவிட்டன
புனரமைக்கப்பட்ட வீதி
மீண்டும் தனித்திருக்கிறது
நம்மிடம் இப்பொழுது
ஒரு பயங்கர அமைதியும்
குரூர கலவரமும் திணிக்கப்பட்டிருக்கிறது.

வெள்ளயைடித்து பயணிக்கப்பட்ட
இந்த வீதியை சிதைப்பது பற்றி
யாரிடம் முறையிடுவது?
அல்லது எப்படி தடுத்து நிறுத்துவது?
குருதியால் பெறப்பட்ட
சிவப்பு வீதியின் வரலாற்றை
வெள்ளைத்தோரணங்கள்
பிரதிபலிக்காமலே போய்விட்டன
வீதி கிழிந்து கிடக்கிறது.

இது எனது வீதி
எனது வீட்டிற்கு பிரதானமானது
எனக்காக நீளுகிறது
இதற்காக நம்மில் பலர்
குருதி சிந்தியிருக்கிறார்கள்
உயிரை புதைத்திருக்கிறார்கள்.

இப்பொழுது இந்த வீதி
பசியின் வரலாறாகவும்
நோயின் தரிப்பிடமாகவும்
உயிர்களை பறிகொடுக்கிறது
நிழலுக்காக முளைத்த
பனைமரங்களின் கனவுகள்
தின்னப்படுகிற முகாமாகிவிட்டது.

பனைமரங்களை தறியாதீர்
என்ற மூத்தோரின் குரல்கள் கேட்கின்றன
எத்தனை பனைமரங்கள்
காயப்பட்டிருக்கின்றன
எத்தனை பனைமரங்கள்
அழிந்துவிட்டன
எதிர்கால பனைமரங்களுக்கான
விதைகளும் நாற்றுக்களும்
எங்கிருக்கின்றன.?

வந்த வண்டிகள் எதையோ
ஏற்றி விட்டு திரும்பிப்போகின்றன.
எங்கள் வண்டிகள் எதுவும்
எரிபொருள் இன்றி நகருவதில்லை
வெள்ளைப்போர்நம்மை சூழ்கிறது.

எமது வீதிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வண்டிகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது நகரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது வீடுகளை யார் தீர்மானிக்கிறார்கள்
எமது பனைமரங்களை யார் தீர்மானிக்கிறார்கள்?
_________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 11 2007 உடன் ஏ-9 வீதி
மூடப்பட்டு ஒரு வருடமாகிறது

No comments: