Thursday, November 22, 2007

செஞ்சோலைவலி




கவிதை___________________________
--------------------------தீபச்செல்வன்
________________________________________

------------------------------------------------------------------


டிந்த கட்டிடங்களுக்குலிருந்து
பள்ளிக்கூடங்கள்
மீட்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன
நைந்துபோன
வெள்ளைச்சீருடைகளும்
கிழிந்த புத்தகங்களும்
உடைந்த பேனாக்களும்
வெளியிலெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு அழுகிறது
சூரியன் குருதியில்
மூழ்கி திணறியது
நாம் தூக்கிய
தேனீர்கோப்பைகளினுள்
குருதி தீடீரென கொட்டியது
சிதறிய நம்சதைகள்
மேகங்களுக்கிடையில்
சிக்கிக்கொண்டன.

செஞ்சோலை சிவப்புசோலையானது
மரங்களின் நிழல்கள் உடைந்து
வேரோடுசிதறிக்கிடந்தன
எனது சகோதரிகள்
செத்து கும்பல்கும்பலாக கிடந்தார்கள்
எனது ஓருகையும் ஒருகாலும்
சிதறி எங்கோ போயிற்று
என்னை ஒரு பெண்போராளி
தூக்கிப்போகிறாள்.

நமது வெள்ளைச்சீருடைகள்
குருதியில் தோய்ந்திருந்தன
வெண்கட்டிகளும்
கரும்பலகைகளும்
ஆசிரியர்களின்முன்
அழுதபடி நின்றன.
வெள்ளைக்காரர்கள் வந்தார்கள்
எங்கள் மொழியை புரியாது நின்றார்கள்
அவர்கள் போக பின்னால்
ஆச்சரியமற்றுக்கொண்டிருந்தது.

அதிகாரவாதிகளிடம் பேசினோம்
கருணையாளர்களிடம் பேசினோம்
நடுநிலையாளர்களிடம் பேசினோம்
யாரும் எதையும் பேசஇயலாது
உதடுகளை சொறுகிக்கொண்டனர்
முல்லைத்தீவு அழுகிறது.

போர் நமக்காகவும் தொடங்கப்படுகிறது
நம்மீதும் தாக்குதல்கள்
இடம்பெறுகின்றன
நமக்காக குண்டுகளும் விமானங்களும்
இறக்குமதி செய்யப்படுகின்றன
நாம் தொடர்ந்து
யுத்தத்துடன் போராடுகிறோம்
வெள்ளைச்Pருடைகளின்
சமாதிகளின் மத்தியில்
நமது புத்தகங்கள்
தொடர்ந்து எரிகின்றன.

மிஞ்சிய ஒருகையில்
பேனாவை எடுக்கிறேன்
மிஞ்சிய ஒருகால்
பள்ளிக்கூடம் நோக்கிபோகிறது
காயப்பட்ட தேகம்மீது
குருதியுறிய வெள்ளைச்சீருடையை
கழுவி உலர்த்;தி
அணிந்திருக்கிறேன்.

கூடு உடைந்ததிற்காகவும்
நிழல் கிழிந்ததிற்காகவும்
முல்லைத்தீவின் அழுகை
அடங்காது எரிந்தது.
__________________________________________
பின்குறிப்பு:ஆகஸ்ட் 14 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு
வள்ளிபுனம் செஞ்சேலைவளாகத்தில்
இலங்கை வான்படை கீபீர்விமானம் குண்டு வீசி
தாக்கியதில் 53 மாணவிகள் கொல்லப்பட்டனர்.125க்கும்
மேற்பட்டோர் காயமடைந்தனர்.

No comments: